Published : 17 Dec 2014 12:17 PM
Last Updated : 17 Dec 2014 12:17 PM

பயங்கரவாதத்துக்கு பலியான பாகிஸ்தான் குழந்தைகளுக்காக இந்தியப் பள்ளி மாணவர்கள் மவுன அஞ்சலி

பாகிஸ்தான் ராணுவப் பள்ளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 132 குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரின் வார்ஸாக் சாலையில் ராணுவம் நடத்தி வரும் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் நேற்று காலை 10.30 மணி அளவில் புகுந்த தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பைச் சேர்ந்த 6 தற்கொலைப் படைத் தீவிரவாதிகள், மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இத்தாக்குதலில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியானார்கள். ராணுவ வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

மோடி கண்டனம்:

பள்ளியில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில், "தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில், பாகிஸ்தானுக்கு இந்தியா துணை நிற்கும். பாகிஸ்தான் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் இத் தருணத்தில் அந்நாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது" என தெரிவித்திருந்தார்.

மேலும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஷெரீபுடன் பேசியது தொடர்பான தகவல்களையும் மோடி ட்விட்டரில் பகிர்ந்தார்.

பள்ளிகளில் 2 நிமிட அஞ்சலி:

பாகிஸ்தானில் பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் 2 நிமிடம் அஞ்சலி செலுத்த வேண்டும் என்றார்.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 2 நிமிடம் மவுன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் அஞ்சலி:

பாகிஸ்தானில், பயங்கரவாத தாக்குதலில் பலியான குழந்தைகள் உள்பட 141 பேருக்கும் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x