Published : 07 Nov 2014 08:56 AM
Last Updated : 07 Nov 2014 08:56 AM

கடைகளுக்கு நேரில் சென்று திருட்டு சி.டி. சோதனை நடத்த நடிகர்களுக்கு அதிகாரம் இல்லை: அதிகாரிகள் தகவல்

சி.டி. கடைகளுக்குச் சென்று சோதனை செய்ய நடிகர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவர்கள் தங்கள் படத்துக்கு விளம்பரம் தேட இவ்வாறு செய்கின்றனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

விஷால் நடித்த ‘பூஜை’ படம் சமீபத்தில் வெளியானது. படம் வெளிவந்த சில நாட்களில் நடிகர் விஷால் மற்றும் துணை நடிகர்கள் சிலர் பொள்ளாச்சி, திருப்பூர் பகுதிகளில் உள்ள சி.டி. கடைகளுக்கு சென்றனர். இங்கு திருட்டு சி.டி. விற்கிறார்கள் என்று அங்கேயே பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தனர். இவர்களைப் பார்க்க ஏராளமானோர் கூடியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

நடிகர் பார்த்திபனும் சமீபத்தில் இதுபோல் செய்தார். தனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் திருட்டு சி.டி. விற்கப் படுகிறதா என்று சென்னையில் பர்மா பஜார் கடைகளில் முதலில் தன் உதவியாளர் மூலமாக சோதனை செய்தார். பிறகு அவரே நேரில் சென்று சோதனை நடத்தினார். பிரபல நடிகர் கள் நேரடியாக களமிறங்குவது பொதுமக்கள், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

புகார் கொடுக்காதது ஏன்?

பிரபல நடிகர்கள் இப்படி செய்வது சரியா என்பது குறித்து கேட்டதற்கு, வழக்கறிஞர் பாரதி கூறியதாவது:

சோதனை நடத்துவதற்கான முன்அனுமதி ஆணையை (ஸர்ச் வாரன்ட்) முறைப்படி பெற்றுக் கொண்டுதான் போலீஸ் அதிகாரி களேகூட சோதனை நடத்து கின்றனர். கடைகளில் திருட்டு சி.டி. விற்கப்படுவது நடிகர்களுக்கு தெரியவந்தாலும், அவர்கள் போலீஸில்தான் புகார் கொடுக்க வேண்டும். பரபரப்பை ஏற்படுத் தவே நடிகர்கள் நேரில் சென்று சோதனை நடத்துகின்றனர். அவ் வாறு சோதனை செய்ய அவர் களுக்கு அதிகாரம் கிடையாது.

இணையத்தில் நியூ மூவீஸ் என்று டைப் செய்தால் தற்போது வெளியாகியுள்ள கத்தி வரை அத்தனை புதுப் படங்களையும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நடிகர்களுக்கு இது தெரியாதா? திருட்டு சிடியை ஒழிக்க விரும்பும் நடிகர்கள் முதலில் இந்த இணையதளங்கள் மீது சைபர் கிரைமில் புகார் கொடுத்து, அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நடிகர்கூட இதை செய்யவில்லையே. தங்கள் படத்துக்கு விளம்பரம் தேடுவதற்காக மட்டுமே நடிகர்கள் சி.டி. கடைக்குச் செல்கின்றனர்.

இவ்வாறு பாரதி கூறினார்.

திருட்டு சி.டி. ஒழிப்பு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘கடைகளுக்குச் சென்று சோதனை செய்ய நடிகர்களுக்கு அதிகாரம் கிடையாது. அது போலச் சென்று, திருட்டு சி.டி. தயாரிப்பாளர்கள் தாக்குதலில் இறங்கிவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். அதனால், இனி இதுபோலச் செய் யாதீர்கள் என்று 2 பிரபல நடிகர் களை அழைத்து அறிவுரை கூறி அனுப்பிவைத்தோம்.

நடிகர்கள் நேரடியாக கடைகளுக்குச் செல்வதால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகுமே தவிர, திருட்டு சி.டி.யை ஒழிக்கமுடியாது. சினிமா துறையை சேர்ந்த ஒருசிலரின் நேரடி உதவியால்தான் திருட்டு சி.டி. தயாரிக்கப்படுகிறது. சினிமா துறையினர் அதை கண்டுபிடித்து முதலில் தடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x