

தொகுப்பு:ப்ரதிமா
மழைக்காலத்தில் அவ்வளவாகத் தாகம் எடுக்காது. இதனால், பலரும் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீரைக் குடிக்க மாட்டோம். அதனால் வழக்கமான உடலியல் செயல்பாடுகள் பாதிப்படைவதைக்கூட நாம் உணர்வதில்லை. உடலின் நீர்த் தேவையைச் சமாளிக்க நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிடலாம் என்கிறார் சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன். நீர்ச்சத்து அதிகமுள்ள முள்ளங்கியில் பராத்தா, பிரியாணி, வத்தக் குழம்பு உள்ளிட்ட சுவையான உணவு வகைகளைச் செய்யவும் அவர் கற்றுத்தருகிறார்.
வற்றல் குழம்பு
என்னென்ன தேவை?
முள்ளங்கி – 2
மஞ்சள் பொடி, காரப் பொடி, சாம்பார் பொடி, உப்பு – தலா அரை டீஸ்பூன் வெல்லம் – சிறு கட்டி
கறிவேப்பிலை – சிறிது
கெட்டியாகக் கரைத்த புளிக்கரைசல் – கால் கப்
வதக்க
வெங்காயம், தக்காளி – தலா 1
பச்சை மிளகாய் – 1
பூண்டு – நான்கு பல்
வறுத்துப் பொடிக்க:
தனியா, கடலைப் பருப்பு, உளுந்து, மிளகு, சோம்பு – தலா ஒரு டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 2
வெந்தயம் – அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 100 கிராம்
எப்படிச் செய்வது?
வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வதக்கக் கொடுத்த பொருட்களைத் தனியாகவும் தக்காளி, வெங்காயத்தைத் தனியாகவும் வதக்கி அரைத்துக் கொள்ளுங்கள். இதில் உப்பு, மஞ்சள் தூள், காரப் பொடி, சாம்பார் பொடி ஆகியவற்றைச் சேர்த்து, கரைத்துவைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைப் போட்டுத் தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், நறுக்கிய முள்ளங்கி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். காய் வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்கவிட்டு, பச்சை வாசனை போனதும் கரைத்துவைத்துள்ள மசாலாவைச் சேர்த்துக் கொதிக்க விடுங்கள்.
அதனுடன் அரை கப் தண்ணீரில் வெல்லம் சேர்த்துக் கரைத்து ஊற்றி, கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்ததும் கறிவேப்பிலையையும் நல்லெண்ணைய்யையும் சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள்.