Published : 01 Mar 2020 11:23 AM
Last Updated : 01 Mar 2020 11:23 AM

தலைவாழை: நூல்கோல் சூப்

தொகுப்பு: ப்ரதிமா

மாசி மாதத்திலேயே வெயில் தொடங்கிவிட்டது. வெயிலில் அதிகமாக அலைந்து திரிந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதைச் சமப்படுத்த போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதுடன் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நூல்கோலில் நீர்ச்சத்துடன் சில வகை வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகளும் உள்ளன. இந்தக் காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். நூல்கோல் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை போரூரைச் சேர்ந்த ராஜகுமாரி.

என்னென்ன தேவை?

நூல்கோல் சிறியது - 1
கேரட் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1
அரிந்த மல்லித்தழை - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
பச்சைப் பட்டாணி - 1 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

தோல் சீவிய நூல்கோலைப் பொடியாக அரிந்து தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடுங்கள்.
நூல்கோல் அரை வேக்காடு வெந்ததும் தக்காளியைப் பொடியாக அரிந்து சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கிவிடுங்கள். சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக்கொள்ளுங்கள். பச்சைப் பட்டாணியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவிடுங்கள். வாணலியில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதில் கேரட் துருவலைச் சேர்த்து வதக்குங்கள். ஊறவைத்த பட்டாணியைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு இரண்டு கொதி விடுங்கள். பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கலந்து மிளகுத் தூளைத் தூவுங்கள். சோள மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து, கொதிக்கும் சூப்பில் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி மல்லித்தழையைத் தூவிப் பரிமாறுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x