

கொளுத்தும் வெயிலில் இருந்து விடுபட்டுக் குளிர்ச்சியை அனுபவிக்க காஷ்மீருக்கும் சிம்லாவுக்கும் போக முடியாது. ஆனால், காஷ்மீரத்து உணவு வகைகளைச் சமைத்து அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்கிறார் சென்னை போரூரைச் சேர்ந்த எஸ்.ராஜகுமாரி.
அவற்றில் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார். நம் வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்தே காஷ்மீர் உணவைச் சமைத்து ருசிக்கலாம்.
காஷ்மீர் தம் ஆலு
என்னென்ன தேவை?
உருளைக் கிழங்கு (சிறியது) – 6
தயிர் – 1 கப்
உப்பு – தேவைக்கு
காஷ்மீரி மிளகாய்த் தூள்
- 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள், தனியாத் தூள்
– தலா 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சீரகத் தூள், சுக்குத் தூள்
– தலா அரை டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன்
மிளகுத் தூள், சீரகம் – தலா 1 டீஸ்பூன்
லவங்கம், பட்டை – சிறிய துண்டு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
மல்லித் தழை (பொடியாக நறுக்கியது)
– 3 டேபிள் ஸ்பூன்
பொடித்த முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
உருளைக் கிழங்கை உப்பு சேர்த்து குழையாமல் வேகவையுங்கள். வெந்த உருளைக் கிழங்கைத் தோலுரித்து, முள்கரண்டியால் ஆங்காங்கே துளையிடுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் லவங்கம், பட்டை, சீரகம் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள்.
பின்னர் மஞ்சள், தனியா, சுக்கு, பெருங்காயம், கரம் மசாலா, மிளகுத் தூள், சீரகத் தூள், காஷ்மீரி மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள்.
அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதிவந்ததும் வேகவைத்துள்ள உருளைக் கிழங்கைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இரண்டு கொதி வந்ததும் தயிர் சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிடுங்கள். மல்லித் தழை, முந்திரி பொடி இரண்டையும் தூவி இறக்கினால் காஷ்மீரி தம் ஆலு தயார்.