Published : 11 Nov 2017 09:40 AM
Last Updated : 11 Nov 2017 09:40 AM

சர்க்கஸ் கம்பெனியைக் கட்டிக்கிட்டேன்’: சளைக்காத சர்க்கஸ் கோமாளி துளசிதாஸ் சவுத்ரி

கோ

வையில் 60 நாள், ஒசூரில் 40 நாள், மைசூருவில் 50 நாள் என நகர்ந்து தற்போது புணேயிலுள்ள சங்கிலி நகரில் மையம் கொண்டிருக்கிறார் பாம்பே சர்க்கஸ் கோமாளி துளசிதாஸ் சவுத்ரி!

சர்க்கஸ் என்றாலே கோமாளிகள் இருக்கத்தான் செய்வார்கள். அப்படியிருந்தும் துளசிதாஸைப் பற்றி பிரத்தியேகமாக பேசுகிறோம் என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. சுமார் மூன்றடி உயர மனிதரான துளசிதாஸ், பழமை மிக்க பாம்பே சர்க்கஸ் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் முதன்மைக் கோமாளி. இவருக்கு இப்போது வயது 72. ஐம்பத்தெட்டு வயதில் இவருக்கு பென்சனுடன் ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டது சர்க்கஸ் கம்பெனி. ஆனால், உழைக்காமல் உட்கார்ந்து கொண்டு பென்சன் வாங்குவது சரியில்லை என்று சொல்லி, மீண்டும் சர்க்கஸ் கம்பெனிக்கே வந்து ரசிகர்களுக்கு கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறார் துளசிதாஸ்.

விளையாட்டுப் போக்காய்..

அண்மையில் கோவை வந்திருந்த துளசிதாஸ் சவுத்ரியைச் சந்தித்து அவரது வாழ்க்கை அனுபவங்களைக் கேட்டோம். “எனக்கு அப்ப 11 வயசு. பிஹார் மாநிலத்திலுள்ள சப்ரா சிட்டியில் ஏழாம் வகுப்பு படிச்சிட்டுருந்தேன். அப்பவே எனது குள்ள உருவம் மற்றவங்களுக்கு வேடிக்கையா இருக்கும். என்னதான் என்னைப் பார்த்து கிண்டல் செய்தாலும் அதையெல்லாம் காதுல ஏத்திக்காம நானும் விளை யாட்டுக் காட்டிச் சிரிக்க வைப்பேன்.

அப்ப, சர்க்கஸ்கள்ல என்னை மாதிரி ஆளுக ரொம்பப் பிரபலம். நானும் என்னை மாதிரியான குள்ளமான ஆட்கள் சர்க்கஸில் கோமாளிகளா வந்து சேட்டை செய்யுறத பார்த்து கைதட்டி ரசிச்சிருக்கேன். அப்படி 1959-ல், எங்க ஊருல பாம்பே சர்க்கஸ் போட்டிருந்தாங்க. அங்க வித்தை காட்டுன கோமாளிகள் சில ரோட சேர்ந்து நானும் சில வித்தைகளைக் கத்துக்கிட்டேன். பல்டி அடிப்பேன். ஜம்பிங் செய்வேன். நெருப்பு வளையத்துக்குள்ளே போய் வருவேன். விலங்குகளின் கூண்டுக்குள்ள நுழைஞ்சு, அதுகளோட வாலைப் பிடிச்சு திருகிட்டு ஓடுவேன். இதை யெல்லாம் விளையாட்டுப் போக்காய் செஞ்சுட்டு இருந்த நான், ஒரு கட்டத்துல பாம்பே சர்க்கஸ்லயே வேலைக்குச் சேர்ந்துட்டேன். அப்ப, ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் சம்பளம் தருவாங்க. ஆனா இப்ப, சர்க்கஸ் கோமாளிக்கு மாதச் சம்பளம் பதினைந்தாயிரம் ரூபாய்!

பாம்பே சர்க்கஸ்ல பர்மனென்ட் ஊழியரா இருந்த எனக்கு, 58 வயசுல ஓய்வும் குடுத்துட்டாங்க. ஆனா, ரெண்டு வாரம்கூட ஊர்ல போய் இருக்க முடியலை. சர்க்கஸ்தான் என்னோட குடும்பம்; நிம்மதின்னு அப்பத்தான் தெரிஞ்சுது. திரும்பவும் எங்க சர்க்கஸ் கம்பெனிக்கே வந்துட்டேன். எங்க பாஸ் (முதலாளி), ‘வயசான காலத்துல ஓய்வு எடுத்துட்டு சந்தோஷமா இருன்னு’ எவ்வளவோ சொன்னாரு. ஆனா, இந்த சர்க்கஸ் கம்பெனி தான் என்னோட சந்தோசம்; இதுதான் என்னோட உலகம்’ன்னு சொல்லி போக மறுத்துட்டேன். அதனால, பாஸும் என்னைய இங்கேயே இருக்க அனுமதிச்சுட்டாரு. இனி, என் உயிருள்ள வரை எனக்கு இந்த சர்க்கஸ் கம்பெனி தான்” என்று உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார் துளசிதாஸ்.

துளசிதாஸுக்கு கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை என்றாலும் உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்க ளெல்லாம் பிஹாரில்தான் இருக்கிறார்கள். அங்கு இவருக்கு வீடு, நிலங்கள் இருக்கின்றன. இருந்தாலும் அதெல்லாம் இவருக்கு பெரிதாகத் தெரியவில்லை. “வயது இத்தனை ஆகிவிட்டதே.. திருமணம் செய்து கொள்ளவில்லையா?” என்று கேட்டால் வெட்கத்துடன் சிரிக்கிறார் துளசி.

சர்க்கஸ் கம்பெனியைக்கட்டிக்கிட்டேன்

“பாம்பே சர்க்கஸ் கம்பெனிக்காக இந்தியா முழுசும் போயிட்டு இருக்கேன். வெவ்வேறு மாநிலம், வெவ் வேறு ஜில்லாக்கள்ல இருந்து வந்த பொண்ணுங்க எங்க கம்பெனியில சாகசங்கள் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க எல்லாருமே என்கிட்ட அன்பா பழகுவாங்க. சிலபேரு போனிலும், நேரிலும் கூட காதல் மொழி பேசியிருக்காங்க. ஆனா, என்னைய கல்யாணம் பண்ணிக்கிறீங்களான்னு யாருக்கிட்டயும் நான் கேட்டதில்லை. இதெல்லாம் ரொம்ப காலத்துக்கு முன்ன நடந்தது. இப்ப நமக்கு கல்யாணம் என்ற நினைப்புக்கூட வர்றதில்லை. ஏன்னா, நான்தான் சர்க்கஸ் கம்பெனிய கட்டிக்கிட்டேனே!” என்கிறார் துளசிதாஸ்.

ஓய்வு பெறுவதற்கு முன்பு, பார் விளையாட்டு, அந்தரத்தில் தாவுதல், நெருப்பு வளையத்தில் சென்று வருதல் உள்ளிட்ட சாகசங்களை செய்வாராம் துளசிதாஸ். ஆனால் இப்போது, பல்டிகூட அடிக்க முடிவதில்லையாம். “இருந்தாலும் இந்த பஃபூன் வேஷம் கட்டி வந்தாலே என்னைப் பார்த்து ஜனங்க சிரிக்கிறாங்க. சின்னக் குழந்தைகள் சேட்டை பண்ணி சிரிக்குதுங்க. அதுவே எனக்கு சந்தோஷம்” என்று சொல்லும் துளசிதாஸ், தமிழில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்திலும் இந்தி, மராட்டி உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x