Published : 30 Aug 2017 07:01 PM
Last Updated : 30 Aug 2017 07:01 PM

மறு வாழ்வுக்குத் தயாராகும் வெள்ளத்தில் மீண்ட காண்டாமிருகக் குட்டிகள்

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சில காண்டாமிருகக் குட்டிகள் மீண்டும் உயிர்பிழைத்து மறுவாழ்வை எதிர்நோக்கியுள்ளன.

வட இந்தியா முழுவதும் மழைவெள்ளம் பெருக்கெடுக்கும் காலம் இது. அஸாம் மாநிலம் முழுதும் வெள்ளம் சூழ்ந்தபோது அங்கிருந்த காஸிரங்கா தேசியப் பூங்காவிலும் வெள்ளம் சூழ்ந்தது.

ஆகஸ்ட் 13, 2017 அன்று காலை காஸிரங்கா தேசிய பூங்காவில் திடீரென பல அடி உயரத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்து வந்தது. காண்டாமிருகக் குட்டி ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நல்லவேளையாக அருகிலிருந்த காட்டின் ஆகாயத்தாமரை செடிகளில் சிக்கிக்கொண்டது.

காட்டின் பாதுகாவலர்களும் வனவிலங்கு பாதுகாவலர்களும் மீட்புக் குழுவினரும் விலங்குகளின் தொப்புள் நரம்பு இன்னும் வெட்டப்படாத நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். காண்டாமிருகக் குட்டியும்கூட கடும் அதிர்ச்சியில் இருந்தது.

பிறந்த இரண்டே நாளில்

இந்த காண்டாமிருக ஆண் குட்டி பிறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. உண்மையில் அதன் வயது இரண்டு அல்லது மூன்று நாட்கள்தான். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது அக்குட்டி அதிஷ்டவசமாக காட்டின் ஓரம் பூஞ்செடிகளில் போய் சிக்கிக் கொண்டது.

நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதால் அடுத்த ஏழு நாட்களுக்கு முதற்கட்டமாக சலைன் நீர் ஏற்றும் சிகிச்சை நடைபெற்று வருகிறது. தற்போது குட்டி நல்லநிலைக்கு வந்துவிட்டது என்கிறார் வைல்ட்லைப் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் இணை இயக்குநர் ரத்தின் பர்மான், வெள்ளம் வந்த அந்த நாளில், மற்ற மூன்று காண்டாமிருகக் குட்டிகளும் காப்பாற்றப்பட்டன.

ஆகஸ்டு 14ல் இன்னொரு ஆண் காண்டாமிருகக் குட்டி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. பகோரி சரகத்தை யொட்டிய நா ஜான் கிராமத்தில் அந்தக் குட்டியும் மீட்கப்பட்டு ஒரு வீட்டின் கொல்லைப்புற கொட்டகையில் பாதுகாக்கப்பட்டிருந்தது. மூன்று நாட்கள் கடந்த பிறகு ஒரு பெண் காண்டாமிருகக் குட்டி ஆறு அல்லது ஏழு மாத வயது நிரம்பிய நிலையில் அருகே வெள்ள நிவாரண முகாமில் தங்கியிருந்தவர்கள் கண்ணில் பட்டது.

இதுவரையிலும் இக்குட்டியின் அம்மா எங்கேபோனது என்று தெரியவில்லையென்று அவர்கள் வருந்தினர். உள்ளூர் ஆட்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து அதன்பின் ஒரு இயங்கும் கால்நடை சேவைப் பிரிவு வந்து இந்த விலங்குகளை மீட்டுச் சென்றுவிட்டது.

இயற்கைப் பேரழிவு

ஆகஸ்ட் 11-18க்கு இடையில் இரண்டாவது முறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட ஆறு காண்டாமிருகக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. ஆற்றின் வெள்ளப்பெருக்கினால் அடித்துச்செல்லப்பட்டு மூழ்கிய விலங்குகளில் ஏறத்தாழ 85 சதவீத விலங்குகள் மீட்கப்பட்டன. சமீப காலத்தில் காஸிரங்கா தேசிய பூங்காவை பாதித்துள்ள மிகப்பெரிய பேரழிவு இது.

வெள்ளம் பெருகி வந்தநேரத்தில் பூங்காவிலுள்ள விலங்குகள் வெள்ளநீர் நெருங்கமுடியாத உயரமான ஒரு இடத்திற்கு விலங்குகள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது என்பது நன்கு தெரிந்ததுதான். ஆனால் இரண்டாவது முறை வெள்ளம் வந்தபோது ஆகஸ்ட் 12 மாலை நேரம் காஸிரங்காவில் மிதமான மழை மட்டுமே பெய்துகொண்டிருந்தபோது விலங்குகள் வெளியேற்ற குறுகிய நேரம் மட்டுமே இருந்ததுஎன பர்மான் சுட்டிக்காட்டியதை நிபுணர்களும் கூறியுள்ளனர்.

வெள்ளத்தில் உயிரிழந்த 280 விலங்குகள்

காஸிரங்கா தேசிய பூங்காவின் இயக்குநர் சத்யேந்திர சிங், இரண்டாவது வந்த வெள்ளத்தில் 280 விலங்குகள் இறந்துவிட்டதாக கூறினார். அதில் மான்கள்தான் அதிகம். கிட்டத்தட்ட 240 மான்கள் இறந்துவிட்டன. அதில் கலை மான்கள் 224. சம்பார் வகை மான்கள் 13, சதுப்புநில மான்கள் 3, 24 காண்டாமிருகங்களில் 15 காண்டாமிருகக் குட்டிகள். இந்தக் குட்டிகள் வெள்ளத்தை எதிர்கொள்ளும் வளர்ச்சி அற்றவை. நீண்ட தூரம் நீந்தி கடந்து மேட்டுப்பாங்கான இடத்தை அடையமுடியாது. அதுமட்டுமின்றி தாயை பிரிய வேண்டிய நிலையில் உயிர்வாழ்வதே கேள்விக்குறியாக மாறிவிடுகிறது என்றார் சிங்.

அருகிவரும் பிரமாண்ட தாவரப்பட்சிணியான இந்திய காண்டாமிருகங்கள் காஸிரங்கா தேசிய பூங்காவில் மட்டும் 2 ஆயிரம் எண்ணிக்கையில் உள்ளன என சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN)-ன் 2008ல் எடுத்த சர்வே தெரிவிக்கிறது.

வனத்துறையுடன் தன்னார்வ நிறுவனங்களும் உதவிபுரிந்து இந்த வெள்ளத்திலிருந்து 6 காண்டாமிருகக் குட்டிகள், 43 கலைமான்கள், 2 சதுப்புநில மான்கள், 2 பறவைகள் மற்றும் ஒரு மலைப்பாம்பு 54 விலங்குகள் மீட்கப்பட்டன என்றார் சிங்.

மூன்றாண்டுகளில் 16 குட்டிகள் மீட்பு

மீட்புக்குப் பிறகு, வனத்துறை அதிகாரிகள் மற்றும் வைல்ட் டிரஸ்ட் ஆப் இந்தியாவைச் சேர்ந்த நிபுணர்களுக்கும் இளம் விலங்குகளை பாதுகாப்பதில்தான் சவால் ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 16 காண்டாமிருகக் குட்டிகள் வெள்ளம் காரணமாக காஸிரங்கா தேசிய பூங்கா வனப்பகுதியிலிருந்து சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த பூங்காவுக்கு உட்பட்ட இடத்தில்தான் பேன்பாரி என்ற இடம் உள்ளது.

அங்குதான் அஸாம் வனத்துறையும் சர்வதேச விலங்கு மேம்பாட்டு நிதியம் மற்றும் வைல்ட் டிரஸ்ட் ஆப் இந்தியா ஆகியவற்றின் நிர்வாகத்தில் வனவிலங்குகள் மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையம் (CWRC) உள்ளது.

சிகிச்சையும் மறுவாழ்வும்

நலன்குன்றிய நிலையில் இங்கு கொண்டுவரப்படும் காட்டுயிர்கள் தகுந்த சிகிச்சைகள் பெற்று மீண்டும் மறுவாழ்வும் புத்துணர்ச்சியும் பெறுகின்றன.

2015ல் ஒன்றும் 2016ல் எட்டு என காண்டாமிருகக் குட்டிகள் உள்ளிட்டு 16 காண்டாமிருகக் குட்டிகள் இந்த மையத்தில் சிகிச்சை அளித்து உயிர் பிழைக்க வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றுமட்டும் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது.

வனவிலங்குகள் மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தில் ஒரே நேரத்தில் மூன்று குட்டிகள் வரை கவனித்துக்கொள்ள முடியும். 18 மாதங்கள் வரை பால் மட்டுமே உணவாக அளிக்க முடியும். அதன்பிறகுதான் சத்துணவுடன் கூடிய தீவனங்களும் வழங்கப்படும்.

மூன்றாண்டுகள் நிறைவடைந்த பிறகே சிகிச்சை பெறும் இந்த காண்டாமிருகக் குட்டிகள் மீண்டும் தேசிய பூங்காவில் கொண்டுபோய் விட முடியும்.

தமிழில்: பால்நிலவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x