Published : 12 Aug 2014 10:00 AM
Last Updated : 12 Aug 2014 10:00 AM

வழிபாட்டு நிகழ்ச்சிகளால் பொதுமக்களுக்கு இடையூறு கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

பொது இடங்களில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்ச்சிகளால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்று உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின்போது பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படுவதாகவும், இதனால் பொதுப்பாதைகள் மறைக்கப் படுவதால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும் கூறி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உயர் நீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஆகியோர் வழக்கினை முடித்துவைத்து திங்கள்கிழமை உத்தரவிட்டனர்.

உத்தரவில் நீதிபதிகள் கூறியிருப் பதாவது: போக்குவரத்து சிக்னல் உள்ள இடங்களிலோ, சாலைகள் சந்திக்கும் இடங்களிலோ விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி தரப்படுவதில்லை என்றும், இடத்தை நேரடியாக ஆய்வு செய்த பிறகு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் காவல் துறைத் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

பொது இடங்களில் நடைபெறும் இதுபோன்ற வழிபாட்டு நிகழ்ச்சி களால் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள், பாதைகள் மறைக்கப்படுவது போன்ற இடையூறுகள் ஏற்பட்டு அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது. அதற்கேற்ற வகையில் பொது இடங்களில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்ச்சிகளை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் முறைப்படுத்திட வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x