Last Updated : 25 Sep, 2018 09:33 PM

 

Published : 25 Sep 2018 09:33 PM
Last Updated : 25 Sep 2018 09:33 PM

இளம் காசநோயும் சுகாதாரமின்மையும்

இந்தியாவில் 2017-ம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு முன்பே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 8,02,000 என்கிறது ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கணக்கிடுவதற்கான பன்முகமைக் குழு அறிக்கை.

உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி, ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) மற்றும் ஐ.நா மக்கள் தொகை பிரிவு ஆகிய அமைப்புகள் உள்ளடங்கிய இந்தக் குழுவின் அறிக்கையில் குடிநீர், சுகாதாரம், போதிய ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகள் ஆகியவை கிடைக்காததுதான், உலகெங்கும் நிகழும் இந்த மரணங்களுக்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

உணவுப் பற்றாக்குறை, சரிவிகித சத்தான உணவு கிடைக்காதது, பட்டினி ஆகியவையே ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான காரணிகளாக கூறப்பட்டுவந்த நிலையில், சுகாதாரமின்மையே குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான முக்கிய காரணம் என்கின்றன சமீபத்திய உலகளாவிய ஆய்வுகள்.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 6.5 கோடி குழந்தைகளில், 3 மடங்கு எண்ணிக்கை வசதியான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் என்கிறது சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஊட்டச்சத்து குறைபாடு அடையும் குழந்தைகளுக்கான ஆய்வு அறிக்கை.

சுத்தமான குடிநீரும், கழிப்பறை வசதியும் உலகிலுள்ள அனைவரின் அடிப்படை மனித உரிமை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது

உலக அளவில் சுகாதாரம் இல்லாததால் 5 வயதுக்குட்பட்ட 15 லட்சம் குழந்தைகள் ஆண்டு தோறும் உயிரிழக்கின்றனர் என்று யூனிசெப் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சுகாதாரமின்மையால் வரும் பிரச்சினைகள் குறித்து பொதுநல மருத்துவர் கு.கணேசனிடம் பேசினோம்.

சுகாதாரத்தோடு இருந்தால் காசநோய் பரவுவதைத் தடுக்க முடியுமா?

நிச்சயம் முடியும். காசநோய்க் கிருமிகள் நோயாளியின் நுரையீரலில் வசிக்கும். நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைக் காறித் துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி மற்றவர்களுக்கு நோயை உண்டாக்கும். நோயாளியின் மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் இந்தக் கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே கைவிரல்களால் அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் அவர்களுக்கும் பரவிவிடும். நோயாளி பயன்படுத்திய கைக்குட்டை, உடை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு, தலையணை, கழிப்பறைக் கருவிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் நோய் எளிதாகப் பரவிவிடும். நோயாளி பேசும்போதுகூட நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

இப்போது யோசித்துப் பாருங்கள். நாம் சுய சுத்தம் பேணும்போதும் நம்முடைய சுற்றுச்சூழலைக் காக்கும்போதும், நம் வாழ்விடங்களையும், நாம் நடமாடும் தெருக்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும்போதும் இந்தக் கிருமிகள் பரவும் வாய்ப்புகள் குறைந்துவிடும்.

சுகாதாரமின்மையால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவது எப்படி?

சுகாதாரம் குறையும்போது தொற்றுநோய்கள் நம்மைத் தாக்குவது அதிகமாகும். அதிலும் குறிப்பாகக் குழந்தைகளுக்கு இந்தத் தாக்குதல் அதிகப்படும். அப்போது அது அவர்களின் இயல்பான உடலியக்கத்தைப் பாதிக்கும். முக்கியமாக, உணவுச் செரிமானம் பாதிக்கப்படும். இதன் விளைவால், சாப்பிட்ட உணவும் அதிலுள்ள ஊட்டச்சத்துகளும் உடலில் சேர வழியில்லாமல் போகும். அடுத்து, பசி குறையும். இதனால் தேவைக்கு உணவு சாப்பிட முடியாது. அப்போது ஊட்டச்சத்துக் குறைவு ஏற்படும். புரதச் சத்துக் குறைவு ஏற்படும் குழந்தைகளைச் சவலைக் குழந்தைகள் என்று சொல்கிறோமல்லவா? அதற்கு முக்கியக் காரணம் இதுதான். கர்ப்பிணிகளுக்குச் சுகாதாரம் குறைந்து ஊட்டச்சத்துக்குறைவு ஏற்படுமானால் அது கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்கும்.  உதாரணமாக, ஃபோலிக் அமிலம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சி குறைந்திருக்கும்.

இன்னொன்று, குடலில் புழுத்தொல்லை ஏற்படுவதற்கு சுகாதாரமின்மைதான் முதன்மைக் காரணம். அதிலும் கொக்கிப்புழு உள்ள குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏற்படுவது வழக்கம். குடலில் உள்ள புழுக்கள் குடல் சுவர்களில் ஒட்டிக்கொண்டு அங்குள்ள ரத்தத்தை உறிஞ்சிவிடுவதால், ரத்த சோகை ஏற்படுகிறது. அப்போது குழந்தைக்குப் பசி இருக்காது. உணவு சாப்பிடாது. இதனால் உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைப்பது குறைந்துவிடும். இதன் விளைவால் குழந்தையின் பொது ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

சுகாதாரமின்மை - ஊட்டச்சத்து குறைபாடு- காசநோய் மூன்றுக்கும் உள்ள தொடர்பு?

பொதுவாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் காசநோய் போன்ற தொற்று நோய்கள் தொற்றுவதற்கு யோசிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்குக் காசநோய் எளிதில் தொற்றிவிடும். நோய் எதிர்ப்பு சக்தி எப்போது குறைகிறது? ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தால் குறையும். அல்லது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமலும் ஊட்டச்சத்து இல்லாமலும் கர்ப்பமாகிற பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பிறவியிலேயே குறையும். இவர்களுக்குக் காசநோய் எளிதில் பரவும். அடுத்து, சுகாதாரமில்லாத இடங்களில் வாழும் மக்களுக்கு அசுத்தமான காற்று, குடிநீர், உணவு, பயன்படு பொருள்கள் போன்றவை மூலம் காசநோய்க் கிருமிகள் உடனடியாகப் பரவும்.

பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது எப்படி ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது?

பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது போன்றவற்றால் முதலில் அந்த இடங்கள் அசுத்தமாகின்றன. அப்போது ஈக்கள், எறும்புகள், கொசுக்கள், பூச்சிகள் போன்ற நோய் பரப்பும் உயிரினங்கள் வளர்வதற்கும், வாழ்வதற்கும், பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க் கிருமிகள் வளர்வதற்கும் இடம் கிடைக்கின்றன. அம்மாதிரியான பொது இடங்களில் மக்கள் கூடும்போதும், நடமாடும்போதும் நோய் பரப்பும் உயிரினங்களால் நேரடியாகவோ, காற்றின் உதவியுடனோ, சளி போன்ற கடத்துப் பொருள்களுடனோ, தரையைத் தொடுதல் மூலமோ இந்தக் கிருமிகள் பரவுகின்றன. அப்போது கிருமியின் தன்மையைப் பொறுத்து நம் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

திறந்த வெளியில் மலம் கழிப்பது தனி நபர் பிரச்சினை மட்டுமல்ல. மற்றவர்களை எப்படி நோய்க்கு ஆளாக்குகிறது? என்ன கிருமிகள் மூலம் நோய் பரவுகிறது?

திறந்த வெளியில் மலம் கழிப்பது தனி நபர் பிரச்சினை மட்டுமல்ல என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். யாரோ ஒருவர் செய்யும் இந்தத் தவறால் சமூகத்தில் வாழும் மற்றவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது என்பதுதான் துயரம். தமிழ்நாட்டில் பாதிப்பேர் திறந்தவெளியில்தான் மலம் கழிக்கின்றனர். இதனால் கோடி கோடியாக கிருமிகள் காற்றில் கலக்கின்றன. அப்போது காற்று மாசாகிறது. மாசுக்காற்றில் கிருமிகள் எளிதில் பரவும் என்பதைக் கூற வேண்டியதில்லை.

ஏற்கெனவே சொன்னதுபோல் திறந்த வெளியில் மலம் கழிக்கும்போதும் அந்த இடங்கள் அசுத்தமடைகின்றன. அப்போது அங்கு பலதரப்பட்ட கிருமிகளும் நோய் பரப்பும் உயிரினங்களும் உற்பத்தியாகின்றன. அவற்றின் மூலம் மக்களுக்கு நோய்கள் பரவுகின்றன. மலத்தில் உள்ள கிருமிகள் சாக்கடையில் கலந்து மற்ற இடங்களுக்கும் செல்லலாம். அப்போது அங்குள்ள மக்களை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தலாம். அடுத்து, குடிநீரில் கலந்து குடும்பத்தினரின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். மலம் உலர்ந்து மண்ணோடு மண்ணாகிவிடும். அப்போது அங்கு விளையாடும் குழந்தைகளின் கைகளில் ஒட்டிக்கொள்ளும். கைகளைக் கழுவாமல் குழந்தைகள் ஏதாவது சாப்பிட்டால் அப்போது அந்தக் கிருமிகள் குழந்தைகளைப் பாதிக்கும். மலத்தில் உட்காரும் ஈக்கள், எறும்புகள், கொசுக்கள், பூச்சிகள், எலிகள் மூலம் அந்தக் கிருமிகள் மக்களுக்குப் பரவும்.

சுகாதாரமின்மை உள்ள இடங்களில் தெருக்குழாய்களில் தண்ணீர் பிடிக்கும்போது, அங்குள்ள கிருமிகள் குடிநீரில் கலந்து குடிக்கும் தண்ணீர் மூலமோ, அந்தத் தண்ணீர் கொண்டு சமைக்கப்படும் உணவு மூலமோ மக்களுக்குப் பரவக்கூடிய ஆபத்தும் உண்டு. மலம் காணும் மண்ணில் விளையும் காய்கறி, பழங்களைச் சரியாகக் கழுவாமல்  சாப்பிட்டால், சமையலுக்குப் பயன்படுத்தினாலும் நோய்க்கிருமிகள் பரவும்.

கனமழை, வெள்ளம் போன்ற சமயங்களில் தெருவில் காணப்படும் மலம் போன்ற கழிவுகள் குடிநீரையும் அசுத்தப்படுத்தும். அப்போதும் நோய் பரவும். எலிக்காய்ச்சல் கிருமிகள் எலிகளின் சிறுநீரில் வெளியேறும். இவை வெள்ளநீரில் அல்லது மழை நீரில் கலக்கும். அப்போது கை, கால்களைச் சரியாகக் கழுவாமல் இருந்தால், அந்தக் கிருமிகள் உடலுக்குள் பரவி நோயை உண்டாக்கும்.

காலரா, வயிற்றுப்போக்கு, வாந்தி, டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை, குடல் புழுத்தொற்று, சீதபேதி, இளம்பிள்ளை வாதம், எலிக்காய்ச்சல் போன்றவற்றை உருவாக்கும் கிருமிகள் இந்த வழியில் பரவுவது அதிகம்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான்….ஏற்கெனவே மலத்திலும் கிருமிகள் இருக்கும். உதாரணத்துக்கு ஒரு கிராம் மலத்தில் ஒரு லட்சம் கோடி கிருமிகள் இருக்கும். இப்போது புதிதாகவும் கிருமிகள் வளரும் வாய்ப்பு அதிகம். மேலும், சிறுநீர் சிறிது நேரத்தில் ஆவியாகிவிடும். எச்சில் உலர்ந்துவிடும். இவற்றில் உள்ள பல கிருமிகள் சூரிய ஒளி பட்டதும் இறந்துவிடும். அதனால் இவற்றிலுள்ள கிருமிகள் குறுகிய காலம் மட்டும்தான் உயிர் வாழும். ஆனால், மலம் அப்படியல்ல. அது மக்கிப்போனாலும், அதில் காணப்படும் பல்வேறு கிருமிகள் மாதக் கணக்கில் உயிர் வாழும் தன்மை உடையவை. அப்போது அங்கு நடமாடும் மக்களுக்கு அடிக்கடி ஆரோக்கியப் பாதிப்பு ஏற்பட வழி உண்டாகும். எனவேதான் திறந்த வெளியில் மலம் கழிப்பது தவறு என்பதை மீண்டும் மீண்டும் கூறுகிறோம்.

கை கழுவுவது எப்படி? அதன் அவசியம் என்ன?

handjpg100 

`சுத்தம் சோறு போடும்' என்பது பழமொழி. யதார்த்தத்தில், சுத்தமாக இருப்பதுதான் பலவகையான நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்கான முதல் வழி. அதிலும், கைகள் வழியாகத்தான் பலதரப்பட்ட நோய்த் தொற்றுகள் எளிதில் பரவுகின்றன. எனவே, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

நமக்குப் பெரும்பாலும் கை தொடுதல் மூலமும், கை குலுக்குதல் வழியாகவும், உணவு, குடிநீர் ஆகியவற்றின் மூலமும் கிருமிகள் பரவுவதால்தான் தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன. இந்தச் செயல்களுக்குக் கைகள்தான் உதவுகின்றன. எனவே கைகள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.  கைகள் சுத்தமாகப் பேணுகிறவர்களுக்குத் தொற்றுநோய்கள் ஏற்படுவது குறைவு என்பதைப் பல ஆராய்ச்சிப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவேதான் கைகளை முறையாகக் கழுவுவது என்பது ஆரோக்கியத்தின் அடிப்படையாகப் பார்க்கப்படுகிறது. கிருமிகளை எதிர்ப்பதில் இதுதான் முதன்மை வழியாக இருக்கிறது.

உணவு தயாரித்துப் பரிமாறும் அம்மாக்கள் மற்றும் உணவு விடுதிகளில் உணவு பரிமாறும் ஊழியர்கள் முதல் உடலின் மேல் அக்கறை கொண்டவர்கள் வரை அனைவருக்குமே பொதுவான கை கழுவும் முறை ஒன்று உண்டு.

கைகளைத் துல்லியமாகச் சுத்தம் செய்யச் சில வழிமுறைகள் என்னென்ன?

* முதலில் இரண்டு கைகளையும் குழாய்த் தண்ணீரில் கழுவ வேண்டும். இளஞ்சூடான தண்ணீர் என்றால் மிக நல்லது. இது கிடைக்காதபோது குளிர்ந்த நீரில் கழுவலாம். சோப் கொண்டு கழுவுவது சிறந்தது.

*  இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து நன்கு தேய்க்கவும். இரண்டு கைகளிலும் சோப்பை நன்கு பரவச் செய்யவும். வலது கை உள்ளங்கையால் இடது புறங்கையை நன்கு தேய்க்க வேண்டும். பின்னர் அதையே இடது கை உள்ளங்கையால் வலது புறங்கையைத் தேய்க்கவும். அந்த இடங்களிலும் சோப் நன்றாகப் பரவியுள்ளதா என்று சரிபார்க்கவும்.

* இரண்டு கைகளையும் கோர்த்து விரல்களுக்கு நடுவிலும் சோப் செல்லும்படியாக விரல் இடுக்குகளை நன்கு தேய்க்க வேண்டும். முன்னும் பின்னும் தேய்த்து நன்கு பரவச்செய்ய வேண்டும்.

* விரல்களின் பின்புறத்தை உள்ளங்கையில் தேய்க்க வேண்டும். இதனால் விரல்களின் பின்புறத்திலெல்லாம் சோப் செல்லும். சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். ஒரு கையின் உள்ளங்கையை மறு கையின் கட்டை விரலால் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். அப்படியே இரண்டு கைகளுக்கும் செய்ய வேண்டும்.

* சுழற்சி முறையை வைத்து இரண்டு உள்ளங்கைகளையும் சுத்தம் செய்ய வேண்டும். விரல்களை வைத்து உள்ளங்கையைத் தேய்க்க வேண்டும்.

* ஒரு கையை வைத்து மற்றொரு கையின் மணிக்கட்டை சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும்.

* நன்கு தேய்த்த பிறகு, குழாய்த் தண்ணீரில் இரு கைகளையும் கழுவ வேண்டும். சோப் முழுமையாக நீங்கும்படிக் கழுவ வேண்டும். அதுவும் இளஞ்சூடான தண்ணீராக இருப்பது நல்லது.

* கைகளைக் கழுவிய பிறகு உலரச்செய்ய வேண்டும். சுத்தமான துண்டால் நன்கு துடைக்க வேண்டும். துடைத்த துண்டை திரும்பவும் பயன்படுத்தக் கூடாது.

இப்படிக் கைகளை முறையாகச் சுத்தம் செய்வதே சிறந்தது. இதன் மூலம் பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

எப்போதெல்லாம் கை, கால், வாய் கழுவ வேண்டும்?

அவசியம் கை கழுவ வேண்டிய தருணங்கள்:

hajpg100 

காலையில் எழுந்ததும் கை, கால், முகம், வாய் கழுவ வேண்டும். வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் கை, கால், முகம் கழுவ வேண்டும்.

முக்கியமாக, எதைச் சாப்பிடுவதாக இருந்தாலும் அதைச் சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும்  கைகளையும் வாயையும் நன்றாகக் கழுவ வேண்டும்.

கழிப்பறைக்குச் சென்று சிறுநீர்/மலம் கழித்த பிறகு கட்டாயம் சோப்பு போட்டு கை கழுவ வேண்டும்.

குழந்தைக்குக் கழிப்பறையில் உதவி செய்த பிறகும்; குளிப்பாட்டுவதற்கு முன்பும் பிறகும்; டயாப்பர் மாற்றிய பிறகும் கை கழுவ வேண்டும்.

பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும்போது குழாய், டவல், பேசின், கைப்பிடி என எதைத் தொட்டுவிட்டாலும் கை கழுவ வேண்டும். குழந்தைகள் விளையாடி விட்டு வந்ததும் கை, கால், முகம் கழுவ வேண்டும்.

காயம் அல்லது வெட்டுப்பட்ட இடத்தில் மருந்து போடுவதற்கு முன்பும் பின்பும். உடல்நலக் குறைவு ஏற்பட்ட ஒருவரைத் தொட்டுப்பேச வேண்டிய சூழலில் அதற்கு முன்பும் பிறகும். நோய்வாய்ப்பட்ட ஒருவரை வீட்டில் அல்லது மருத்துவமனையில் வைத்துக் கவனிக்கும்போதும்.

தும்மல், இருமல், மூக்கினுள் விரலை வைக்கும் போதும். குப்பையையும் கழிவுநீரையும் கையாண்ட பிறகு, விலங்குகளைத் தொட்ட பிறகும், விலங்கினக் கழிவுகளைக் கையாண்ட பிறகும் கை கழுவ வேண்டும்.

குழந்தைகள் கை கழுவ சோப்பைப் பயன்படுத்த வேண்டாம். சானிடைசரைப் பூசிக்கொண்டாலே போதும் என்பது சரியா?

இது சரியில்லை. குழந்தைகள் தங்கள் கைகளை சோப்பு போட்டு தண்ணீரில் கழுவுவதே ஆரோக்கியம் காக்கும் வழி. சோப்பும் தண்ணீரும் கிடைக்காதபோது அல்லது அடிக்கடி கை கழுவ நேரமில்லாதபோது அவசரத்துக்கு கைகளைச் சுத்தப்படுத்த உதவும் சாதாரண கிருமிநாசினிதான் சானிடைசர். சானிடைசர் கொண்டு கைகளைத் துடைத்துக்கொண்டால் போதும் என்று சொல்வது சோம்பேறித் தனத்தை வளர்க்கும் வழி.

செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் பயன்படுத்திய கைகளைக் கழுவ வேண்டுமா?

கண்டிப்பாகக் கழுவ வேண்டும். இந்தக் கருவிகளில் கண்ணுக்குத் தெரியாத பலவகை கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது. அவற்றின் மூலம் நோய் பரவ வழி உள்ளது. அந்தச் சூழலைத் தவிர்க்க செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் பயன்படுத்திய கைகளைக் கழுவ வேண்டும். உதாரணம், சென்னை கண் நோய் இந்தக் கருவிகள் மூலம் பரவும் தன்மையுள்ளது.

குழந்தைகளுக்கு வரும் உடல்நலக் குறைவு, உயிரிழப்பு ஆகியவற்றில் சுகாதாரமின்மை முக்கியப் பங்கு வகிப்பது எப்படி?

உடல் ஆரோக்கியத்துக்கு அடிப்படை அம்சமே சுகாதாரம்தான். சுகாதாரம் குறைந்தால் ஆரோக்கியமும் குறையும். அதில் சந்தேகமில்லை. சமீபத்தில் உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்புக்கு முக்கியக் காரணங்களாக உலகச் சுகாதார நிறுவனம் இவ்வாறு அறிவித்துள்ளது:

சுத்தமான  வாழ்விடங்கள், அலுவல்கள், சுத்தமான குடிநீர், மாசில்லா காற்று, முறையான ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை சுகாதார சேவைகள் இல்லாத நாடுகளில்  அல்லது குறைவாக உள்ள நாடுகளில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. சுகாதாரம் காத்தல், வீடுகளில் கழிப்பறை கட்டுதல், ஊட்டச் சத்துப் பிரச்சாரம் ஆகியவையே குழந்தைகளின் இறப்பு  விகிதத்தைக் குறைக்க முடியும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

எடுத்துக்காட்டாக, குழந்தைகளுக்குச் சுகாதாரமின்மை காரணமாக ‘நிமோனியா’ எனும் சுவாசக்கோளாறு ஏற்படுகிறது. இது உயிருக்கு உலை வைக்கும் மோசமான நோய். அடுத்து, ரோட்டா வைரஸ் காரணமாக குழந்தைகளுக்குக் கடுமையான வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது. இதனாலும் அவர்களுக்கு உயிராபத்து ஏற்படுகிறது.

வசதி படைத்த குழந்தைகள் சுகாதாரம் இல்லாமல் எப்படி இருக்கிறார்கள்? வறுமையில் வாடும் குழந்தைகள் சுகாதாரமின்மையோடு இருக்கிறார்களே?

வசதி படைத்த குழந்தைகளும் சுகாதாரம் இல்லாமல் இருப்பதுதான் ஆச்சரியம். ஏன்? அந்தமாதிரி சூழலில் வளரும் குழந்தைகளுக்குப் பெற்றோரின் வழி காட்டுதல்கள் குறைவாக இருக்கும். வீட்டில் உள்ள பணியாட்கள்தான் பெரும்பாலும் அந்தக் குழந்தைகளை வளர்க்கிறார்கள். அந்தப் பணியாளர்களுக்குச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு முழுமையாக இல்லாமல் இருந்தால், அவர்கள் வளர்க்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படுவது உறுதி. சிறு குழந்தைகளுக்கு ‘பிரைமரி காம்ப்ளெக்ஸ்’ எனும் இளம் வயது காசநோய் வருவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

வறுமையில் வாடும் குழந்தைகள் சுகாதாரம் இல்லாமல் இருப்பதற்கு அவர்கள் பெற்றோரும் வாழும் சூழலும்தான் முக்கியக் காரணங்கள். பெற்றோருக்கும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கும். அதனால் அவர்கள் வளர்க்கும் குழந்தைகளுக்கும் அந்த விழிப்புணர்வு குறைவாக இருக்கும். அப்படியே சுகாதார விழிப்புணர்வு இருந்தாலும் அதைச் செயல்படுத்த பொருளாதாரம் இடம் கொடுக்காது. உதாரணமாக, வாழும் இடம் குறைவாக இருக்கும்போது, அங்கே கழிப்பறை கட்டுவதற்கு எங்கே இடம் இருக்கும்? தினசரி வாழ்வாதாரத்துக்கே தினக்கூலி போதாதபோது சுத்தம் காக்க உதவும் பொருள்கள் (உதாரணம் - குளிக்கத் தண்ணீர், சோப்பு) வாங்க எங்கே வசதி இருக்கும்? அப்போதெல்லாம் காசநோய், ஊட்டச்சத்துக்குறைபாடு உள்ளிட்ட பல  நோய்கள் அவர்களைத் தாக்கும்.

உடல் பருமனுக்கும் ஊட்டச்சத்து குறைபாடுக்கும் உள்ள சம்பந்தம்?

இளமையில் உடல் பருமன் என்பது இன்றைய வாழ்க்கைமுறை மாற்றங்களால் வந்துள்ள பிரச்சினை. கொழுப்பு மிகுந்த அதிக கலோரிகள் உள்ள உணவுகளையும், செயற்கை உணவுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளையும் உண்பதால் வருகிற பிரச்சினை. இந்த உணவுகளில் உடலுக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுக்களும் குறைவாக இருக்கும். அதனால் இரும்புச் சத்து, அயோடின் போன்ற தாதுக்கள் குறைந்துவிடும். அப்போது ரத்த சோகை, தைராய்டு குறைவாகச் சுரத்தல் போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடு நோய்கள் தலைதூக்கும். மேலும் இந்த உணவுகளில் கொழுப்பு அமிலங்கள்தான் அதிகமாக இருக்கும். இவை இதயத்துக்கு ஆபத்து தரும். உடலுக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுக்களும் காய்கறி மற்றும் பழங்களில்தான் அதிகம். அந்த உணவுகளைச் சாப்பிட்டால் மட்டுமே ஊட்டச்சத்துக் குறைபாடுகளைத் தவிர்க்க முடியும்.

மரபியல், நரம்பு உட்சுரப்பியல், வளர்சிதை மாற்றம், உளவியல், சூழலியல் குழந்தைப் பருவ உடல்பருமனுக்குக் காரணமாகிறது. வளர்ந்த பின் ஏற்படும் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாதவிடாய்க் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள், மன அழுத்தம் ஆகியவையும் குழந்தைப் பருவ உடல் பருமனோடு தொடர்புடையதா?

உடற்பருமனுக்கு அடிப்படையாக விளங்கும் துரித உணவுகளில் உப்பு, இனிப்பு, கொழுப்பு ஆகியவை அதிகம். இவை இளமையிலேயே ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு வருவதை வரவேற்கின்றன. உடற்பருமன் இருப்பவர்களுக்கு உடலில் உற்பத்தியாகிற இன்சுலின் முழுவதுமாகப் பயன்படுத்த முடியாத அளவுக்கு ‘இன்சுலின் எதிர்ப்புத் தன்மை’ அதிகமாக இருக்கும். இதனால் நீரிழிவு சின்ன வயதிலேயே வந்துவிடுகிறது.

உடற்பருமன் உள்ளவர்களுக்கு ஹார்மோன்கள் சீரில்லாமல் சுரக்கின்றன. அதிகமாகச் சுரப்பதும் உண்டு. குறைவாகச் சுரப்பதும் உண்டு. குறிப்பாக, உடற்பருமன் உள்ள பெண்களுக்கு தைராய்டு ஹார்மோன் குறைவாகச் சுரக்கும்போது குறை தைராய்டு நோய் ஏற்படுகிறது. இதனால் மாதவிடாய்க் கோளாறுகள், கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறப்பது, பிறவிக் குறைபாடு, பேச்சுத்திறன், கேட்கும் திறன் இல்லாமல் பிறப்பது, மூளை வளர்ச்சி பாதிப்பு, அறிவாற்றல் பாதிப்பு என பலதரப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆன்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும்போது சினைப்பை நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றன. அப்போதும் மாதவிலக்குக் கோளாறுகள், குழந்தையின்மை போன்ற கோளாறுகள் உண்டாகின்றன.

உடற்பருமன் உள்ளவர்களுக்கு கொழுப்பு ரத்தத்தில் மட்டுமன்றி கல்லீரலிலும் அதிகமாகச் சேருகிறது. அதனால் கல்லீரல் பாதிக்கப்படுகிறது. உடற்பருமன் உள்ளவர்களுக்கு ஒட்டு மொத்தமாக உடலியங்கியலில் சமச்சீரின்மை உண்டாகிறது. இது மன அழுத்தத்துக்கு வழிவிடுகிறது. முக்கியமாக செரட்டோனின் ஹார்மோன் சுரப்பை உடற்பருமன் பாதிக்கிறது. இதுதான் மனதுக்கு அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கும் ஹார்மோன்.

சுகாதாரம் பேண என்ன செய்ய வேண்டும்?

* வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் பேணுங்கள். முக்கியமாக சமையல் அறை, படுக்கை அறை, கழிப்பறை, குளியல் அறை ஆகியவை வெகு சுத்தமாக இருக்க வேண்டும். படுக்கை விரிப்புகள், தலையணை உறை போன்றவற்றை வாரம் ஒருமுறை மாற்றுங்கள். மூன்று மாதத்துக்கு ஒருமுறை வீட்டில் ஃபேன், சன்னல் போன்றவற்றைத் துப்புரவு செய்யுங்கள்.

* கழிவுகளை உடனுக்குடன் அகற்றுங்கள். தினமும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடை அணிந்து சுயசுத்தம் பேணுங்கள். கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். மாதம் இருமுறை நகங்களை வெட்டுங்கள். சாப்பிட உட்காரும்போது, கைகளை மேஜையின் மீது வைக்காதீர்கள்.

* மூக்கைச் சிந்தும்போதும், இருமும்போதும் கைக்குட்டையால் முகத்தை மறைத்துக் கொள்ளுங்கள்.

* புகை பிடிக்காதீர்கள். வெற்றிலை, பாக்கு, புகையிலை, பான் மசாலா, குட்கா, பீடா போடாதீர்கள். நீங்கள் பயன்படுத்தும் சோப்பு, துண்டு, சீப்பு, கைக்குட்டை, உணவுத்தட்டு போன்றவற்றை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாது.

* பள்ளி, அலுவலகம் எதுவானாலும் நாம் புழங்கும் இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டுக் குப்பைகளைத் தெருக்களில் வீசக்கூடாது. அவற்றுக்கென்றே உள்ள பைகளில் கட்டித் துப்புரவாளர்கள் மூலம் வெளியேற்ற வேண்டும். தெருக்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* தெருக்களில் கழிவு நீர், மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* நீங்கள் பயணம் போகும் வாகனங்களும் சுத்தமாக இருக்க வேண்டும். சுகாதாரம் குறைந்த இடங்களில் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* வெளியில் செல்லும்போது கட்டாயம் காலணி அணிந்துகொள்ள வேண்டும். உடல்நலக் குறைவுடன் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

* நோய்வாய்ப்பட்ட ஒருவரை வீட்டில்  அல்லது மருத்துவமனையில் தனி அறையில் வைத்துக் கவனிக்க வேண்டும். தூசு, காற்று மாசு போன்றவற்றுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் வெளியில் நடந்தோ, இரு சக்கர வாகனங்களிலோ செல்லும்போது முகத்திரை அணிந்துகொள்ள வேண்டும்.

- நாகப்பன்.

தொடர்புக்கு: nagappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x