Published : 03 Sep 2014 12:00 AM
Last Updated : 03 Sep 2014 12:00 AM

நீதிமன்றத்தில் ஆஜராக நித்யானந்தாவுக்கு விலக்கு

கோயம்புத்தூர் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நித்யானந்தா இன்று ஆஜராக விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் செய்தியாளர்களுக்கு நித்யானந்தா பேட்டியளித்த போது, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தொடர்பாக சில கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நித்யானந்தாவுக்கு எதிராக கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ஜுன் சம்பத் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் விசாரணைக்காக செப்டம்பர் 3-ம் தேதி (இன்று) நித்யானந்தா ஆஜராக வேண்டுமென்று கடந்த ஜூலை 30-ம் தேதி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா மனு தாக்கல் செய்தார். அர்ஜுன் சம்பத்துக்கு எதிராக அவதூறான கருத்து எதையும் நான் தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை நீதிமன்றம் சம்மன் பிறப்பித்திருப்பது சரியல்ல. ஆகவே, கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை ரத்து செய்ய வேண்டும். கோவை நீதிமன்றத்தில் நான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நித்யானந்தா தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீது அண்மையில் விசாரணை மேற்கொண்ட நீதிபதி கே.பி.கே.வாசுகி, கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து நித்யானந்தாவுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அர்ஜுன் சம்பத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x