Published : 07 May 2014 08:50 AM
Last Updated : 07 May 2014 08:50 AM

2ஜி வழக்கு: பிரதமரின் ஒப்புதல்படியே செயல்பட்டேன்: நீதிமன்றத்தில் ஆ.ராசா சாட்சியம்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதல்படியே செயல்பட்டேன், நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தெரிவித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா, கனிமொழி, தயாளு, அமிர்தம் உள்ளிட்ட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிபிஐ தரப்பில் 153 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது. அவர்களுக்கு 1,718 கேள்விகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டிருந்தது. சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி முன்பு ஆ.ராசா நேரில் ஆஜராகி கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதிலளித்தார். பெரும்பாலான கேள்விகளுக்கு “தெரியாது” என்று பதிலளித்தார். சில கேள்விகளுக்கு, “முன்னுரிமை அடிப்படையில் உரிமம் வழங்கப்பட்டது, ஒதுக்கீட்டு கொள்கையை முடிவு செய்வது வேறு அமைப்பு. அதற்கும் எனக்கும் தொடர்பில்லை” போன்ற பதில்களை தெரிவித்தார்.

“நான் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை. தொலைத்தொடர்புத் துறையின் பரிந்துரைகள், சக கேபினட் அமைச்சர்கள், அன்றைய சொலிசிட்டர் ஜெனரலின் ஆலோசனைகளின் படியும் பிரதமர் மன்மோகன் சிங்கின் முறையான ஒப்புதலுடன்தான் செயல்பட்டேன்” என்று ஆ.ராசா கூறினார்.

விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடுத்தடுத்து சாட்சியம் அளிக்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x