பார்வையற்ற, காது கேட்காத நாயைப் பராமரிக்க ரோபாவை வடிவமைத்த இளைஞர்

பார்வையற்ற, காது கேட்காத நாயைப் பராமரிக்க ரோபாவை வடிவமைத்த இளைஞர்
Updated on
1 min read

லக்னோவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய பார்வையற்ற, காது கேட்காத நாயைக் கவனித்துக் கொள்ளத் தனி ரோபோவை வடிவமைத்துள்ளார். அவரின் மனிதநேயச் செயலுக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

லக்னோவைச் சேர்ந்த இளம் ரோபோ வடிவமைப்பாளர் மிலிந்த் ராஜா. இவர் கரோனா பொது முடக்கக் காலத்தில் தெருவில் ஒரு நாயைப் பார்த்துள்ளார். கடும் கட்டுப்பாடுகள் காரணமாக நாய் உணவில்லாமல் அவதிப்பட்டு வந்தது. இதைக் கண்டதும் நாயைத் தனது வீட்டுக்கு எடுத்து வந்தார் மிலிந்த்.

இதுகுறித்து மேலும் ஏஎன்ஐ நிறுவனத்திடம் பேசியவர், ''நாட்கள் செல்லச் செல்ல நாயிடம் வித்தியாசத்தை உணர்ந்து, அதனைக் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அப்போதுதான் நாய்க்குக் கண் பார்வையும் காது கேட்கும் திறனும் இல்லை என்று தெரிந்தது.

அதனால் நாய்க்குச் சரியான நேரத்தில் உணவு கொடுக்கவும் கவனித்துக் கொள்ளவும் ரோபோவை வடிவமைத்தேன். அது நான் இல்லாத நேரங்களில் நாயை முழுமையாகப் பராமரித்து வருகிறது'' என்று மிலிந்த் தெரிவித்தார்.

அவரின் செயலுக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in