Published : 06 Feb 2015 09:28 AM
Last Updated : 06 Feb 2015 09:28 AM

போலி காஸ் இணைப்புகளுக்கு மானியத்தை நிறுத்தியதால் ரூ.3,948 கோடி மிச்சம்: ஆதாருக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு தகவல்

இந்தியாவில் போலி சமையல் காஸ் இணைப்புகளின் மானியம் நிறுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு ரூ.3,948 கோடி மிச்சமாகியுள்ளதாக ஆதார் கார்டுக்கு எதிரான வழக்கில் மத்திய பெட்ரோலியத் துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

சிவகாசியை சேர்ந்த வழக் கறிஞர் ஆனந்தமுருகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் விவரம் வருமாறு: இந்திய மக்களின் அடையாளத்துக்காக ஆதார் அடையாள அட்டை வழங்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, அரசின் உதவிகளைப் பெறு வதற்கு ஆதார் அடையாள அட்டை கேட்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இத்தடையை விலக்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வீட்டு உபயோக சமையல் காஸ் மானியம் பெற ஆதார் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு இணைப்புதாரர்களை எரிவாயு நிறுவனங்கள் கேட்டு வருகின்றன. இது சட்டவிரோதமாகும்.

எனவே, மானிய விலை காஸ் சிலிண்டர் பதிவு செய்ய ஆதார் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு எண் கேட்கக்கூடாது எனவும், ஏற்கெனவே உள்ள நடைமுறையை பின்பற்றவும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.தமிழ்வாணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை துணைச் செயலர் உஷாபாலா பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டிருந்ததாவது: காஸ் மானியம் நேரடியாக மக்களுக்கு கிடைக்கவும், ஒருவர் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருப்பதைத் தடுக்கவும் ஆதார் கார்டுடன் இணைந்த சமையல் காஸ் மானியத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

ஆதார் கார்டுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் தற்போது, ஆதார் கார்டு இல்லாமல் வங்கி கணக்கை மட்டும் இணைத்து காஸ் மானியம் வழங்கும் முறை அமல் படுத்தப்பட்டது. ஆதார் கார்டுடன் இணைந்த காஸ் மானியத் திட்டத்தில் சேர்ந்த 4.2 கோடி காஸ் இணைப்புகளில் ஒரு சதவீத இணைப்புகள் போலியானவை எனக் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது நேரடி மானியத் திட்டம் நாடு முழுவதும் 54 மாவட்டங்களில் அமலில் உள்ளது. இத்திட்டத்தில் மானியம் பெற ஆதார் அட்டை தேவையல்ல. மேலும், வங்கிக் கணக்கு தொடங்குபவர்களுக்கு நிரந்தர முன்பணம் காஸ் நிறுவனங்களால் செலுத்தப்படுகிறது.

தமிழகத்தில் காஸ் இணைப்பு வைத்திருக்கும் 91 சதவீத இணைப்புதாரர்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். எஞ்சிய 9 சதவீத இணைப்புதாரர்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு நடைபெறுகிறது.

பிரதமரின் அறிவிப்புக்குப் பிறகு தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட 9.47 கோடி வங்கி கணக்குகளில் 6.98 கோடி கணக்குகள் டெபாசிட் இல்லாமல் தொடங்கப்பட்டது. போலி இணைப்புதாரர்களை கண்டுபிடிக்க தனி விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இந்த முறையால் சுமார் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இணைப்புகளுக்கு மானியம் வழங்குவது நிறுத்தப்பட்டதால் அரசுக்கு கடந்த ஆண்டு ரூ.3,948 கோடி மிச்சமானது. 1.58 மில்லியன் விண்ணப்பங்கள் போலியாக தரப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட் டிருந்தது. இதையடுத்து, ஆதார் கார்டு தொடர்பான வழக்கு களில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல்களை 3 வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அமர்வு ஒத்தி வைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x