

என்னென்ன தேவை?
ரவை - 2 கப்
தயிர் - 200 மி.லி
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறு துண்டு
கேரட் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு, கடலைப் பருப்பு - தலா 1 டீஸ்பூன்
முந்திரி - 10
எப்படிச் செய்வது?
ரவையைச் சிவக்க வறுக்கவும். கேரட்டைத் துருவிக்கொள்ளவும். வறுத்த ரவையில் தயிர், உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். இதை மூன்று மணிநேரம் ஊறவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.
ஊறிய ரவைக் கலவையில் இதைக் கொட்டவும். அதனுடன் துருவிய கேரட், நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை இட்லித் தட்டில் எண்ணெய் தடவி ஊற்றி, ஆவியில் வேகவிடவும். இட்லி மாவைவிடச் சற்றுக் கூடுதலாக வேகவிட்டு எடுக்கவும். காரச் சட்னி இதற்குச் சரியான இணை.