மரணப் படுக்கையில் 4 மகன்களுடன் 'கடைசி' பீர்; 87 வயது முதியவரின் ஆசை நிறைவேறியது: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

மரணப் படுக்கையில் 4 மகன்களுடன் 'கடைசி' பீர்; 87 வயது முதியவரின் ஆசை நிறைவேறியது: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
Updated on
1 min read

ஆசை மனிதனுடன் கடைசி வரை ஒட்டிவரும் உணர்வு. அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தைச் சேர்ந்த 87 வயது முதியவர் ஒருவரின் கடைசி ஆசை சற்று விநோதமாகவே இருந்தது. அந்த கடைசி ஆசையை அவருடைய 4 பிள்ளைகளும் சேர்ந்து நிறைவேற்றி வைத்தனர்.

ஏன் கடைசி ஆசை எனக் குறிப்பிட வேண்டும் எனக் கேட்கிறீர்களா? அவர், உடல்நலம் குன்றி தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார் நாபர்ட் ஸ்கீம் என்ற அந்த 87 வயது முதியவர்.

மருத்துவமனையில் இறுக்கமான சூழ்நிலையில் இருந்த அவரிடம் உங்களின் ஆசை என்னவென்று மகன்கள் கேட்க, எனக்கு உங்கள் நால்வருடனும் இணைந்து கடைசியாக ஒரு பாட்டில் பீர் அருந்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அந்தத் தருணத்தை அவரது பேரன் ஆடம் ஸ்கீம் கேமராவுக்குள் அடக்கி அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்தார். ஆனால் அவர் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்தபோது அவரின் தாத்தா உயிருடன் இல்லை.

கையில் சிறிய பீர் பாட்டிலுடன் மகன்களுடன் சேர்ந்து புன்னகைக்கும் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து "எனது தாத்தா நேற்றிரவு மறைந்துவிட்டார். அவரின் விருப்பம் தனது மகன்களுடன் கடைசியாக ஒரு பீர் குடிக்க வேண்டும் என்பதாகவே இருந்தது" எனப் பதிவிட்டிருந்தார்.

அவர் பகிர்ந்த அந்த புகைப்படம் சில நிமிடங்களில் 3,20,000 லைக்குகள், 31,000-க்கும் மேலான ரீட்வீட்கள் என்று வரவேற்பைப் பெற்று வைரலானது.

நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த இது போன்ற அனுபவத்தைப் பகிர்ந்தனர். ஆடம் ஸ்கீமுக்கு இரங்கலைத் தெரிவித்ததோடு தங்களின் அனுபவங்களையும் சேர்த்துப் பகிர்ந்தனர்.

உணர்வுப்பூர்வமான விஷயங்கள் சமூக வலைதளங்களில் அதிவேகமாக வைரலாகத் தவறுவதில்லை என்பதற்கு இந்தப் புகைப்படம் மற்றுமொரு எடுத்துக்காட்டு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in