Published : 08 Oct 2018 07:51 PM
Last Updated : 08 Oct 2018 07:51 PM

இடைத்தேர்தலைச் சந்திக்க அதிமுகவுக்கு தயக்கமா? எதிர்பார்ப்புடன் இருந்த கட்சியினர் ஏமாற்றம்

4 வடமாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம், திருப்பரங்குன்றம், திருவாரூருக்கு இடைத்தேர்தலை அறிவிக்காததால் இடைத்தேர்தல் திருவிழாவுக்காக பெரும் ‘எதிர்பார்ப்புடன்’ஆரவாரமாக தேர்தல் ஆயத்தப்பணியில் ஈடுபட்டு வந்த அதிமுகவினரும், அமமுகவினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த இடைத்தேர்தல் தள்ளி வைப்பின் பின்னணியில் ஆளும் கட்சி இருப்பதாகக் கூறப்படுவதால் இனி மக்களவைத் தேர்தலுடன் இணைந்து இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அமமுகவினர் திருப்பரங்குன்றத்தில் முகாமிட்டு தேர்தல் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தனர். அதிர்ச்சியடைந்த அதிமுகவினர், திருப்பரங்குன்றத்திலும் ஆர்.கே.நகர் போல் ஆரம்பத்திலே கோட்டை விடக்கூடாது என்பதற்காக தொகுதி முழுவதும் சின்னங்களை வரைத்து, ‘பூத்’கமிட்டி அமைத்து, அதன் நிர்வாகிகளுக்கு முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் பணமும் விநியோகித்தனர். சைக்கிள் பிரச்சாரம், ஆட்டோ பிரச்சாரத்தையும் தொடங்கினர். பொதுக்கூட்டங்களை நடத்தினர். ஆனாலும், அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலே அமமுகவினர் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். டிடிவிதினகரனை அழைத்து சில நாளில் பொதுக்கூட்டமும் போடுவதற்கு அமமுகவினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

திருவாரூரில் கருணாநிதி கடந்த தேர்தலில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தொகுதி என்பதால் அது திமுகவுக்கு செல்வாக்காக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதனால், திருவாரூரை விட 8 முறை வெற்றிபெற்ற திருப்பரங்குன்றத்திற்கு அதிமுக தரப்பினர் அதிக முக்கியத்துவம் கொடுத்து தேர்தல் களப்பணிகளில் ஈடுபட்டனர். அதற்கு அமமுகவினர் கடும் போட்டியைக் கொடுத்ததால் கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரே கடந்த சில நாளுக்கு முன் நேரடியாக மதுரை வந்து அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பற்றி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். மீண்டும் முதல்வர் கே.பழனிசாமி 11-ம் தேதி திருப்பரங்குன்றம் வர உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம், தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றத்திற்கும், திருவாரூருக்கும் இடைத்தேர்தலை அறிவிக்கவில்லை.

இந்த இடைத்தேர்தல் தள்ளிப்போவதின் பின்னணியில் ஆளும்கட்சி இருப்பதாகவும், மழையைக் காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கூடாது என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. திருப்பரங்குன்றம் தொகுதியில் இதுவரை ரூ.10 கோடிக்கு மேலாக ஆளும் கட்சி மிக குறுகிய காலத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதோடு ஒவ்வொரு வார்டு, கிராமம், குடியிருப்புகள், கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சிகளுக்குத் தேவையான விஷயங்களை மாவட்ட வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், புறநகர் மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றி உள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிப்பதற்குள், திருப்பரங்குன்றத்திற்கு தேவையான அவசரத் தேவைகளை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற வேகத்தில் அதிமுக செயல்பட்டது. அதனால், தொகுதியும் அதிமுகவுக்குச் சாதகமாகவே இருந்ததால் இடைத்தேர்தல் தள்ளி வைப்பின் பின்னணியில் அவர்கள் இருப்பார்களா? என்பது தெரியவில்லை. ஏற்கெனவே ஓபிஎஸ் விவகாரத்தால் அவருக்கும், அதிமுக கட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இடைத்தேர்தல் நடத்தி அதில் பின்னடைவு ஏற்பட்டால் ஆட்சிக்கும், கட்சிக்கும் சிக்கல் ஏற்படலாம் என்ற எண்ணத்தில் ஆளும் கட்சித் தரப்பு இடைத்தேர்தல் தள்ளி வைக்க நினைத்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போது இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால் திருப்பரங்குன்றம் அதிமுகவினரும், அமமுகவினரும் சோர்வடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x