Published : 01 Jan 2015 08:41 AM
Last Updated : 01 Jan 2015 08:41 AM

சமரச ஆவணங்களில் தொழிற்சங்கம் கையெழுத்து: பஸ் தொழிலாளர் வேலை நிறுத்த வாபஸால் பஸ்கள் இயக்கம்

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு பஸ்களின் இயக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் போக்கு வரத்து தொழிற்சங்கத்தினர் கடந்த 4 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால், அரசு பஸ்களின் சேவை குறைந்து பொதுமக்கள் அவதிப்பட்டனர். வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். பலர் பயணத்தை ரத்து செய்தனர். இந் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சருடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்பின் தொழிலாளர் நலத்துறை சிறப்பு துணை ஆணையர் யாஸ்மின் பேகம் முன்னிலையில் போக்கு வரத்து நிர்வாகம் மற்றும் தொழிற் சங்கங்களின் பிரதநிதிகள் சமரச ஆவணங்களில் நேற்று கையொப்பமிட்டனர்.

இதுதொடர்பாக போக்கு வரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஓரிரு நாளில் குழு அமைத்தல், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது நிர்வாக ரீதியான ஒழுங்கு நடவடிக்கை இல்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோருக்கு பணியும் இல்லை, ஊதியமும் இல்லை. கைதான தொழிலாளர்களை விடுதலை செய்வது உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்றுவது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை சிறப்பு துணை ஆணையர் யாஸ்மின் பேகம் முன்பு நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

சமரசம் ஏற்பட்டதையடுத்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நேற்று காலை 11.30 மணி அளவில் வாபஸ் பெறப் பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அரசு பஸ்களின் சேவை படிப்படியாக அதிகரித்தது. பிற்பகல் ஷிப்டுக்கு தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். மாலை 4 மணிக்குமேல் பெரும் பாலான பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், கடந்த 4 நாட்களாக அவதிப்பட்டு வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களும் அதிக அளவில் இயக்கப்பட்டதால், கோயம்பேட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சொந்த ஊர் செல்பவர்கள் உற்சாகத்துடன் புறப்பட்டனர்.

குழுவில் இடம்பெறுவது யார்?

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக இதுவரை 11 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 12-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட உள்ளது. இதில் நிதித்துறை மற்றும் போக்குவரத்து துறை செயலாளர், போக்குவரத்துத் துறை தலைவர், போக்குவரத்து கழகங்களில் இருந்து 2 நிர்வாக இயக்குநர்கள், தமிழ்நாடு சாலை போக்குவரத்து நிறுவனத்தின் இயக்குநர் என மொத்தம் 6 அல்லது 7 பேர் இடம்பெறுவர் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x