Last Updated : 11 Aug, 2014 02:46 PM

 

Published : 11 Aug 2014 02:46 PM
Last Updated : 11 Aug 2014 02:46 PM

வகை வகையாக வடைகறி - பனீர் வடைகறி

இட்லிக்கு வடைகறியை மிஞ்சிய இணைகறி இல்லை. சென்னையின் சிறப்புகளில் ஒன்றாகச் சேர்க்கும் அளவுக்கு, இங்கே வடைகறி பிரபலம். கடலைப் பருப்பில் மட்டும் வடைகறி செய்வது அனைவரும் அறிந்தது. கருணைக் கிழங்கு, பனீர், சோயா, பாஸ்தா ஆகியவற்றிலும் வடைகறி செய்யலாம் என்று ஆச்சரியம் தருகிறார் சென்னை மவுலிவாக்கத்தைச் சேர்ந்த ராஜகுமாரி. அவரது வழியில் நாமும் வாரம் ஒரு வடைகறி செய்து, அனைவரையும் சுவையில் திளைக்கச் செய்வோம்.

என்னென்ன தேவை?

பனீர் செய்ய:

துருவிய பனீர் - 1 கப்

கரம் மசாலா - 1 சிட்டிகை

பச்சை மிளகாய் - 2

சோள மாவு - 1 டீஸ்பூன்

மைதா மாவு - 2 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

குழம்புக்கு:

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

பூண்டு - 5 பற்கள்

மல்லித்தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

துருவிய தேங்காய் - முக்கால் கப்

உடைத்த முந்திரி - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - சிறு துண்டு

எப்படிச் செய்வது?

துருவிய பனீருடன் கரம் மசாலா, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சோள மாவு, மைதா மாவு, உப்பு ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசையவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்த பனீரை வடைகளாகத் தட்டிபோட்டுப் பொரித்தெடுக்கவும். ஆறியதும் துண்டுகளாக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இரண்டு கொதி வந்ததும் அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்துச் சேர்க்கவும். கொதித்ததும் பனீர் வடை துண்டுகளைச் சேர்த்து இறக்கவும். மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

குறிப்பு: ராஜகுமாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x