ம.பி. இந்தூர் மருத்துவர் கரோனாவுக்கு மரணம்: சுய-மருத்துவம்தான் காரணம் என உறவினர்கள் வேதனை

ம.பி. இந்தூர் மருத்துவர் கரோனாவுக்கு மரணம்: சுய-மருத்துவம்தான் காரணம் என உறவினர்கள் வேதனை
Updated on
1 min read

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் மருத்துவர் சத்ருகன் பஞ்ச்வானி கரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்தது. இந்நிலையில் ஸ்ரீ அரபிந்தோ மருத்துவமனையில் வியாழனன்று அவர் உயிர் பிரிந்தது. இவருக்கு வயது 62.

2 வாரங்களுக்கு முன்னரே இவருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டுள்ளன, ஆனால் 2 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு கோவிட்-19 பாசிட்டிவ் என்று தெரியவந்தது. இந்த மருத்துவருக்கு தீவிர நீரிழிவு, ரத்தக்கொதிப்பு நோய்கள் இருந்ததாக அவரது உறவினர்கள் தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றில் தெரிவித்தனர்.

இவர் தனியார் மருத்துவமனையில் காட்டிய போது அந்த மருத்துவரிடம் கோவிட்-19 தொற்று உள்ள நோயாளிகள் இருவர் தன்னிடம் ஆலோசனைக்கு வந்ததாகத் தெரிவித்தார், ஆனால் அதனால் வந்திருக்குமோ என்று ஐயம் வெளியிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் இவை இவை என்று அரசாங்கம் கடுமையாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையிலும் ஒரு மருத்துவர் மருத்துவமனைக்குச் செல்லாமல் தானே சுய மருத்துவத்தில் ஈடுபட்டதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்தூரில் இவர் சேர்ந்த தனியார் மருத்துவமனை லேசான கோவிட்-19 நோய் குறிகுணங்களுக்கானது, இந்த மருத்துவமனையில் இவருக்கு வெண்ட்டிலேட்டர் வசதியும் இல்லை. இதனையடுத்து நல்ல தனியார் மருத்துவமனையில் இவரைச் சேர்க்க முற்பட்டனர்.

ஆனால் ஒரு பெரிய மருத்துவராக உள்ளூரில் 30 ஆண்டுகள் சேவையாற்றியும் அந்த தனியார் மருத்துவமனையில் இவரை அனுமதிக்க கடும் சவால்களைச் சந்திக்க நேரிட்டுள்ளது. ஏற்கெனவே இந்த மருத்துவமனையில் கோவிட்-19 நோயாளி நெரிசல் அதிகம் இருப்பதாலும், இவருக்கு நோய் அறிகுறிகள் லேசானதாக இருந்ததாலும் வெண்ட்டிலேட்டர் வைக்கப்படவில்லை. பிறகு பாஜக எம்பி ஒருவர் மருத்துவமனைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிறகு மருத்துவர் சதுருகன் பஞ்ச்வானி வெண்ட்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.

ஏப்ரல் 8ம் தேதி இவரது மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தன அதில் இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இவரது உடல்நிலை மோசமடைய அரபிந்தோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கு அவரை காப்பாற்ற முடியாத அளவுக்கு தொற்று தீவிரமடைந்துள்ளது.

இதனையடுத்து அவர் உயிர் நேற்று பிரிந்தது. அவரது உறவினர்கள் கூறுவதை வைத்துப் பார்க்கும் போது, தனக்கு ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று கூறிக்கொண்டே சுயமருத்துவம் பார்த்துக் கொண்டதில் ஒருவார காலம் வீணடிக்கப்பட்டது என்றனர் வேதனையுடன்.

இறந்த மருத்துவர் பஞ்ச்வானியின் மனைவி மற்றும் 3 மகன்கள் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்டனர். சுய மருத்துவம் ஒரு மருத்துவராக இருக்கும் போதே எவ்வளவு ஆபத்தானது என்று இதன் மூலம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய நேரம், அதுவும் கோவிட்-19 காய்ச்சல் பரவல் காலக்கட்டத்தில் ஆதாரமற்ற சிகிச்சை முறைகளில் நாமாகவே ஈடுபடுவது நம் உயிருக்கு மட்டும் ஆபத்தானதல்ல என்பதோடு பிறர் உயிருக்கும் ஆபத்து என்பதை உணர வேண்டிய நேரம் இது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in