Published : 03 Sep 2014 05:25 PM
Last Updated : 03 Sep 2014 05:25 PM

மீனவர் பிரச்சினை: சுப்பிரமணியன் சுவாமி கருத்தைக் கண்டித்து பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பினார்.

இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில், இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 15 மீனவர்களையும், 63 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி தொடர்பாக அக்கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:

"கடந்த 2 மாதங்களில் நடைபெற்ற 15 நிகழ்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 319 மீனவர்கள், அவர்களது 62 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். பிரதமர் தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக, இந்த 319 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், துரதிருஷ்டவசமாக, மீனவர்களின் 62 படகுகள் இன்னும் இலங்கை அரசின் வசம் இருக்கின்றன.

இலங்கை அரசின் இத்தகைய மனிதாபிமானமற்ற, கொடூரமான உத்திகள் காரணமாக, படகுகள் விடுவிக்கப்படாததால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், அவர்களது குடும்பங்களுக்கும் பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி, நேற்றுமுன் தினம் வெளியான தொலைக்காட்சி நேர்காணலில், தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டாம் என இலங்கை அரசுக்கு அறிவுறுத்தியிருப்பது வேதனை அளிப்பதாகும்.

சுப்ரமணியன் சுவாமியின் இந்த கருத்து, தமிழக மீனவர்களிடம் மட்டுமின்றி, தமிழக மக்கள் அனைவரிடமும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சுப்ரமணியன் சுவாமியின் கருத்துகள், பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ கருத்தாகவோ அல்லது மத்திய அரசின் கருத்தாகவோ இருக்காது என நான் நம்புகிறேன்.

மத்திய அரசு மீது நம்பிக்கை

தங்களது வாழ்வாதாரத்திற்கான வருவாய்க்குரிய சாதனங்கள் இன்றி, தமிழக மீனவர்கள் மிகவும் மனச் சோர்வு அடைந்துள்ளனர். வரலாற்று ரீதியாக உரிமைகொண்டுள்ள பாக் நீரிணைப் பகுதியில், அமைதியான முறையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் உரிமை மறுக்கப்படுவது, மீனவர்கள் மத்தியில் மிகுந்த வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. வேதனையடைந்துள்ள மீனவர்கள், ஆர்ப்பாட்டங்களிலும், வேலை நிறுத்தங்களிலும் ஈடுபடுகின்றனர்.

இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 62 மீன்பிடிப் படகுகள், இதுவரை விடுவிக்கப்படாதது குறித்து, கடந்த 29 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்திய - இலங்கை மீனவர் கூட்டுக்குழுக் கூட்டத்தில், தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறைச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சத்தீவு பகுதியை மீட்பது மூலமாகவும், பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்களுக்குரிய பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பெற்றுத் தருவதன் வாயிலாகவும், தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையே நீண்டகாலமாக இருந்துவரும் மீன்பிடிப்பது தொடர்பான பிரச்னைக்குத் தீர்வுகாண, பொருத்தமானதொரு வழிமுறைகளை பிரதமர் தலைமையிலான மத்திய அரசு உருவாக்கும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படும் சம்பவங்கள், தொடர்ந்து அதிகரித்து வருவது, தமது தலைமையிலான அரசுக்கு மிகவும் கவலையளிக்கிறது. நீண்ட நாட்களாக உள்ள இப்பிரச்னைக்கு, உயர்மட்ட அளவில் தலையிட்டு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும்.

இலங்கை அரசின் உயர்மட்ட அளவில் இப்பிரச்னையை உடனடியாகக் கொண்டு சென்று, இலங்கைக் கடற்படையினரால் கடந்த 2 தினங்களில் பிடித்துச் செல்லப்பட்ட 15 மீனவர்களையும், மொத்தம் 63 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x