Last Updated : 22 May, 2020 01:25 PM

 

Published : 22 May 2020 01:25 PM
Last Updated : 22 May 2020 01:25 PM

குடும்பத்தில் பிரச்சினையை உண்டாக்கிய கூகுள் மீது நடவடிக்கை எடுங்கள்: மயிலாடுதுறை போலீஸுக்கு வந்த விநோதப் புகார்

'கூகுள் மேப் தவறான தகவல்களைக் காட்டியதால் எனது குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதனால் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றொரு விநோதப் புகாரை போலீஸுக்குக் கொண்டு போயிருக்கிறார் ஒரு குடும்பஸ்தர்.

மயிலாடுதுறை லால் பகதூர் நகரைச் சேர்ந்தவர் ஆர்.சந்திரசேகரன். இவர் மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் வணிக நிறுவனம் நடத்தி வருகிறார். சந்திரசேகரன் தினமும் தனது நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியதும் அவரது செல்போனை வாங்கி, அதில், கூகுள் மேப்பின் ‘யுவர் டைம் லைன்’ என்ற செயலியை ஆராய்வதை அவரது மனைவி வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்தச் செயலி நாம் எங்கெங்கு சென்று வந்தோம் என்பதை துல்லியமாகக் காட்டிவிடும்.

அப்படி சந்திரசேகரன் மனைவி பார்க்கும்போது பல நேரங்களில் கூகுள் மேப், சந்திரசேகரன் செல்லாத இடங்களுக்குக்கூட சென்றுவந்ததாகக் காட்டியுள்ளது. இதனால் அவரது மனைவிக்கு சந்திரசேகரன் மீது சந்தேகம் ஏற்பட்டது. தூக்கம் இல்லாமல் அதைப் பற்றிய சிந்தனையோடே இருந்திருக்கிறார். இதனால் கணவன் - மனைவி இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குடும்பத்தின் நிம்மதியும் பாதிக்கப்பட்டது. இவர்களது குடும்பத்தினரும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். கடைசியாக, கடந்த 20-ம் தேதி சந்திரசேகரன் மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தாக கூகுள் மேப் காட்டியுள்ளது.

ஆனால், தான் அங்கெல்லாம் செல்லவில்லை என்று சந்திரசேகரன் கூறியிருக்கிறார். ஆனாலும், கூகுள் மேப்பை உறுதியாக நம்பிய அவரது மனைவி தனது கணவரை நம்ப மறுத்திருக்கிறார். இது தொடர்பாக குடும்ப உறவினர்கள், மனநல மருத்துவர்கள் என பல தரப்பினரும் வந்து சமாதானப்படுத்தினாலும் ஆலோசனைகள் கூறினாலும் அவரது மனைவி அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தார் சந்திரசேகரன்.

இதையடுத்து, தவறான தகவல்களைக் காட்டியதால் தனது குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்திய கூகுள் நிறுவனம் மீது புகார் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி, தனது அலைபேசியில் உள்ள கூகுள் மேப் பதிவுகளை இணைத்து, கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு உரிய நீதி வழங்கவும், நஷ்ட ஈடு கோரியும் (தொகை குறிப்பிடவில்லை) மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சந்திரசேகரன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x