Published : 29 Jul 2019 12:19 PM
Last Updated : 29 Jul 2019 12:19 PM

புலி உறுமுது... புலி உறுமுது... 

இன்று சர்வதேச புலிகள் தினம்

தமிழகத்தில் சோழர்கள் காலத்தை பொற்காலம் என்பார்கள். வளமையில் மட்டுமல்ல, வலிமையிலும் சிறந்தவர்கள் சோழர்கள். குறிப்பாக, ராஜராஜன், ராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழர்களின் கொடி கடல் கடந்து, பல நாடுகளிலும் பட்டொளி வீசிப் பறந்தது. இத்தகு வீரம் பொருந்திய சோழர்களின் கொடி புலிக்கொடி. அவர்களது அடையாள முத்திரை புலிச் சின்னம்.

பூனைக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், வீரத்தின் அடையாளமாய் சுட்டிக் காட்டப்படுகிறது புலி. இதன் விலங்கியல் பெயர் ‘பந்தேரா டைகரிஸ்’.  இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் வாழும் புலி, அழகிய தோற்றம்  உடையது.

இந்தியாவின் தேசிய விலங்கு!

வலிமை, விரைந்தோடும் இயல்பு, பேராற்றல் ஆகியவை புலிக்கு  இந்திய தேசிய விலங்கு என்ற பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. 1973-ல் வங்காளப் புலி (பெங்கால் டைகர்)  இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது.

ஒருகட்டத்தில் பல்வேறு காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை வெகுவேகமாக குறையத் தொடங்கியது. இதனால், புலிகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி `சர்வதேச புலிகள் தினமாக’ கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், குறிப்பாக  தமிழகத்தில் தற்போது புலிகளின் நிலை என்ன? இயற்கை ஆர்வலரும், ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவருமான க.காளிதாசனிடம் கேட்டோம்.

உயிர்ச்சூழல் வளமை...

“புலிகள் பாதுகாப்பை வலியுறுத்துவதற்காக  2010-ம் ஆண்டில் உலக புலிகள் நாள் அறிவிக்கப்பட்டது. சரி, ஏன் புலிகளைப் பாதுகாக்க வேண்டும்? அது இந்தியாவின் தேசிய விலங்கு என்பதற்காக மட்டும் பாதுகாக்க வேண்டுமா? இல்லை. புலி ஒரு வனத்தின் உயிர்ச்சூழல் வளமையைக் காட்டுகிறது. ஒரு காட்டில் அதிக எண்ணிக்கையில் புலிகள் இருந்தாலே, அது வளமையான காடு என்று கூறலாம்.

ஒரு காட்டில் 10 புலிகள் இருக்கிறது என்றாலே, அந்தக் காடு பாதுகாப்பாக இருக்கிறது என்று அறிவித்துவிடலாம். ஒரு காட்டில் புலி இருந்தால், அதற்கான வேட்டை விலங்குகள் அந்தக் காட்டில் இருக்கிறது என்று பொருள். புலியின் வேட்டை விலங்குகளில் முக்கியமானது மான். தோராயமாக ஒரு புலி ஒரு வாரத்தில் ஒரு மானைச் சாப்பிடும்.

அதேசமயம், ஒரே முயற்சியில் ஒரு மானை புலி சாப்பிட்டு விடுமா? வேட்டையில் எளிதாகவெல்லாம் மானை வெல்ல முடியாது. கிட்டத்தட்ட 20 முயற்சி களில் தான் ஒரு புலிக்கு மான் கிடைக்கும். ஏனெனில், உயிருக்கு போராடுவதற்கும், உணவுக்குப் போராடுவதற்கும் வித்தியாசம் உண்டு. உணவுக்காக துரத்தும்
வேகத்தைக் காட்டிலும், உயிருக்கு பயந்து ஓடும் வேகம் மிக அதிகமாக இருக்கும்.
க.காளிதாசன்

மான்களும்... புலியும்...

எனவே, கணிசமான எண்ணிக்கையில் இரை விலங்குகள் இருக்கும் காட்டில்தான் புலி வாழ  முடியும். ஏறத்தாழ 500 மான்களாவது இருந்தால்தான் புலி இருக்க முடியும். எனவே, நிறைய புலிகள் இருக்கும் பகுதியில், பல்லாயிரம் மான்கள் உள்ளிட்ட இரை விலங்குகள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு தாவர உண்ணிகள் இருக்கும் காட்டை, வளமான காடு என்று கருதலாம். 

எனவே, புலி இருக்கிறது என்பதே வளமான காட்டைக் குறிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் சுமார் ஒரு லட்சம் புலிகள் இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் இருந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. ஆனால்,  தற்போது உலகெங்கும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான புலிகள் மட்டுமே உள்ளன. உலகில் அதிக எண்ணிக்கையில் காட்டில் புலிகள் வசிப்பது இந்தியாவில் தான்.

ஓரிரு நூற்றாண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததற்கு, புலி வேட்டையே முக்கியக் காரணம். உலக அளவில் கள்ளக் கடத்தலில் ஆயுதங்கள், போதைப் பொருட்களுக்கு அடுத்தபடியாக வன உயிரினங்கள்தான்  முன்னிலை வகிக்கின் றன. குறிப்பாக, புலிகள் வேட்டையும், கடத்தலும் அதிகம் உள்ளன.

சீனர்களின் விருப்பம்...

உட்கொள்ளும் எல்லா மருந்திலும், புலியின் பாகங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றனர் சீனர்கள். இதுவே புலிகள் கொல்லப்பட முக்கியக் காரணம். சீனாவில் மருத்துவத் தேவைக்காக ஏறக்குறைய 5 ஆயிரம் புலிகளை வளர்க்கின்றனர். ஆனால், காட்டில் வசிக்கும் புலிகளையே அதிகம் விரும்புகின்றனர். இதுவே, பன்னாட்டுக் கடத்தல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. புலி வேட்டைக்காரர்களின் கரங்கள் இந்தியாவெங்கும் நீண்டன. புலி வேட்டை என்பது ஒரு சர்வதேச நெட்வொர்க். புலியைப் பொருத்தவரை, அதன் அனைத்துப்  பாகங்களுமே பயன்படுபவை. இதனால், புலிகளை வேட்டையாடும்போது, ஒரு பாகம்கூட மீதம் இருக்காது. 

அதேபோல, மற்றொரு முக்கியக் காரணம், கால்நடைகளை புலிகள் கொல்லும்போது, மீண்டும் பயன்படுத்துவதற்காக புலி விட்டுச் செல்லும் உடல் பாகங்களில், விஷத்தைக் கலந்துவைத்து விடுகின்றனர் கால்நடை வளர்ப்போர். மீதமுள்ள தனது இரையை சாப்பிட வரும் புலிகள், விஷம் கலந்த இறைச்சியை சாப்பிட்டு உயிரிழக்கின்றன.

மனித செயல்பாடுகளே காரணம்!

மூன்றாவது காரணம், விபத்து மற்றும் மனித செயல்பாடுகள். கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவில் 3 புலிகள் மனித செயல்பாடுகளால் உயிரிழந்துள்ளன. அண்மையில் நீலகிரியில் இறந்துகிடந்த புலியின் வயிற்றில் பிளேடு இருந்தது. பந்திப்பூரில் ஒரு புலி வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது. வடஇந்தியாவில் மனிதர்களே ஒரு புலியை அடித்துக் கொன்றனர்.

புலிகள் இறப்பதைத் தடுக்க 1972-ல் புலிகள் பாதுகாப்பு  திட்டம் (புராஜக்ட் டைகர்) அறிவிக்கப்பட்டு, புலிகள் வாழும் பகுதிகளை, புலிகள்  காப்பகமாக அறிவித்து, மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கியது. அப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதையொட்டி, மெல்ல மெல்ல புலிகளின் எண்ணிக்கை உயர்ந்தது. 

எனினும், 2000-ம் ஆண்டுகளில்  வேட்டை தொடர்ந்ததால், வட இந்தியாவில் புலிகளின்  எண்ணிக்கை குறைந்தது. இதை யடுத்து, ஒரு சிறப்பு பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டு, புலிகள் குறித்த மதிப்பீடுகள்  நடத்தப்பட்டன. 2006-ல் 1,441, 2010-ல் 1,706, 2014-ல் 2,226 புலிகள் இருப்பதாக அரசு அறிவித்தது. 2016-ல் உலக காடுகள் நிதியம் கணக்கெடுப்புபடி 3,891  புலிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது இன்னும் கொஞ்சம் அதிகரித்திருக்கும்.

புலிகள் காப்பகங்கள்...

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை குறைந்தாலும், தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம் என நான்கு புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் மூன்று புலிகள் காப்பகங்கள் மேற்கு மண்டலத்தில் உள்ளது  குறிப்பிடத்தக்கது. மேகமலையை புலிகள் காப்பகமாக அறிவிக்கும் திட்டம் நிலுவையில் உள்ளது.புலிகள் வாழ்வதற்கு அதன் வாழ்விடம் மிகவும் முக்கியமானது. 

ஒவ்வொரு புலியும் தனக்கான எல்லைக் கோட்டை வரையறுத்து வாழும். ஒரு பெண் புலி, தனக்கான வாழ்விடத்தை வரையறுக்கும். மூன்று, நான்கு பெண் புலிகள் வாழ்கிற பகுதியை, ஒரு ஆண் புலி தனக்கான வாழ்விடமாகக் கொள்ளும். புலிக்கு கிடைக்கும் இரை விலங்கைக் கொண்டே, தனது வாழ்விடத்தை தீர்மானித்துக் கொள்கிறது புலி. நிறைய இரை இருந்தால், குறைந்த இடத்தையே வாழ்விடமாக கொள்ளும். இரை குறைவாக இருந்தால், அதிக இடத்தை வாழ்விடமாகக் கொள்ளும். ஐந்து முதல் 50 சதுர கிலோமீட்டர் வரை ஒரு புலியின் வாழ்விடம் இருக்கும்.

புலிகள் சராசரியாக 15 ஆண்டுகளும் அதிகபட்சமாக 17, 18 ஆண்டுகளும் உயிர் வாழும். பெண் புலி, தனது குட்டியை இரண்டாவது வயதிலேயே துரத்திவிட்டுவிடும்.  புதிதாக பிறக்கும் குட்டிகளுக்கு வாழ்விடங்கள் தேவை. எனவே, வாழ்விடச் செழுமையைப் பொறுத்தே புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கோவை வனக் கோட்டத்தில் புலிகள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன.

ஆட்கொல்லிப் புலிகள்!

புலி வேட்டை மட்டுமல்ல, மான் வேட்டையும் புலிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும். புலிகளுக்கான இரையை மனிதர்கள் சாப்பிடும்போது, வேறு வழியின்றி கால்நடைகளைக் குறிவைக்கின்றன புலிகள். எதிர்பாராமல் மனிதர்களையும் புலிகள் கொல்கின்றன. இவ்வாறு மனிதர்களைக் கொல்லும் புலியை, ஆட்கொல்லிப்புலி என்கிறோம்.

பொதுவாகவே, புலி களைக் கண்டு நாம் அச்சம் கொள்வதுபோல, புலிகளும் மனிதர் களைக் கண்டால் மிரண்டு, ஒதுங்கியே செல்லும். அவற்றின் இரை பட்டியலில் மனிதர்கள் இல்லை. அரிதிலும் அரிதான சமயங்களில் மனிதர்கள் புலிக்கு இரையாகின்றனர். பெரும்பாலும், ஊனமுற்ற புலிகள்தான் மான்களை வேட்டையாட முடியாமல், மனிதர்களை இரையாக்குகின்றன. நீலகிரியில் ஒரு ஆட்கொல்லிப் புலியை சுட்டுக் கொன்றனர். 

ஆய்வில், அதன் காலில் காயம் இருந்தது தெரியவந்தது. பன்றிகளுக்கு வைக்கப்பட்ட கண்ணியில் சிக்கித்தான் அந்தப் புலிக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. இவ்வாறு, வேட்டைக்கான வலிமை குறையும்போதுதான், எதிர்பாராத வகையில் மனிதர்கை இரை விலங்காக கருதி, சாப்பிடுகிறது.  அதேசமயம், ஒருமுறை மனிதரை சாப்பிட்டுவிட்டால், மனிதர்கள் எளிதாக கிடைக்கும் இரை என்று உணர்ந்து, தொடர்ந்து மனிதர்களை வேட்டையாடத் தொடங்கும். இவ்வாறு ஆட்கொல்லியாக மாறிய புலியைப் பிடிப்பது மிகவும் சிரமம். எனவேதான், ஆட்கொல்லிப் புலியை சுட்டுக் கொல்ல வேண்டியுள்ளது.

புலிகளைப் பாதுகாக்க வேண்டுமெனில், மக்களிடம் நம்பிக்கையைப் பெற வேண்டும். வனத்தில் வசிக்கும் புலிகளால் ஆபத்து இல்லை என்று மக்கள் உணர வேண்டும். மனிதர்களை புலிகள் கொல்லும்போது, விலங்குகள் மீதான வெறுப்புணர்வு அதிகரிக்கிறது. இந்த வெறுப்புதான், புலிகளை விஷம்வைத்தும், கும்பலாக சேர்ந்து தாக்கிக் கொல்வதற்கும் காரணம். எனவே, ஆட்கொல்லி புலியை பிடிப்பதோ அல்லது சுட்டுக் கொல்வதோதான் தீர்வு. ஆட்கொல்லியாக மாறிய பின்னர், அந்தப் புலி காட்டில் இருக்காது.

உலகிலேயே மலைப் பகுதியில் புலிகள் அதிக அளவு இருப்பது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்தான். அதிலும் குறிப்பாக, ஒரே வாழ்விடத்தில் புலிகள் அதிகம் இருப்பது, நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தில்தான். தமிழகத்தில் கோவை, நீலகிரி, சத்தியமங்கலம், கேரள மாநிலத்தில் வயநாடு, மன்னார்க்காடு, அமைதிப்பள்ளத்தாக்கு, கர்நாடகத்தின் பந்திப்பூர்,  நாகர்கொளே பகுதிகளை உள்ளடக்கியதுதான் நீலகிரி உயிர்க்கோள காப்பகம்.

தற்போது புலிகள் காப்பகங்களுக்கு மட்டுமே அரசு நிதியுதவி வழங்குகிறது. புலிகள் காப்பகங்களை ஒட்டிய காப்புக்காடுகளுக்கும் மத்திய அரசு நிதியுதவி வழங்கி, அங்கு பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகளை அதிகப்படுத்த வேண்டும். காட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, வேட்டைத் தடுப்புக் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ரோந்துப் பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும். மேலும், புலி வேட்டை என்பது கடல் கடந்து நடைபெறுவதால், பல்வேறு துறைகளையும் இணைத்து, ஒருங்கிணைந்த தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

புலிகளும்... நீராதாரப் பாதுகாப்பும்...

புலிகள் பாதுகாப்பு என்பது, புலிகளை மட்டுமல்ல, வனப் பகுதிகளையும் சேர்த்துப் பாதுகாப்பது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல, நமது ஆறுகள் உற்பத்தியாகும் பெரும்பாலான இடங்களும், புலிகள் காப்பகங்களாக உள்ளன. இவ்வாறு புலிகள் பாதுகாப்பு, நீராதாரப் பாதுகாப்பையும் உள்ளடக்கியுள்ளது. மேலும், பழங்குடி மக்களை வெளியேற்றிவிட்டு, புலிகளைப் பாதுகாக்க முடியாது.

சிலர் பழங்குடியினரையே வேட்டைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். காட்டுக்கும், பழங்குடி மக்களுக்கான உறவை பிரிக்க முற்படுவதன் விளைவுதான் இது. எனவே, காலம்காலமாக காடுகளில் வசிக்கும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, காடுகளைப் பாதுகாக்கும் முயற்சியில் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயல்திட்டத்தை அரசு வகுக்க வேண்டும். இது என்னுடைய காடு, என்னுடைய புலி என்று உள்ளூர் மக்கள் நம்பும் வரைதான், காடுகளையும், புலியையும் காப்பாற்ற முடியும். 

அதேபோல, சுற்றுலா வடிவிலும் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். புலியைப் படமெடுப்பது நமக்குப் பெருமையாக இருக்கலாம். ஆனால், புலிக்கு அது தொந்தரவுதான். எனவே, வன உயிரின புகைப்படக் கலையை, வனப் பாதுகாப்பு புகைப்படக் கலையாகவும், சுற்றுலாவை வனப் பாதுகாப்பு சுற்றுலாவாக மாற்ற வேண்டும். விலங்குகளுக்கு பெயர் வைப்பது, தொந்தரவு செய்வது போன்ற வற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். 

வளர்ப்பு விலங்குகள்போல வன விலங்குகளை மாற்றும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்” என்றார்  `ஓசை’ காளிதாசன்.

- ஆர்.கிருஷ்ணகுமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x