குளிருக்கு இதமான கருணை - புளிப்புக் கூட்டு
என்னென்ன தேவை?
கருணைக் கிழங்கு – கால் கிலோ
வேகவைத்த கொண்டைக்கடலை – 100 கிராம்
வேகவைத்த துவரம் பருப்பு - 100 கிராம்
உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு
வறுத்து அரைக்க
புளி விழுது – 3 டேபிள் ஸ்பூன்
தனியா, கடலைப் பருப்பு, உளுந்து – தலா ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் – அரை மூடி
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
கருணைக் கிழங்கைத் தோல்சீவி, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். அதனுடன் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் குழைய வேகவிட்டு எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். வறுக்கக் கொடுத்தவற்றை அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு, சிவக்க வறுத்தெடுங்கள். ஆறியதும் அவற்றுடன் தேங்காய் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள்.
புளியைக் கரைத்து ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்கவிடுங்கள். புளிக் கரைசல் கொதித்த பிறகு வேகவைத்த கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, கருணைக் கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்கவிடுங்கள். குழம்பு கொதிக்கும்போது அரைத்துவைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
