Published : 02 Oct 2014 01:57 PM
Last Updated : 02 Oct 2014 01:57 PM
சாம்பியன்ஸ் லீக் டி20 அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெறுகின்றன. 2வது ஆட்டத்தில் பவர் ஹிட்டிங் அணிகளான தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்சும் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஐதராபாத்தில் இன்று மோதுகின்றன.
இரு அணிகளும் பேட்டிங் பவர் ஹவுஸ் என்றால் மிகையாகாது. மெக்கல்லம், டிவைன் ஸ்மித், டு பிளேசி, ரெய்னா, தோனி, டிவைன் பிராவோ, ஜடேஜா என்று கலக்குகிறது சென்னை. சேவாக், மனன் வோரா, கிளென் மேக்ஸ்வெல், ரித்திமான் சாஹா, ஜார்ஜ் பெய்லி, மில்லர் என்று அச்சுறுத்துகிறது கிங்ஸ் லெவன்.
சென்னை அணியின் உத்தி என்னவெனில் விக்கெட்டுகளை தற்காத்துக் கொண்டு கடைசியில் விட்டு விளாசுவது. மாறாக கிங்ஸ் லெவன் அணியோ அனைத்து அதிரடி மன்னன்களையும் இறக்கி அனாயாச மட்டைச் சுழற்றலில் பந்துகளை மைதானம் முழுதும் சிதறடிப்பது.
கிங்ஸ் லெவன் இன்னமும் இந்தத் தொடரில் தோற்கவில்லை. 2014ஆம் ஆண்டில் மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸை சந்தித்த கிங்ஸ் லெவன் மேற்கூறிய அணுகுமுறையில்தான் சென்னையை 3 முறையும் வீழ்த்தியது.
ஐபிஎல் போட்டியில் சேவாக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக எடுத்த அதிரடி சதத்தை தோனியும் அவரது சகாக்களும் மறந்திருக்க மாட்டார்கள், மீண்டும் ஒருமுறை தோனியின் முன்னிலையில் சேவாக் உத்வேகம் பெற்றால் சென்னை பந்து வீச்சாளர்கள் இப்போதே உஷாராவது நல்லது. ரெய்னா பதிலடி கொடுத்தார் ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை.
பந்து வீச்சில் இரு அணிகளும் பலவீனமே. ஆனால் அஸ்வின், கிங்ஸ் லெவன் அக்ஷர் படேல் ஆகியோர் வித்தியாசமானவர்கள். வேகப்பந்தில் இரு அணிகளும் சொதப்பலே. பிராவோ கடைசி ஓவர்களை சுமாராக வீசுகிறார்.
பரபரப்பான ஆட்டத்தை இன்று இரவு ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT