

என்னென்ன தேவை?
அரிசி, கருப்பு முழு உளுந்து தலா ஒரு கப்
நெய், நல்லெண்ணெய் சிறிதளவு
இஞ்சி - பூண்டு விழுது அரை டீஸ்பூன்
பட்டை, கிராம்பு - சிறிதளவு
எப்படிச் செய்வது?
கருப்பு முழு உளுந்தை வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளுங்கள். குக்கரில் கொஞ்சம் நெய், நல்லெண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு சேர்த்துத் தாளித்துப் பிறகு இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் அரிசி, வறுத்த உளுந்து சேர்த்துக் கிளறி, இரண்டரை கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடுங்கள். நான்கு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை நெய்யில் முறுகலாக வறுத்து, சாதத்தின் மேலே தூவிப் பரிமாறுங்கள்.
தெளி உளுந்து சாதத்துக்கு எள் துவையலை விட்டால் வேறு இணை இல்லை. எள்ளையும் காய்ந்த மிளகாயையும் வறுத்துக்கொள்ளுங்கள். இரண்டு பூண்டுப் பல்லை வதக்கி, அதனுடன் வறுத்த எள், காய்ந்த மிளகாய், உப்பு, புளி, தேங்காய் சேர்த்து அரைத்தால் அருமையான எள் துவையல் தயார்.
உளுந்து சாதம், கருப்பையை வலுப்படுத்தும். மாதவிடாய் கோளாறுகள் நீங்கவும் பெண்களின் இடுப்பு வலிமைக்கும் இந்தத் தெளி உளுந்து சாதம் பக்கபலமாக இருக்கும்.
- ராஜபுஷ்பா