Last Updated : 11 Mar, 2015 10:04 AM

 

Published : 11 Mar 2015 10:04 AM
Last Updated : 11 Mar 2015 10:04 AM

வன விலங்கு கடத்தலைத் தடுக்க இன்டர்போலுடன் ஒப்பந்தம்: வன உயிரினங்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு அமைப்பு முயற்சி

புலி, யானை, காண்டாமிருகம், எறும்புதின்னி, கடல் குதிரை, கடல் ஆமை, கடல் அட்டை, நட்சத்திர ஆமை, திமிங்கலம் உள்ளிட்ட உயிரினங்களின் உறுப்புகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க, சர்வதேச காவல்துறையான இன்டர்போல் அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ‘மத்திய வன உயிரினங்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு அமைப்பு’ (டபிள்யூ.சி.சி.பி) திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் டபிள்யூ.சி.சி.பி. அதிகாரிகள் கூறியதாவது: ‘எறும்புதின்னி மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் அவற்றின் உறுப்புகள் வட கிழக்குப் பகுதிகள் வழியாக சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. சீன ஆயுர்வேத மருத்துவத்தில் ஆண்மை சக்திக்கான மருந்து தயாரிப்பில், எறும்புதின்னி மற்றும் திமிங்கலத்தின் உறுப்புகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.

இக்கடத்தலை சர்வதேச காவல்துறை உதவியின்றி தடுக்க முடியாது என்பதால், அவர்களுடன் முதல்கட்டமாக ஓரிரு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது” என்றனர்.

தமிழக கடல் ஆமைகள்

தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையே பவளப்பாறைகள் அதிகம் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் கடல் ஆமைகள் அதிகம் வசிக்கின்றன. இவை தமிழகத்தில் இருந்து கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.

சர்வதேச புள்ளிவிவரத்தின்படி, கடந்த 1990-99 காலகட்டத்தில், 2,074 ஆமை உறுப்பு கடத்தல்கள் பிடிபட்டுள்ளன. 2000-13 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 20,500 ஆக அதிகரித்துள்ளது. வடகிழக்குப் பகுதிகளில் கடந்த 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை சுமார் 3,500 எறும்புதின்னி கடத்தல்கள் பிடிபட்டுள்ளன.

2-வது இடத்தில் இந்தியா

ஆண்டுக்கு சராசரியாக 70,000 டன் எடையுள்ள திமிங்கல உறுப்புகள் இந்தியாவிலிருந்து கடத்தப்படுவது அப்புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது. திமிங்கல உறுப்புகள் கடத்தலில் இந்தோனேஷி யாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தை வகிக்கிறது.

கடல் ஆமை வகைகளில் ஆண்டுக்கு 10,000 முதல் 15,000 கடல் ஆமைகள் அல்லது உறுப்புகள் இந்தியாவிலிருந்து வெளி நாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன.

அரிய வகை பறவைகள் ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் என்ற அளவில் அழிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது. வன மற்றும் கடல்வாழ் உயிரின கடத்தலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் டபிள்யூ.சி.சி.பி. அமைப்புக்கு இன்டர்போல் அமைப்பு அவ்வப்போது உதவிக்கரம் நீட்டி வந்தது. எனினும் சில சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கவும், முழு அளவில் உதவி பெறவும் இரு அமைப் புகளுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு

வன, கடல்வாழ் உயிரின கடத்தலில் தீவிரவாத அமைப்புகள் சிலவற்றுக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நிதி திரட்டும் வகையில் இக்கடத்தல் நடவடிக்கைகளை தீவிரவாத இயக் கங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன என மத்திய அரசு சந்தேகிக்கிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x