Published : 25 Nov 2014 01:11 PM
Last Updated : 25 Nov 2014 01:11 PM

கவுரவக் கொலைக்கு எதிராக டிச.6-ம் தேதி உண்ணாவிரதம்: வாழ்வுரிமை இயக்கம் அறிவிப்பு

தமிழகத்தில் நடக்கும் கவுரவக் கொலைகள், சாதி கொடுமைகளுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 6-ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்போவதாக தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் சென்னை யில் நடந்தது. மாநில தலைவர் ஆர்.நல்லகண்ணு, செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒவ்வொருவரும் விரும்பியவரை திருமணம் செய்துகொள்ள முடியும். ஆனால், சாதி, மத அடிப்படையிலான அரசியல் சக்திகள், மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்படுகின்றன. சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதிகளை கவுரவக் கொலை செய்யுமாறு பெற்றோர்களை இந்த அரசியல் சக்திகள் தூண்டுகின்றன. தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் 33 சாதி மறுப்புத் தம்பதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, கவுரவக் கொலைகளை தடுக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்.

ஆசிய, பசிபிக் நாடுகளில் மகளிருக்கான பாலியல் சமத்துவம், மனித உரிமைகள் குறித்த ஐ.நா. மாநாடு பாங்காக்கில் சமீபத்தில் நடந்தது. ‘சாதியப் பெயரால் நடக்கும் ஒடுக்குமுறைகளை தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று அதில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதில் ‘சாதி’ என்ற சொல்லை நீக்கிவிட்டு ‘சமூக படிநிலை’ என்ற சொல்லை பயன்படுத்தினால் போதும் என்று இந்திய அமைச்சர்கள் கூறியிருக்கின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பாதிக்குமோ என்ற அச்சம் மக்களிடம் நிலவுகிறது. இவற்றை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6-ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x