Last Updated : 10 Jul, 2016 03:34 PM

 

Published : 10 Jul 2016 03:34 PM
Last Updated : 10 Jul 2016 03:34 PM

குறைவில்லாச் சுவையில் குடைமிளகாய் அல்வா!

அடிக்கடி கத்தரி, வெண்டை, உருளை என ஒரே விதமான காய்கறிகளைப் பயன்படுத்துபவர்கள், எப்போதாவதுதான் சமையலறையில் குடைமிளகாய்க்கு இடம் தருவார்கள். அதுவும் சாம்பார், ஃப்ரைட் ரைஸுக்கு மட்டுமே குடைமிளகாயைப் பயன்படுத்துவார்கள். ‘‘நீர்ச்சத்து நிறைந்த குடைமிளகாயில் வைட்டமின் சி, பி 6 இரண்டும் நிறைந்திருக்கின்றன. வயிற்றுப் புண், மாதவிடாய் பிரச்சினை, நீரிழிவு ஆகியவற்றுக்கு உகந்தது’’ என்று சொல்கிறார் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த உஷா. குடைமிளகாயில் அல்வாகூடச் செய்யலாம் என்று சொல்லும் இவர், விதவிதமான குடைமிளகாய் பதார்த்தங்கள் சிலவற்றைச் செய்யக் கற்றுத்தருகிறார்.

என்னென்ன தேவை?

குடைமிளகாய் விழுது ஒன்றரை கப்

பாசி பருப்பு அரை கப்

ஜவ்வரிசி ஒரு டேபிள் ஸ்பூன்

சர்க்கரை ஒன்றரை கப்

நெய் முக்கால் கப்

ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன்

முந்திரி, திராட்சை தலா 10

பால் ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

குடைமிளகாயைத் துண்டுகளாக்கி விதைகளை நீக்கி, விழுதாக அரையுங்கள். ஜவ்வரிசியில் சிறிது தண்ணீர் ஊற்றி ஊறவையுங்கள். பாசிப் பருப்பை வெறும் வாணலியில் வறுத்து (லேசாக வறுத்தாலே போதும்) ஜவ்வரிசி சேர்த்து குக்கரில் வேகவையுங்கள்.

அடி கனமான வாணலியில் குடைமிளகாய் விழுது, பாசிப் பருப்பு ஜவ்வரிசி கலவை சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். மற்றொரு வாணலியில் சர்க்கரையைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டுக் கரைந்ததும் பால் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். மேலே திரண்டுவரும் கசடை நீக்குங்கள்.

கம்பிப் பாகு பதம் வந்ததும் அதில் குடைமிளகாய் பாசிப் பருப்பு விழுதைச் சேர்த்து, சுருளக் கிளறுங்கள். சற்றுக் கெட்டியானதும் நெய் ஊற்றி, ஏலக்காய்த் தூள் தூவிக் கிளறுங்கள். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்த்து இறக்கிவையுங்கள். குடைமிளகாயின் காரம் சிறிதும் இல்லாத பச்சை வண்ண அல்வா தயார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x