Published : 08 Nov 2019 01:54 PM
Last Updated : 08 Nov 2019 01:54 PM

கேரளாவில் ஒரேநாளில் பிறந்த 4 சகோதரிகளுக்கு ஒரேநாளில் திருமணம்

கேரளாவில் ஒரேநாளில் பிறந்த நான்கு சகோதரிகள் தற்போது ஒரேநாளில் திருமணம் செய்யவிருக்கும் சுவாரஸ்யமான நிகழ்வு நடக்கவுள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவர் சிறு வர்த்தகர் பிரேம் குமார். இவரது மனைவி ரமாதேவிக்கு 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தன. இதில் 4 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை.

ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்ததால் இக்குடும்பம் கேரளாவில் பிரபலம். இதன் காரணமாக ஊடக வெளிச்சமும் அக்குடும்பத்தின் மீது விழுந்தது.

அக்குழந்தைகளுக்கு தந்தை பிரேம் குமார் உத்ராஜா, உத்தாரா, உத்தமா, உத்தரா, உத்ராஜன் என்று பெயரிட்டார். இதனைத் தொடர்ந்து அந்தக் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான ஆடை, ஒரே மாதிரியான பை என அனைத்தையும் ஒரே மாதிரியாக வாங்க அவர்களது குடும்பத்தினருக்கு சற்று சிரமமாகவே இருந்திருக்கிறது.

இந்த சூழலில் பிரேம் குமாரின் மனைவி இதய நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து குடும்பம் நிதி நெருக்கடிக்கு ஆளானது.

இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு மனைவியையும், குழந்தைகளையும் தனியாகவிட்டு பிரேம் குமார் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் கேரளாவையே சோகத்தில் ஆழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து அக்குழந்தைகளின் தாய்க்கு அரசு வேலை கிடைக்க, தனது குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்டு தனது குழந்தைகள் அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கினார்.

தற்போது அந்த நான்கு பெண் குழந்தைகளுக்கும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரேநாளில் திருமணம் நடைபெறவுள்ளது. நான்கு பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம் செய்வது அவர்களது தந்தையின் கனவு. அந்த கனவு தற்போது நினைவாக போகிறது. இவர்களது திருமணம் குருவாயூர் கோயிலில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நான்கு சகோதரிகளின் திருமணம்தான் தற்போது கேரளாவில் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்படும் செய்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x