Published : 03 Jan 2016 02:09 PM
Last Updated : 03 Jan 2016 02:09 PM

குறிப்புகள் பலவிதம்: சளியை விரட்டும் துளசி

பனியை வெல்லும் முன்னேற்பாடு களுடன் இருந்தால் பனியில்லாத மார்கழியா என்று நாமும் பாடலாம்.

# தினமும் காலை சிறிது இஞ்சியும் மிளகும் தட்டிப்போட்ட தேநீர் குடிக்கலாம். இரவில் மிளகு, மஞ்சள், சுக்கு போட்டுக் காய்ச்சிய பாலைக் குடித்தால் சளி, இருமல் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம்.

# இவற்றைச் செய்ய நேரமில்லையென்றால் டீயில் ஓரிரு துளசி இலைகளைப் போட்டு கொதிக்கவைத்துக் குடிக்கலாம்.

# சுக்கைப் பொடித்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சளித் தொந்தரவு அண்டாது.

# வெண்ணெயில் சிறிது ஏலக்காய்த் தூளைச் சேர்த்துச் சாப்பிட்டால் சளித் தொல்லை நீங்கும்.

# பனிக்காலம் வந்துவிட்டாலே பலருக்கும் சருமம் உலர்ந்துவிடும், பாதங்களில் வெடிப்பு ஏற்படும். பாத வெடிப்புகளில் எலுமிச்சை சாறு தடவி ஊறவைத்துக் கழுவுங்கள். பிறகு விளக்கெண்ணெயில் சிறிது மஞ்சளைக் குழைத்துத் தடவினால் வெடிப்பு குணமாகும்.

# பனிக்காலத்தில் சிலருக்கு உடல்சூடு ஏற்பட்டுவிடும். அவர்கள் பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அரிசி, கோதுமை, முந்திரிப் பருப்பு ஆகிய உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

# பன்னீரில் சிறிது கிளிசரின் கலந்து இரவு தூங்கப் போகும் முன் கை, கால் விரல்களில் தேய்த்துக் கொண்டால் சருமம் மிருதுவாகும்.

# தினசரி உணவில் வெங்காயம், பூண்டு, வெந்தயத்தைச் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

# குளிர்காலத்தில் சோப்புக்குப் பதில் கடலை மாவு, பாசிப் பயறு மாவு ஆகியவற்றைத் தேய்த்துக் குளித்தால் சருமம் பொலிவு பெறும்.

- வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்.

# கேரட், தக்காளி, முட்டைக்கோஸ், பீட்ரூட் இவற்றுள் ஏதாவது ஒன்றை தினமும் சூப் வைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும்.

# சாப்பிட்டு வெகுநேரம் கழித்தும் சிலருக்கு ஜீரணமாகாமல் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அவர்கள் சிறிது சீரகத்தை வாயில் போட்டு மென்று, வெந்நீர் குடித்தால் சரியாகிவிடும்.

# அரிசி களைந்த நீரில் பருப்பை வேகவைத்தால் சாம்பார் சுவையுடன் இருப்பதோடு பருப்பும் வேகும்.

# இஞ்சித் தோலை நன்றாகக் கழுவி மோரில் போட்டால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

- ஆர். மீனாட்சி, திருநெல்வேலி.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x