Published : 02 Oct 2014 11:59 AM
Last Updated : 02 Oct 2014 11:59 AM

செல்போனில் ஆபாச வீடியோ பார்த்த போலீஸ் அதிகாரி: பாதுகாப்பு பணியின்போது அலட்சியம்

ஆந்திர மாநிலத்தில் திருவிழா பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், தனது செல்போனில் ஆபாச வீடியோ காட்சிகளை பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விஜயவாடாவில் புகழ்பெற்ற கனக துர்கையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இப்போது நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மூல நட்சத்திர திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் அம்மனை தரிசிப்பதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அப்போது கோயிலுக்கு அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூர் குற்றப்பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வரபிரசாத், தனது செல்போனில் ஆபாச வீடியோ காட்சிகளை பார்த்து ரசித்து கொண்டிருந்தார். இது கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இவருக்கு முன்பு சற்று தொலைவில் இரண்டு மகளிர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததும் அதில் பதிவாகி உள்ளது. இதனைக் கண்ட தேவஸ்தான அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து விஜயவாடா நகர போலீஸ் கமிஷனருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் விசாரணைக்கு உத்தர விட்டுள்ளார்.

இந்தத் தகவல் ஊடகங்களில் பரவியதால், பக்தர்கள் கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அந்த இன்ஸ்பெக்டரை பணியிலிருந்து நீக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பக்தர்கள் புனிதமாகக் கருதும் கோயிலுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீஸ் அதிகாரியே இதுபோன்ற கீழ் தரமான செயலில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x