Last Updated : 23 Apr, 2015 02:37 PM

 

Published : 23 Apr 2015 02:37 PM
Last Updated : 23 Apr 2015 02:37 PM

ஆம் ஆத்மி பேரணியின்போது விவசாயி தற்கொலை: கேஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக, காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

விவசாயி தற்கொலை சம்பவம் தொடர்பாக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ், பாஜக சார்பில் டெல்லியில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

காங்கிரஸ் தொண்டர்கள் கேஜ்ரி வாலின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீ ஸாருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாஜக சார்பில் கேஜ்ரிவாலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தற்கொலைக்கு முயன்ற விவசாயியை ஆம் ஆத்மி தலைவர்கள் காப்பாற்ற தவறிவிட்டனர் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

விவசாயி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்

இதனிடையே தற்கொலை செய்துகொண்ட ராஜஸ்தான் மாநிலவிவசாயி கஜேந்திர சிங்கின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியபோது, மரத்தில் ஏறி தூக்கிட்டுக்கொண்ட அவரை காப்பாற்ற கட்சித் தொண்டர்கள் கடும் முயற்சி செய்தபோதிலும் பலன்தரவில்லை. கட்சித் தலைவர்கள் மன்றாடி கேட்டபோதிலும் டெல்லி போலீஸார் உதவிக்கு வரவில்லை.போலீஸார் தான் விவசாயி மரணத்துக்கு காரணம்.

நடந்த சம்பவம் கேமராக்களில் பதிவாகி உள்ளது.அதன் மூலம் உண்மை வெளிவரும். போலீஸார் நடந்துகொண்டவிதம் ஈவிரக்கமற்றது.டெல்லி போலீஸ் துறையை தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மத்தியஅரசு, இட்டுக்கட்டி விவசாயி தற்கொலை தொடர்பாக ஆம் ஆத்மி மீது வழக்கு பதிவு செய்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.

டெல்லி போலீஸ் குற்றச்சாட்டு

இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸார் பதிவு செய் துள்ள முதல் தகவல் அறிக்கையில், ஆம் ஆத்மி கட்சியினர் விவசாயியை காப்பாற்ற விடாமல் தடுத்தனர், அவர்கள் தற்கொலைக்கு முயன்ற போது கைகளை தட்டி உற்சாகப் படுத்தினர் என்று குறிப்பிடப்பட் டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர் பாக உள்துறை அமைச்சகத்துக்கும் டெல்லி போலீஸார் அறிக்கை அளித்துள்ளனர்.

பிரதமர் ஆலோசனை

விவசாயி தற்கொலை விவகாரம் பற்றி மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு, நிதின்கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விவசாயி உடல் சொந்த ஊரில் தகனம்

டவ்சா (ராஜஸ்தான்) டெல்லியில் தற்கொலைசெய்துகொண்ட ராஜஸ்தான் மாநில விவசாயி கஜேந்திர சிங்கின் உடல் அவரது சொந்த கிராமத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.

அவரின் இறுதிச் சடங்கில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர் விவசாயி கஜேந்திர சிங்கின் மகன் பிட்டு (12) இறுதிச்சடங்குகளை செய்தார்.

முன்னதாக கஜேந்திர சிங்கின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.

விவசாயி குடும்பத்துக்கு ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் தரப்பில் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தரப்பில் ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என்று மாநில சமூக நீதித்துறை அமைச்சர் அருண் சதுர்வேதி அறிவித்தார்.

மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறும்போது, எந்த வழியிலாவது கஜேந்திர சிங் குடும்பத்துக்கு கட்சி உதவி வழங்கும் என்று உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x