Last Updated : 06 Jan, 2018 09:54 AM

 

Published : 06 Jan 2018 09:54 AM
Last Updated : 06 Jan 2018 09:54 AM

ஆதரவற்றோரின் ஆபத்பாந்தவன் தவசிமணி

தரவற்றவர்களை, அவர்கள் இருக்கும்போதும் சரி, இறப்புக்குப் பிறகும் சரி, சமூகம் ரொம்பவே ஒதுக்கிவிடுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 1,000-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் சடலங்களை தகனம் செய்து சேவை செய்திருக்கிறார் நாகர்கோவில் இளைஞர் தவசிமணி (33). இதுமட்டுமின்றி, முதியோர், வழிதவறி வந்தவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களை காப்பகங்களில் ஒப்படைக்கும் பணியையும் செய்து வருகிறார்.

தவசிமணியின் சொந்த ஊர் நாகர்கோவில். அப்பா மறைவுக்குப் பிறகு அம்மா, ரப்பர் தோட்டத்தில் வேலை செய்கிறார். அக்கா, 2 அண்ணன்கள் திருப்பூரில் வணிகம் செய்கின்றனர். சிறு வயதில் இருந்தே மற்றவர்களுக்கு உதவும் இயல்பு கொண்டவர் தவசிமணி. தன்னால் இயன்ற சின்னச் சின்ன உதவிகளை செய்து வந்தார். ஆதரவற்றோருக்கு உதவும் சென்னை ஆனந்தியம்மாவின் சேவை அவரை வெகுவாக ஈர்த்தது. உடனே குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி சென்னைக்கு புறப்பட்டார். தண்டையார்பேட்டையில் உள்ள ஆனந்தியம்மாவை சந்தித்து அவரது ‘உதவும் கைகள்’ அமைப்பில் இணைந்து பணியாற்றினார். அங்கு கிடைத்த அனுபவத்தைக் கொண்டு, சென்னையில் ஆதரவற்றோருக்கு உதவி வருகிறார்.

சாலைகளில் முதியவர்கள் யாராவது ஆதரவின்றித் திரிவதைக் கண்டதால், உடனே அவர்களிடம் சென்று பேசத் தொடங்குகிறார். அவர்களுக்கு உறவினர்கள் இருக்கிறார்களா என்பதை விசாரித்து, அவர்களிடம் ஒப்படைக்க முயற்சி எடுக்கிறார். ஆதரிக்க யாரும் இல்லை என்றால், போலீஸாரின் உதவியுடன் அவர்களை அரசு காப்பகம் அல்லது தனியார் இல்லத்தில் சேர்க்கிறார். இதில் இவருக்கு சட்டரீதியான உதவிகளை வழங்குகிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சக்திராணி.

மேலும், அடைக்கலம் தர ஆளில்லாமல் தவித்து, கடைசியில் ஆதரவின்றி இறப்பவர்களின் உடலை உரிய மரியாதையுடன் தகனம் செய்யவும் உதவுகிறார். இந்த சேவை தனக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாக கூறும் தவசிமணி தொடர்ந்து நம்மிடம் கூறியது:

ஆதரவற்றோர் சடலங்களை தானாக முன்வந்து தகனம் செய்வவதில் சட்ட சிக்கல்கள் உண்டு. எனவே, சில நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். ஆதரவற்றோரின் சடலத்தை தகனம் செய்ய உதவுமாறு காவல்நிலையத்தில் இருந்து அழைப்பு வரும். உடனே அரசு மருத்துவமனைக்குச் சென்று, சடலத்தை அரசு வாகனத்தில் எடுத்து வருவேன். சுடுகாட்டில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து, தகனம் முடிந்ததும் அதற்கான ரசீதை காவல்துறையினரிடம் ஒப்படைப்பேன். சட்டச் சிக்கலை தவிர்க்க இந்த நிகழ்வு முழுவதையும் வீடியோவில் பதிவு செய்துகொள்வேன். இதுபோல கடந்த 10 ஆண்டுகளில் 1,000-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் சடலங்களை நல்லடக்கம் செய்துள்ளேன் என்று கூறினார்.

சமீபத்தில் ஒருநாள் வழிதவறி வந்துவிட்ட திருச்செந்தூரைச் சேர்ந்த 19 வயது பெண்ணை இ-சேவை மையத்துக்கு அழைத்துச் சென்றார். அவரது பெருவிரல் ரேகையைப் பதிவு செய்து அவரைப் பற்றிய ஆதார் விவரங்களைத் தெரிந்துகொண்டார். டிஜிபி அலுவலகத்தின் உதவியைப் பெற்று, திருச்செந்தூர் போலீஸார் மூலமாக அந்தப் பெண்ணின் தந்தையை வரவழைத்து பத்திரமாக ஒப்படைத்ததை உணர்ச்சி பொங்க கூறுகிறார் தவசிமணி.

வழிதவறிச் செல்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்களை ஆதார் எண் மூலம் அறிந்துகொள்ளும் வசதி, உதவி காவல் ஆணையர் அலுவலகங்களில் இருந்தால் குழந்தைகள், இளம்பெண்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களை தவறாகப் பயன்படுத்துவோரிடம் இருந்து காப்பாற்ற முடியும் என்ற யோசனையையும் முன்வைக்கிறார் தவசிமணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x