

என்னென்ன தேவை?
நெத்திலிக் கருவாடு - 100 கிராம்
கத்திரிக்காய் 3
மொச்சைப் பயறு 25 கிராம்
புளி 1 எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி 2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1 சிட்டிகை
சின்ன வெங்காயம் 10
பூண்டு 1
தக்காளி 2
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
சீரகம், வெந்தயம் தலா 1 டீஸ்பூன்
நசுக்கிய சின்ன வெங்காயம், நசுக்கிய பூண்டு - தலா 5
எப்படிச் செய்வது?
கருவாட்டை நன்றாக அலசி வைக்கவும். மொச்சைப் பயறை வறுத்து, இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். புளியைக் கரைத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், வெந்தயம் போட்டுத் தாளிக்கவும். வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, பூண்டை நசுக்கிச் சேர்க்கவும். பூண்டு வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கி, கத்திரிக்காய், மொச்சைப் பயறு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பின் சாம்பார் பொடி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், நசுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலைச் சேர்க்கவும். உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். குழம்பு வாசனை வந்தவுடன் தீயை மிதமாக்கி கருவாட்டைச் சேர்த்து சிறிது நேரத்தில் இறக்கவும். வரகரிசி சோற்றில் இந்தக் கருவாட்டுக் குழம்பை ஊற்றிச் சாப்பிட, சுவையாக இருக்கும்.