

தொகுப்பு: பி.டி.ரவிச்சந்திரன்
சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடச் சமையலைக்கூடக் கொஞ்சம் சிரத்தையுடன் பாரம்பரியமும் புதுமையும் கலந்து சமைத்தால் உணவு வேளை இனிதாகும். பலருக்கும் தெரிந்த உணவைப் புதுச் சுவையுடன் சமைக்கக் கற்றுத்தருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த வசந்தா.
மோர்க்குழம்பு
என்னென்ன தேவை?
மோர் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 4, துவரம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, மிளகாய் வத்தல் - 2, உப்பு - தேவையான அளவு
எப்படிச் சமைப்பது?
சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், ஊறவைத்த துவரம் பருப்பு, தேங்காய்த் துருவல், மஞ்சள் தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள், வரமிளகாய், அரைத்த மசாலா ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றித் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும். கலவை நன்றாகக் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, மோரை அதில் ஊற்றிக் கலக்க வேண்டும்.