Last Updated : 17 Feb, 2015 10:34 AM

 

Published : 17 Feb 2015 10:34 AM
Last Updated : 17 Feb 2015 10:34 AM

சுதாகரன் திருமணத்துக்கு அதிமுகவினர் செலவு செய்தது ஏன்? - ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி கேள்வி

சுதாகரனின் திருமணத்துக்கு அதிமுகவினர் செலவு செய்தது ஏன்? என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞரிடம் நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன் னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதில் 3-வது நாளாக ஜெய லலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் வாதிடும்போது, “1991-96 கால கட்டத்தில் கொடநாடு, சிறுதாவூர், பையனூர், போயஸ் கார்டன் உள்ளிட்ட பல இடங்களில் ஜெயலலிதா புதிதாக கட்டிய, புதுப்பித்த கட்டிடங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. அவற்றின் அப்போதைய சந்தை ம‌திப்பு ரூ.3.62 கோடி. ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை அதனை ரூ.13.65 கோடி என மிகைப்படுத்தி மதிப்பீடு செய்துள்ளது.

கட்சியினர் செலவு செய்வார்களா?

இதேபோல் சுதாகரன் திருமணத் துக்கு ஜெயலலிதா ரூ.6.45 கோடி செலவு செய்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அப்போது தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குப்படி அவர் ரூ. 29 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளார்.

சுதாகரனின் திருமணத்துக்கான செலவில் பெரும்பகுதியை மணப்பெண்ணின் வீட்டாரான நடிகர் சிவாஜிகணேசனின் குடும் பத்தாரே செய்தனர். திருமணத் துக்கான உணவு, அலங்கார வளைவுகள், மேடை, வரவேற்பு பதாகைகள், பந்தல் உள்ளிட்ட பல வேலைகளுக்கு அதிமுகவினர் செலவு செய்தனர். இது தொடர்பாக குற்றவாளிகள் தரப்பு சாட்சி ரமணி, தான் ரூ. 15.10 லட்சம் செலவிட்டதாக‌ நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதேபோல் பலரும் செலவு செய்துள்ளனர்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “சுதாகரனின் திருமணம் ஜெய லலிதா வீட்டுத் திருமணமா? அதிமுக நிகழ்ச்சியா? கட்சியினர் எப்படி இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்வார்கள்? இதற்கு என்ன ஆதாரம் இருக் கிறது?” என கேள்வி எழுப்பினார்.

நீதிபதி மேலும் கூறும்போது, “1991-96 காலகட்டத்தில் தமிழக முதல்வ‌ராக இருந்த ஜெயலலிதா ரூ.1 மட்டுமே மாத ஊதியம் பெற்றுள்ளார். ரூ.1 ஊதியம் பெற்ற அவர் ரூ.66 கோடி சொத்து சேர்த்தது எப்படி என தெளிவான அட்டவணையுடன் வாதிடுங்கள்” என்றார்.

ஜெ.க்காக வாதிட வேண்டாம்

மதிய இடைவேளைக்கு பிறகு 3-வது நாளாக சுதாகரன், இளவரசி தரப்பு வழக்கறிஞர் சுதந்திரம் வாதிட்டார். அவரிடம் நீதிபதி, “ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் குறித்து நீங்கள் வாதிட வேண்டாம்.

சுதாகரன், இளவரசி மீதான குற்றச்சாட்டுகளை பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் தக்க ஆதாரத்துடன் வாதிடுங்கள். அவர்களது வருமானம், செலவு, சொத்துப்பட்டியல் குறித்த அட்டவணையை தாக்கல் செய் யுங்கள். தனியார் நிறுவனங்களின் சொத்துகள் பற்றி அந்த நிறுவனங்களின் வழக்கறிஞர் வாதிடட்டும்” என்று அறிவுரை வழங்கினார்.

இதையடுத்து வழக்கை புதன்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x