Published : 22 Dec 2019 10:09 AM
Last Updated : 22 Dec 2019 10:09 AM

தலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து - நெய் மட்டன் கறி

தொகுப்பு, படங்கள்: வி.சாமுவேல்

எப்போதும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மை நாமே உணரவும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தவைதாம் பண்டிகைகள்.

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் என்றாலும் அனைத்துமே மகிழ்ச்சியையும் மனித நேயத்தையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்டவை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையும் அன்பையும் சமாதானத்தையும் பரப்பத் தவறுவதில்லை.

அவற்றுடன் சேர்த்து நாவூறச்செய்யும் பலகாரங்களையும் சேர்த்தே இந்தப் பண்டிகை நமக்குப் பரிசாகத் தருகிறது. கிறிஸ்துமஸ் நாளன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த வி. செல்வி.

நெய் மட்டன் கறி

என்னென்ன தேவை?

ஆட்டுக்கறி - ஒரு கிலோ
நெய் - 100 கிராம்
பட்டை, லவங்கம் - சிறிதளவு
கரம் மசாலாத் தூள், மட்டன் மசாலாத் தூள் - தலா ஒரு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்
வெங்காயம், தக்காளி - தலா கால் கிலோ
மிளகு, தனியா, சீரகம், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சீரகம், மிளகு, தனியா, சோம்பு ஆகிய நான்கையும் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். ஆட்டுக்கறியை குக்கரில் இரண்டு விசில் வரும்வரை வேகவைக்க வேண்டும். அகலமான பாத்திரத்தில் நெய் ஊற்றிச் சூடானதும் அதில் பட்டை, லவங்கம் போட்டுத் தாளிக்க வேண்டும். பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியைப் போட்டு வதக்க வேண்டும்.

தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். தக்காளி நன்றாகக் கரைந்து வதங்கியதும் தீயைக் குறைத்து இஞ்சி - பூண்டு விழுதைப் போட்டு வதக்க வேண்டும். வேகவைத்த கறியைத் தண்ணீரோடு ஊற்ற வேண்டும். அரைத்து வைத்த மசாலா கலவை, மட்டன் மசாலா, கரம் மசாலா ஆகியவற்றைப் போட்டு நன்கு கொதிக்கவிட வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி, கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால் நெய் மட்டன் கறி தயார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x