Published : 23 Sep 2017 05:47 PM
Last Updated : 23 Sep 2017 05:47 PM

நிலத்தடி நீரைச் சேமிக்க பனை விதைகள் நட்டு கோவையில் இளைஞர்கள் புது முயற்சி!

ஒரு கிணற்றை சுற்றி பத்து பனை மரம் இருந்தால் கடைசிவரை அந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றாது,. வற்ற விடாது. அந்த பனை மரம் கழுத்து முறிந்து சாகிறதென்றால் உன் நாடு பாலைவனமாக மாறி கொண்டிருக்கிறது என்பதை நீ புரிந்துகொள் - நம்மாழ்வார்.

பனை அழிந்தால் பாலைவனம் என்றார் நம்மாழ்வார். அவரின் வழியில் செயல்பட்டு வரும் கோவை இளைஞர்கள், இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நிலத்தடி நீரைச் சேமிக்கவும் அழிந்துவரும் பனைமரங்களைக் காக்கவும் கோயம்புத்தூர் இளைஞர்கள் எலச்சிபாளையத்தில் பனை விதைகளை நட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுநல நோக்கில் பனை விதைகள் நட்டுவரும் இளைஞர்களில் ஒருவராக கிருஷ்ணராஜிடம் பேசினேன். ''என்னுடைய சொந்த ஊர் திருப்பூர். விவசாயத்தில் ஆர்வம் கொண்டு முகநூலில் பதிவுகள் இட்டு வந்ததால் சில நண்பர்களின் தொடர்பு கிடைத்தது.

அவர்கள் மூலம் கோவை நண்பர்கள் தோட்டங்கள், குளக்கரைகளில் பனை விதைகளை நட்டு வருகிறோம். சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு 5,000 பனை விதைகளை கோவையைச் சார்ந்த சுற்றுவட்டாரங்களில் நட்டோம்.

தற்போது 1 வாரத்துக்கு முன்பு ராமேஸ்வரம் சென்று, 8,000 பனை விதைகளை வாங்கினோம். அவற்றில் 1,000 விதைகளை நட்டுவிட்டோம். மீதமுள்ள 7,000 பனை விதைகளை எலச்சி பாளையத்தில் நாளை (ஞாயிறு - 24.09.2017) காலை 6 மணிக்கு நட உள்ளோம்.

பனை மரத்தின் மீது ஆர்வம் ஏற்பட முக்கியக் காரணம், எவ்வளவு நீரானாலும் அதனால் சேகரித்து வைக்கமுடியும் என்பதே. பனை மரமே கருகி விட்டதெனில், நிலம் பாலைவனமாகும் என்றார் நம்மாழ்வார்.

சுமார் 1500 அடி ஆழம் வரை செல்லும் பனை நிலத்தடி நீரின் முக்கிய சேமிப்பாதாரமாக விளங்குகிறது. பனை மரம் சேகரித்து வைக்கும் நீரின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயரும். அப்படிப்பட்ட பனையே காய்ந்துவிட்டால் பூமியின் நிலை எப்படி இருக்கும் என்று யோசித்தோம். இதனால் பனை வளர்ப்பை அதிகப்படுத்த ஆசைப்பட்டோம். அதைத் தொடர்ந்து கோவையைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடன் இணைந்து பன விதைகளை நட்டு வருகிறோம்.

பனை விதைகளை நடுவது எப்படி?

கொங்கு மண்டலத்தில் பனம்பழத்தில் 3 விதைகள் இருக்கும். ராமேஸ்வரத்தில் 4 அல்லது 5. அவற்றை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அரை அடி ஆழத்துக்கு குழி தோண்டி, விதைகளை மேல் நோக்கி நடவேண்டும். 4 முதல் 5 மாதத்தில் பனங்கிழங்கு உருவாகும். பிறகு பனங்கன்று முளைக்கும். இதனை யாரும் எடுத்துச் சென்றுவிடாமல் இருக்கவே நல்ல பராமரிப்பு இருக்கும் நண்பர்களின் தோட்டங்களில் நடுகிறோம். 10 அடிக்கு ஒன்று என்ற வீதத்தில் பன விதைகள் நடப்படும்.

வாரம் முழுவதும் கணினி சார்ந்து பணியாற்றிவிட்டு, ஞாயிற்றுக் கிழமைகளில் விவசாயம் சார்ந்து பணியாற்றுவது புத்துணர்வை அளிக்கிறது. அத்துடன் இயற்கை வளத்தை மேம்படுத்தும் பனை காக்கும் பணியில் ஈடுபடுவது இன்னும் அதிக உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

தற்போது நாளை (24.09.2017) காலை 6 மணிக்கு கோவை மாவட்டம், தெக்கலூர் அடுத்த எலச்சிப்பாளையம் பகுதிகளில் 7,000 பனை விதைகள் நடவு செய்யப்பட உள்ளன. விருப்பமும் ஆர்வமும் உள்ள நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பனை காக்கும் பணி செய்யலாம்'' என்கிறார் கிருஷ்ணராஜ்.

தொடர்புக்கு:

குரு.கிருஷ்ணராஜ் - 8248493088.

எஸ்.மோகன்ராஜ் - 9942556680, 9894875850.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x