

புளி ரசம், எலுமிச்சை ரசம், தக்காளி ரசம், பைனாப்பிள் ரசம் போன்ற பலவகை ரசங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த முருங்கைக்கீரை ரசம், புதியது. சுவையிலும் மணத்திலும் தனித்துவம் மிக்கது. அதைச் செய்யக் கற்றுத் தருகிறார் கோவையைச் சேர்ந்த ஜோதிமணி. முருங்கைக்கீரையில் ரசத்துடன் பருப்பு குழம்பும் செய்யலாம் என்பதுடன் அதன் செய்முறையையும் சொல்கிறார். பச்சைப் பயறு குழம்பு, பீர்க்கங்காய் தொக்கு ஆகியவற்றுக்கும் ஜோதிமணியே பக்குவம் சொல்கிறார். சமைத்து, ருசியுங்கள்.
என்னென்ன தேவை?
முருங்கைக்கீரை - 1 கட்டு
சீரகம், தனியா - தலா 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
தேங்காய் - 2 சில்லு
புளி - எலுமிச்சை அளவு
உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
முருங்கைக்கீரையை கொதிக்கும் தண்ணீரில் வேகவைத்து, தண்ணீரை வடிக்கவும். சீரகம், தனியா, காய்ந்த மிளகாய், சின்னவெங்காயம், தேங்காய் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். புளியை சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்து கரைக்கவும். வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். அதில் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும். வேகவைத்த கீரை, மசாலா விழுதைச் சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். முருங்கைக்கீரைக்கு பதிலாக அகத்திக்கீரையைச் சேர்த்து மசால் அரைத்து தயாரித்தால் அது அகத்திக்கீரை ரசம். பெண்களுக்கு தாய்ப்பால் ஊற, இந்த ரசத்தைத்தான் கொடுப்பார்கள்.