

இன்று மக்களுக்கு இருக்கும் அவசரத்துக்குக் காலையில் விதை போட்டால் மாலையில் பழம் பறித்துவிடத் துடிக்கிறார்கள். இரண்டு நிமிடத்துக்கு மேல் எதற்கும் பொறுப்பதில்லை. மக்களின் இந்த அவசர மனப்பாங்கைப் புரிந்துகொண்டதால்தான் துரித உணவு, டப்பா உணவு போன்றவற்றைத் தயாரிப்பவர்கள் பெரும் லாபம் சம்பாதித்துவருகிறார்கள்.
பதப்படுத்தப்பட்ட, ரசாயனப் பொருட்கள் பெருமளவில் கலக்கப்பட்ட உணவு வகைகள் தீங்கானவை என்கிறார் சென்னை திருமழிசையைச் சேர்ந்த ஆதிகாமாட்சி. எளிய முறையில் செய்யக்கூடிய ஆரோக்கிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.
திணை-பருத்திப் பால் பாயசம்
என்னென்ன தேவை?
திணை – அரை கப்
பருத்திப் பால் - 1 ௧ப்
பாசிப் பருப்பு – கால் கப்
ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி – தலா ஒரு சிட்டிகை
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
முந்திரிப் பருப்பு, திராட்சை – தலா 10
நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் - சிறிதளவு
வெல்லம் – ஒரு கப்
தேங்காய்ப் பால் (முதல் பால்) – ஒரு கப்
இரண்டாம் தேங்காய்ப் பால் – ஒரு கப்
எப்படிச் செய்வது?
வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, தேங்காய்த் துண்டுகள் ஆகியவற்றைத் தனித்தனியாகப் போட்டு வறுத்து வைத்துக்கொள்ளுங்கள். திணை, பாசிப் பருப்பு இரண்டையும் இரண்டாம் தேங்காய்ப் பாலில் வேகவைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பக்கம் வெல்லத்தைப் பாகு காய்ச்சி இன்னொரு பக்கம் பருத்திப் பாலை வாணலியில் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்கவிடுங்கள். வெல்லப்பாகைக் கொதிக்கும் பருத்திப் பாலில் சேர்த்துக் கலக்குங்கள். அதில் ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி இரண்டையும் சேருங்கள்.பின்பு வேகவைத்த திணை, பாசிப் பருப்புக் கலவையை அதில் சேர்த்து கடைசியாக முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி இறக்கிவிடுங்கள். சத்து நிறைந்த இந்தப் பருத்திப் பால் பாயசம், உடலுக்குக் குளிர்ச்சி தரும்