Published : 31 Aug 2014 12:02 PM
Last Updated : 31 Aug 2014 12:02 PM

கட்டுக்கோப்பாக செயல்படும் விதத்தை ஜெயலலிதாவிடம் இருந்துதான் ராணுவம் கற்றது: அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் சுவாரஸ்ய பேச்சு

மாநகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாநகர செயலர் ராஜா தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் பேசிய மாநகர செயலாளர் மனோகரன், “2011-ம் ஆண்டிலிருந்து அடுத்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல், கூட்டுறவு சங்கத் தேர்தல், மக்களவைத் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அமோக வெற்றியை தொடர்ந்து குவித்த மாவட்டம் திருச்சி. தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத விஷயங்களையும் நிறைவேற்றி திருச்சியில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தியவர் தமிழக முதல்வர்” என்றார்.

அதிமுக இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை மாநில செயலர் குமார் எம்.பி பேசும்போது,

“எம்.ஜி.ஆர் இருந்தபோது கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 லட்சம். இப்போது 1.5 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். முதல்வரின் தலைமையில் கட்சி மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. ஒரு கட்சியை ராணுவம்போல கட்டுக்கோப்பாக நடத்தவேண்டும் என சொல்வார்கள். இந்திய ராணுவமே நமது கட்சித் தலைவியைப் பார்த்துதான் கட்டுக்கோப்பு என்பதைக் கற்றுக்கொண்டது” என்றார்.

எம்.ஜி.ஆர் இளைஞரணி மாநிலை இணை செயலாளர் முகில் பேசியபோது, “இளைஞரணி செயலாளரான அலெக்ஸாண்டர் 20 ஆண்டுகளுக்கும் முன்பு கட்சியில் ஒரு மிகச்சாதாரண தொண்டர்.

படிப்படியாக வளர்ந்து இப்போது மாநில செயலாளர் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். தலைமை மீது விசுவாசமும், நம்பிக்கையும் வைத்து கட்சிக்காக கடுமையாக உழைத்தவர் என்பதால் அவரை இனம்கண்டு இந்த பொறுப்பை முதல்வர் வழங்கியுள்ளார். அவரைப்போல நீங்களும் செயல்பட்டால் உங்களையும் பதவி தேடிவரும் என்பதை கட்சித் தலைவி நமக்கு உணர்த்தியுள்ளார்” என்றார்.

இறுதியாக பேசிய எம்.ஜி.ஆர் இளைஞரணி மாநில செயலாளரான அலெக்சாண்டர், தமிழக முதல்வரின் 3 ஆண்டு சாதனைதான் மக்களவைத் தேர்தலில் நாம் பெரும் வெற்றியைக் குவிக்கக் காரணம்.

ஏழரை கோடி மக்களையும் தனது சொந்த பிள்ளைகளைப்போல நினைத்து செயல்பட்டு வருவதாலும் கல்வித் துறை, தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து புரட்சிகளை செய்து வரும் முதல்வரின் சாதனைகளை நாம் அனைவரும் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். கிராமம், நகரம் என அனைத்து இடங்களுக்கும் சென்று கல்லூரி மாணவர்களை பெருமளவு இந்த அமைப்பில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்” என்றார்.

இக்கூட்டத்தில் திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ பரஞ்சோதி, கிழக்கு தொகுதி செயலாளர் ராஜேந்திரன், மேற்கு தொகுதி செயலாளர் முஸ்தபா, ஸ்ரீரங்கம் தொகுதி செயலாளர் கோவிந்தன், முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, கோட்டத் தலைவர்கள், பகுதி செயலாளர்கள், மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x