Published : 05 Jan 2015 11:35 AM
Last Updated : 05 Jan 2015 11:35 AM

மீத்தேன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம்

காவிரி டெல்டா பகுதிக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தினர் நேற்று நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இத்திட்டத்துக்காக கிரேட் ஈஸ்டர்ன் எனெர்ஜி கார்பரேஷன் நிறுவனத்துடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்றோடு முடிவடைந்த நிலையில், ஒப்பந்தத்தை புதுப்பிக்கக் கூடாது என்று கோரும் டெல்டா விவசாயிகள் மற்றும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தினர் ஜன.4-ம் (நேற்று) தேதியை மீத்தேன் திட்ட எதிர்ப்பு நாளாக அறிவித்திருந்தனர்.

அதன்படி. நேற்று நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, வேதாரண்யம், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

மீத்தேன் திட்டத்துக்கு எதிராக மக்கள் இயக்கத்தை முன்னின்று நடத்திய மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலய குளக்கரையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கம் சார்பில் நம்மாழ்வாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கையெழுத்து இயக்கம் தொடங்கியது. இதில் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜி. வரதராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x