Published : 27 Nov 2020 04:27 PM
Last Updated : 27 Nov 2020 04:27 PM

உ.பி. அரசு மருத்துவமனையில் சிறுமியின் சடலத்தைக் கடித்த தெரு நாய்: அதிர்ச்சி வீடியோ

சம்பால்

உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுமியின் சடலத்தைத் தெரு நாய் கடிப்பது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக வெளியான 20 விநாடிக் காணொலியில், மருத்துவமனையின் தனிமையான பகுதி ஒன்றில், ஸ்ட்ரெச்சரில் ஓர் உடல் கிடத்தப்பட்டுள்ளது. வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்த சடலத்தை ஒரு நாய் தொடர்ச்சியாக, மெல்லக் கடிக்கிறது.

சாலை விபத்தொன்றில் சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்தாரா அல்லது மருத்துவமனையில் உயிர் பிரிந்ததா என்று தெரியவில்லை.

இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சிறுமியின் தந்தை சரண் சிங், 1.5 மணி நேரமாக மகளின் உடல் கண்டுகொள்ளப்படவில்லை. இதற்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனையில் தெரு நாய்கள் தொல்லை இருப்பதை மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் மருத்துவர் சுஷில் வர்மா கூறும்போது, ''வழக்கமான நடைமுறைகளுக்குப் பிறகு உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடற்கூராய்வு செய்ய வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார்கள். அப்போது சடலத்தின் அருகே யாரும் இல்லாதபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம்'' என்று தெரிவித்தார்.

இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள சமாஜ்வாதி கட்சி, ''இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளது.

— Samajwadi Party (@samajwadiparty) November 26, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x