Last Updated : 17 Jan, 2018 04:22 PM

 

Published : 17 Jan 2018 04:22 PM
Last Updated : 17 Jan 2018 04:22 PM

சென்னை புத்தகக் காட்சி: சூழலியல் காதலர்கள் செல்ல வேண்டிய அரங்குகள்

சூழல் சார்ந்த சவால்கள் இனி வரும் வருடங்களில் நம் முன் வரிசை கட்டி நிற்கப் போகின்றன.

சூழல் மாசினால் வண்ணங்களைத் தொடர்ந்து இழந்து கொண்டிருக்கும் நமது நகரங்களை சற்று நின்று பார்க்கக் கூட நேரமில்லா கால ஓட்டத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்...அல்லவா... ஆனால் அவற்றை இப்படியே தொடர்ந்து கடந்து விட முடியாது.

சுற்றுச் சூழல் சார்ந்த நலன்களில் தூரிகைகளாக நாம் மாற வேண்டும்.

அப்போதுதான் அடுத்த தலைமுறையினருக்கு வண்ணமயமான நகரத்தை மீண்டும் உருவாக்க முடியும் என்று சூழலியல் சார்ந்த அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அவ்வாறு இருக்கையில் முதலில் சூழலியல் என்றால் என்ன? நம்மை சுற்றியுள்ள சூழலியல் சார்ந்த பிரச்சினைகள் என்னென்ன, முதலில் அவற்றை அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா… அதற்கான ஒரு வாய்ப்பைத்தான் 41-வது சென்னை புத்தகக் கண்காட்சி வழங்கியுள்ளது

சென்னை புத்தகக் கண்காட்சியில் இடப்பெற்றுள்ள சுற்றுச் சூழல் நலன்கள், இயற்கை விவசாயம் சார்ந்த புத்தகங்களை தங்கள் அரங்குகளில் நிறைத்து வைத்திருக்கும் இரு புத்தக அரங்குகளையும், அவற்றில் இடம்பெற்றுள்ள வாசகர்கள் அறிமுகப்படுத்துக்கிறோம்...

சூழலியல் பாதுகாப்புகாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும், ‘பூவுலகின் நண்பர்கள்’ பதிப்பகம் இடப்பெற்றுள்ள அரங்கு எண்கள் 237,238-லிருந்து வெற்றிச்செல்வன்,

இந்தியாவில் நீண்ட கால விவாத தலைப்பாக உள்ள நதி நீர் இணைப்பு திட்டம் குறித்து ‘நதி நீர் இணைப்பு ஒரு சூழியல் வன்முறை’ என்ற புத்தகம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சூழலுக்கு இந்த திட்டம் எந்த வகையில் எதிரானது. பொருளாதார ரீதியாக எந்த வகையில் இத்திட்டம் சாத்தியமற்றது என்பதை இப்புத்தகம் விளக்குகிறது

‘ஒளியிலே தெரிவது?’ : ஒளி மாசு குறித்து தமிழில் வெளிவந்துள்ள முதல் புத்தகம் இதுதான். ஒளி மாசினால் பூச்சிகள் உலகம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும், அதனால் ஏற்படும் சூழல் விளைவுகளையும் இப்புத்தகம் நம்மிடையே பேசுகிறது.

‘ஹைட்ரோகார்பன் ஆழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம்’: தமிழகத்தில் தொடர்ந்து பேரச்சமாக நிலை கொண்டிருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டதைக் குறித்த அறிவியலாளர்கள் மற்றும் சூழியலாளர்களின் கட்டுரைகளைத் தாங்கி இருக்கிறது இப்புத்தகம்.

பூவுலகு அரங்கத்திலிருந்து புத்தகங்களை வாங்கிச் செல்லும் இளம் வாசகர்

‘மேகங்கள் சொல்லும் கதைகள்’ : மேகங்கள், பருவ மழைகள் குறித்த ஆய்வுகள், பண்டைய வானிலை கணிப்புகள் ஆகிய சார்ந்த கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

‘அமைதியே எங்கள் பிரார்த்தனை’: அணுஆயுதங்களால் உண்டாகும் விளைவுகளை கூறும் புத்தகம்.

‘மவுன வசந்தம்’: சுற்றுச் சூழல் சார்ந்து வந்த முழு புத்தகமாக இது கருதப்படுகிறது. இயற்கையின் நியதியில் திருத்த முடியாத மாற்றங்களைக் கொண்டு வந்தால், ஒவ்வொரு தலைமுறையும் அதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இந்தப் புத்தகத்தின் சாரம்.

‘மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காக’, ‘எல்லை மீறும் மனித இனம்’, ‘பரவச மூட்டும் பறவைகள் ‘போன்ற புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

20 பக்கங்களைக் கொண்ட சிறிய புத்தகங்கள்

இதுமட்டுமல்லாது தமிழகத்தின் தற்கால சூழியல் சார்ந்த பிரச்சினைகளை தெரிந்து கொள்ள வாசகர்கள் வசதிகேற்ப, 20 பக்கங்களைக் கொண்ட சிறிய புத்தகங்களும் எங்கள் பதிப்பகத்தில் இடம்பெற்றுள்ளன. புத்தகங்களுடன் சூழலை நேசிப்பவர்களுக்குகாக எங்களது மாத இதழான ‘பூவுலகு’ மற்றும் சிறுவர்களுக்கான ‘மின்மினி’ மாத இதழும் உள்ளன.

எனக் கூறிக் கொண்டே ஒரு குட்டி இளம் வாசகர் கேள்விக்கு பதில் சொல்ல நம்மிடமிருந்து விடைபெற்றார்.  

இயற்கை அறிவியலாளர் நம்மாழ்வாரை ஆசானாக ஏற்றுக் கொண்டு தொடர்ந்து சூழலியல் சார்பாகத் தொடர்ந்து இயங்கி வரும் ’இயல்வாகை’ அரங்கத்திலிருந்து...

சென்னை புத்தகக் காட்சியில் அரங்கு எண் 585-ல் அமைந்துள்ள ’இயல்வாகை’ புத்தக அரங்கம் வாசகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை நிச்சயம் அளிக்கும்.

சென்னை புத்தகக் காட்சியில் அமைந்துள்ள புத்தக அரங்குகளில் நாளா பக்கமும் மின்விசிறிகள் இயங்கிக் கொண்டிருக்க இயல்வாகை மட்டுமே மின்விசிறி இல்லாமல் நம்மை வரவேற்கின்றது

அதுமட்டுமல்லாது நாட்டு காய்கறி விதைகளை தங்களது அரங்கில் ’இயல்வாகை’ அமைப்பினர் காட்சிப்படுத்தியுள்ளனர்.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாட்டு விதைகள், அரங்கில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள்

’இயல்வாகை’ பதிப்பகத்தை பற்றி விளக்குகிறார், அவ்வமைப்பைச் சேர்ந்த அழகேஸ்வரி, “நம்மாழ்வார் இயற்கை விவாசாயம் சார்ந்த புத்தகங்கள், இயற்கை வாழ்வியல் சார்ந்த புத்தகங்கள், உணவு மருத்துவம் சார்ந்த புத்தகங்கள் இவைதான் எங்கள் அரங்கில் இடம்பெற்றுள்ள பிரதான புத்தகங்கள்.

வாசகர்கள் அவசியம் படிக்க ’இயற்கைக்கு திரும்பும் பாதை’,ஒற்றை வைக்கோல் புரட்சி’, ஜே.சி குமரப்பாவின் பொருளாதாரம் தொடர்பான புத்தகங்கள், கோவை சதாசிவம் அவர்களின் காட்டுயிர்களுக்கான புத்தகங்கள் எங்கள் அரங்கில் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் குழந்தைகளுக்காக ’பஞ்சுமிட்டாய்’, ’தும்பி’, ’குட்டி ஆகாயம்’ போன்ற சிறுவர் மாத இதழ்களும் உள்ளன.  

இவற்றுடன் மாற்று கல்வி, மருந்தில்லா மருத்துவம் தொடர்பான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

புத்தகங்கள் மட்டுமல்லாது நமது உணவு வழக்கத்தில் அரிதாகிப் போன காய்கறிகளை எங்களது அரங்கில் பார்வைக்காக வைத்திருக்கிறோம்.

சுரைக்காயில் செய்த இசைக் கருவியையும் அரங்கில் பார்வைக்காக வைத்திருக்கிறோம். இதனை குழந்தைகள் ஆர்வமாக பார்த்துச் செல்கிறார்கள்.

சுரைக்காயில் செய்யப்பட்ட இசைக் கருவி

எங்கள் அரங்கு முழுவதும் நமது அன்றாக வாழ்வில் வீணானவை என்று தூக்கி எறியப்பட்ட பொருட்களால் உருவாக்கியுள்ளோம். இதனால் வாசகர்கள் ஆர்வமாக எங்களது அரங்கைப் பார்வையிடுகின்றனர் என்கிறார்.

வாசகர்களே வாய்ப்பிருந்தால் இந்த அரங்குகளுக்கு சென்று விட்டு வாருங்கள்... இயற்கையை இன்னும் நேசிப்பீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x