Published : 24 Feb 2019 06:15 PM
Last Updated : 24 Feb 2019 06:15 PM

போலீஸாரால் அகற்றப்பட்ட தேநீர்க்கடையை நடத்தி வந்த பெண்ணுக்கு ஜெயலலிதா செய்த உதவி

ஜெயலலிதா அரசியல் கட்சித்தலைவராக, நாட்டின் முதல்வராக இருந்தவர். அவர் மற்ற அரசியல் கட்சித்தலைவர்களிலிருந்து சற்று வித்யாசப்பட்டவராக இருந்தார் என்பதை அதை அனுபவமாக பெற்றவர்கள் கூறும்போது அது பிரபலங்கள் பின்பற்றவேண்டிய ஒரு தகவலாக தெரிந்தது.

 

திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒரு சிறப்பு உண்டு என்பார்கள். பொதுவெளியில் அவர் வரும்போது சாதாரண தொண்டர் கும்பிட்டாலும் அவருக்கு பதில் வணக்கம் செய்வார் என்பார்கள். இதேபோன்று பெரியார் தன்னைவிட வயதில் சிறியவர்கள் வந்தாலும் எழுந்து நின்று வரவேற்பார், வாங்க போங்கன்னு மரியாதையாகத்தான் பேசுவார் என்று கூறுவார்கள்.

 

ஜெயலலிதா  பொது இடங்களில் தனது வாகனம் செல்லும் வழியில் பொதுமக்கள், தொண்டர்களை கூர்ந்து கவனிப்பதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார்.

 

சாலையில் வீட்டிலிருந்து தலைமைச்செயலகம் செல்லும் வழியிலும், தலைமைச் செயலகத்திலிருந்து வீடுதிரும்பும் போதும் அவர் தொண்டர்களை நோக்கி கையசைப்பது வழக்கம். ஆனால் அவர் ரெகுலராக நிற்பவரை மனதில் பதிய வைக்கும் வழக்கத்தை வைத்திருப்பார் என்பது அவரை நெருக்கமாக அறிந்த சிலருக்கும் கட்சிக்காரர்களுக்கும் தெரியும்.

 

ஜெயலலிதா தலைமைச் செயலகம் செல்லும் வழியில் தொடர்ந்து தினமும் நின்று மனுக்களுடன் வணக்கம் வைப்பார்கள். தொடர்ச்சியாக நிற்கும் நபரை கவனித்துவரும் ஜெயலலிதா தனது பாதுகாவலர்கள் மூலம் அவர்களை அழைத்து, அவர்களின் விவரங்கள் கேட்டு, பின்னர் நேரில் அழைத்து அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பார்.

 

இவ்வாறு பயன்பெற்றவர்கள் கட்சிக்காரர்கள், பொதுமக்கள் என பலரைச் சொல்லலாம். ஜெயலலிதாவின் பாதையில் நின்று அவரது பார்வைப் பட்டதால் பலன்பெற்று ஜெயலலிதாவால் கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பலர் இன்றும் சாட்சியாக உள்ளனர். அவர்கள் மிகப் பெரும் பணக்காரர்களோ, அரசியல் செல்வாக்குமிக்கவர்களோ அல்ல. தினமும் வழியில் நின்று வணங்கி ஜெயலலிதாவின் அன்பை பெற்றவர்கள்.

 

இவ்வாறு நின்ற ஒரு பெண், எம்எல்ஏவாகவும் சிலர் மாநகராட்சிகளில் கவுன்சிலராகவும், கட்சியின் பொறுப்புகளிலும் கொண்டு வரப்பட்டதை கட்சியில் உள்ள அனைவரும் அறிவர்.

 

ஜெயலலிதா பாதையில் கோரிக்கை மனுவுடன் நின்றார் ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த ஒருவர். ஜெயலலிதா அவரை அழைத்து விபரம் கேட்டு மகன் படிப்பு செலவு, அவரது பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து வைத்தார். இன்று அவர் இரும்புக்கடை வைத்து நன்றாக வாழ்கிறார்.

 

ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் வீட்டுக்கு செல்லும் வழியில் டீக்கடை வைத்திருந்தார் ஒரு பெண். ஜெயலலிதா முதல்வரான பின்னர் அவரது டீக்கடையை போலீஸார் அப்புறப்படுத்தினர். மறுநாள் அவ்வழியே சென்ற ஜெயலலிதா டீக்கடை இல்லாததைக்கண்டு விவரம் கேட்டுள்ளார்.

 

போலீஸார் பாதுகாப்பு கருதி அகற்றியது பற்றி கூறியுள்ளனர். உடனடியாக அந்த பெண்ணை வரவழைத்து அவர் குடும்ப நிலைக்கேட்டு அதே இடத்தில் டீக்கடை வைக்க ஜெயலலிதா அனுமதித்தார்.

 

அதன் பின்னர் அந்தப் பெண்மணியின் டீக்கடை, என்றாவது மூடியிருந்தால் உடனடியாக ஜெயலலிதா கவனித்து விடுவார். ஒருமுறை உடல்நலம் சரியில்லாமல் அந்த பெண் டீக்கடை வைக்காமல் போக உடனடியாக அவரை அழைத்து வர சொன்ன ஜெயலலிதா போலீசார் தொந்தரவு செய்தார்களா? என்று கேட்க உடல் நலம் சரியில்லை என்று கூறி உள்ளார்.

 

 பின்னர்  அந்தப் பெண்மணியின் மகள் படிப்பு, அவரது குடும்ப நிகழ்வுகளுக்கு பல வகைகளில் ஜெயலலிதா உதவி செய்துள்ளார். இதேபோன்று பலரும் தங்கள் சொந்த அனுபவங்களை கூறியுள்ளனர்.

 

பிரபலமாக உள்ள ஒவ்வொருவரும் அவர்களை சுற்றி உள்ளவர்களை கவனிப்பார்கள். சுற்றி உள்ள சாதாரண தொண்டர்களை, பொதுமக்களின் பிரச்சினைகளை கவனிக்கும் தலைவர்கள் பலர் இறந்தும் பலரது உள்ளங்களில் வாழ்கின்றனர். அதில் ஜெயலலிதாவும் தன்னை பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x