

ஆடி மாதத்தில் கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடும் நதிகளுக்கு நன்றி சொல்லும் நாளாக ஆடிப் பெருக்கு கொண்டாடப்பட்டது. இன்று நதிகள் மணல் பரப்புகளாக மாறிப் போனாலும் ஆடிப் பெருக்கு கொண்டாட்டத்தை மக்கள் தொடர்கின்றனர். கலந்த சாத வகைகளுடன் வடை, பாயசமும் நிவேதனத்தில் இடம் பெறும். பாரம்பரிய படையலை சிறுதானியங்களில் செய்தால் ஆரோக்கியம் கூடும் என்பதுடன் அவற்றுக்கான செய்முறையும் தருகிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா.
இஞ்சி சாதம்
என்னென்ன தேவை?
சாமை – 1 கப்
இஞ்சித் துருவல் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
தனியா, உளுந்து - தலா 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - கால் டீஸ்பூன் - 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5
தாளிக்க
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
சாமையை வறுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உதிரியாக வடித்துக்கொள்ளுங்கள். அரைத்தப் பொடியுடன் இஞ்சி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு கலந்து அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள் பெருங்காயம், உப்பு, சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்தச் சாமை சாதம் பசியைத் தூண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியம் அதிகரிக்கும், முகப்பொலிவு கூடும்.
ராஜபுஷ்பா