Last Updated : 22 Jan, 2015 05:35 PM

 

Published : 22 Jan 2015 05:35 PM
Last Updated : 22 Jan 2015 05:35 PM

நடாலுக்கு தோல்வி பயம் ஏற்படுத்திய ஸ்மைசெக்கின் அலாதி பெருந்தன்மை: பலரும் பாராட்டு

ஆக்ரோஷம் என்ற பெயரில் மைதானத்தில் அருவருக்கத்தக்க வார்த்தை வசைகளில் கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் நடாலுடன் விளையாடி தோற்ற அமெரிக்க வீரர் ஸ்மைசெக் அந்த ஆட்டத்தின் போது காட்டிய பெருந்தன்மை சக வீரர்கள் உட்பட ரசிகர்கள், ஆஸ்திரேலிய பொதுமக்களின் ஏகோபித்த பாராட்டுகளை ஈர்த்துள்ளது.

ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் அன்று ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் நடாலும், அமெரிக்க வீரர் டிம் ஸ்மைசெக்கும் விளையாடினர்.

இருவரும் கடுமையாக விளையாடி ஆட்டம் 5-வது செட்டிற்குச் சென்றது. அதிலும் ஸ்மைசெக் கடுமையான சவால்களை அளித்து வந்தார். அப்போது 30-0 என்று நடால் முன்னிலை வகிக்கிறார். நடால் சர்வுக்குத் தயாராகி பந்தை மேலே தூக்கிப் போடும்போது பார்வையாளர் பகுதியிலிருந்து ஒரு குரல் அவரது கவனத்தைச் சிதறடிக்குமாறு பெரிதாக ஒலித்தது. நடாலின் கவனமும் சிதறியது, அந்த சர்வை அவர் தவறாக வீசினார். அது முதல் சர்வ்தான் என்றாலும் 2-வது சர்வுக்கு வாய்ப்புள்ளது என்றாலும் கடும் நெருக்கடியில் இரண்டாவது சர்வையும் நடால் தவறாக அடிக்க வாய்ப்பு கூடவே இருந்தது.

அந்த தருணத்தில் எதிரில் இருக்கும் எந்த ஒரு வீரரும் தனது நலனையே, வெற்றியையோ முன்வைத்துச் செயல்படுவர். ஆனால், ஸ்மைசெக் என்ன செய்தார் தெரியுமா? நடால் அவரது முதல் சர்வையே மீண்டும்... அதாவது தவறாக வீசிய அந்த சர்வை மீண்டும் வீசட்டும் என்று பெருந்தன்மையாக அனுமதித்தார். இதனை நடுவர் உட்பட, நடால் உட்பட ஒருவரும் நம்பவில்லை. அவர் மீண்டும் அந்த சர்வை ஆட அனுமதி அளித்து தனது தோல்வியையும் கூட பொருட்படுத்தாமல் செயல்பட்டார் அமெரிக்க வீரர் ஸ்மைசெக்.

தொழில்பூர்வ டென்னிஸ் உலகில் உள்ள கடும் போட்டிகளுக்கு மத்தியில் ஒரு வீரர் தனது தோல்வியைப் பொருட்படுத்தாமல் தவறான காரணத்தினால் கவனமிழந்து சர்வைக் கோட்டை விட்ட நடாலுக்கு மீண்டும் அதே சர்வை ஆடுமாறு விட்டுக் கொடுத்தது பலத்த வரவேற்பைப் பெற்றது.

இது குறித்து நடால் கூறும்போது, “4 மணி நேர அயராத ஆட்டத்திற்குப் பிறகு வெகு சிலரே இப்படி பெருந்தன்மையாக நடந்து கொள்வார்கள். இருவரும் அப்போது 5-5 என்று இருக்கிறோம், அவர் வேறு 0-30 என்று பின்னிலையில் இருக்கிறார். இந்த நிலையில் அவர் என் சர்வை மீண்டும் ஆடுமாறு அனுமதித்தது மிகப்பெரிய மனது. அவருக்கு எனது நன்றிகள். இதன் மூலம் அவர் ஒரு உதாரணமாகத் திகழ்ந்துள்ளார்.

நம்பர் 1 வீரர் ஜோகோவிச் கூறும்போது, “இது ஒரு அபூர்வமான ஜெண்டில்மென் தன்மையாகும். நல்ல ஆட்ட உணர்வை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதனை மக்கள் பெரிதாகப் பேச வேண்டும். இன்றைய போட்டி நிரம்பிய உலகில் இது சாத்தியமேயல்ல. ஊடகங்கள் எப்போதும் ஆக்ரோஷம், சண்டை, பகைமை ஆகியவற்றையே முதன்மை படுத்தி வருகிறார்கள்.

ஸ்மைசெக்கின் இந்தச் செய்கை விளையாட்டை விடவும் பெரியது.” என்றார்.

சரி, ஸ்மைசெக் என்ன கூறுகிறார்? “ரசிகர் ஒருவர் சப்தம் போட்டு அவரது கவனத்தைச் சிதறடித்தது அவரை நிச்சயம் கவலைகொள்ளச் செய்திருக்கும். அதனால் நான் இப்படிச் செய்வதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்துச் செய்தேன்.” என்றார்.

காலில் தடுத்து விட்டு கூடுதலாக ரன் ஓடினார் என்று தவறான கணிப்பில் அன்று மெல்போர்னில் இந்திய வீரர் ரோஹித் சர்மாவை வாய்க்கு வந்தபடி ஏசிய டேவிட் வார்னர், ஸ்மைசெக் போன்ற வீரர்களிடம் பாடம் கற்பது நல்லது என்று அந்நாட்டு பத்திரிகைகள் கூறியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x