Published : 15 Aug 2014 08:53 AM
Last Updated : 15 Aug 2014 08:53 AM

வன்முறை தவிர்ப்போம், வறுமை ஒழிப்போம்: டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

68 சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, நாடு வளர்ச்சிப் பாதையில் புதிய உச்சத்தை எட்டும் என தான் நம்புவதாக கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி முதலில், டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் சரியாக காலை 7.30 மணியளவில் அவர் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் முதல் சுதந்திர தின உரை மிக நீண்ட உரையாக அமைந்தது. ஒரு மணி நேரம் ஐந்து நிமிடத்திற்கு அவரது உரை நீடித்ததது. பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், நாட்டு மக்களுக்கு அறிவுரை என பல அம்சங்கள் மோடி உரையில் இடம்பெற்றிருந்தன. பிரதமர் மோடி, சுதந்திர தின உரையை எழுதிவைத்து படிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

மோடி பேசியதாவது:

நான் உங்கள் முன் பிரதம மந்திரியாக நிற்கவில்லை, பிரதம சேவகனாக நிற்கிறேன். இந்திய சுதந்திரத்திற்காக பல தலைமுறையினர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். இளைஞர்கள் பலர் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இந்த வேளையில் எனது மரியாதையை உரித்தாக்குகிறேன். சுதந்திர தின கொண்டாட்டம் நம் தேசிய உணர்வை மேலும் அதிகரிக்கிறது. இந்த உணர்வுடன் நாம் நமது நாட்டை அடுத்தடுத்த கட்டத்திற்கு உயர்த்த வேண்டும். அரசாங்கம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு மட்டுமல்ல. அது கருத்து ஒற்றுமையால் விளைந்த அமைப்பு.

இந்திய தேசம் தலைவர்களோ இல்லை ஆட்சியாளர்களோ உருவாக்கியது அல்ல. ஏன் அரசாங்கம் உருவாக்கியதும் இல்லை. இந்த தேசத்தை இவ்வளவு நேர்த்தியாக உருவாக்கியது விவசாயிகளும், தொழிலாளர்களும், பெண்களும், இளைஞர்களும், தீர்க்கதரிசிகளும், விஞ்ஞானிகளுமே ஆவர். இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களித்த முந்தைய அரசுகளுக்கும், பிரதமர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில், நாம் அனைவரும் ஒன்றுபட்டு, ஒன்றாக சிந்தித்து தேசத்தை முன்னெடுத்துச் செல்ல உறுதி மேற்கொள்வோம். மத்திய அரசு அது வகுத்த கொள்கைகளை மட்டுமே வைத்துக் கொண்டு தனியாக செயல்பட விரும்பவில்லை. பொதுவான கருத்தொற்றுமையின் அடிப்படையில் தேசத்தை வழிநடத்தவே விரும்புகிறது. எதிர்கட்சிகளுடன் இணைந்து செயல்படவே இந்த அரசாங்கம் விரும்புகிறது. நான் டெல்லிக்கு புதியவன். ஆனால், இங்கு வந்த பிறகு எனது பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.

ஒரு அரசாங்கத்திற்குள் பல்வேறு அரசுகள் பிரிந்து கிடக்கின்றன. ஒரு அரசு அமைப்பும் மற்றொரு அரசு அமைப்பும் மோதல் போக்கை கடைபிடிக்கின்றன. இது வேதனை அளிக்கிறது. இப்படி இருந்தால் நாம் எப்படி நம் தேசத்தை ஏற்றம் பெற செய்ய முடியும். புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் அரசு அலுவலர்கள் நேரத்திற்கு பணிக்கு வருவதாக செய்தி வெளியானது. அந்த செய்தி எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. அதிகாரிகள் தங்கள் கடமையை சரியாக செய்வதே அரிய செய்தியாகிறது என்பதை நினைத்த போது வேதனையாக இருந்தது. நான் டெல்லிக்கு வெளியில் இருந்தே வந்திருக்கிறேன். ஆனால் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் ஏராளமான திறன் கொட்டிக் கிடப்பதை உணர்கிறேன். அவற்றை ஒன்றுபடுத்தி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த விரும்புகிறேன்.

நம் மூதாதையர்கள் இந்திய திருநாட்டை எப்படி எல்லாம் உருவாக்க வேண்டும் என கணவு கண்டார்களோ அந்த கனவை நனவாக்குவது நமது கடமையல்லவா? எப்போது நாம், நமது என்ற சிந்தனையை விடுத்து தேசத்தை பற்றியும் சிந்திக்க வேண்டும். ஏழ்மையை ஒழிக்க என்ன செய்துள்ளோம் என்பதை இத்தருணத்தில் ஆழ்ந்து சிந்திப்போம்.

ஜனநாயகம் சக்தி வாய்ந்தது

ஜனநாயகமும், அரசியலமைப்பும் ஏழை மக்களுக்கு கிடைத்துள்ள பரிசு. அது அவர்கள் வாழ்க்கை நிலைமையை உயர்த்தும். இந்த சக்திதான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு இன்று செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. மூவர்ணக் கொடியின் முன் சிரம் தாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மகள்களிடம் கேள்வி கேட்காதீர்கள்; மகன்களை கண்டியுங்கள்:

பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது தொடர்கிறது. இத்தகைய செய்தியை கேட்கும் போது நம் தலை வெட்கிக் குணிகிறது.பாலியல் பலாத்கார குற்றங்கள் நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. சிலர் அது உளவியல் சார்ந்தது என கூறுகின்றன. 10 வயதில் பெண் குழந்தை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை எங்கே செல்கிறாள் என்பதை கண்காணிக்கின்றனர். எப்போது வீடு திரும்புவார்கள் என அவர்களிடமே கேள்வியும் எழுப்புகின்றனர்.

ஆனால், எந்த ஒரு பெற்றோராவது தங்களது ஆண் பிள்ளையிடம் கேள்வி கேட்கிறார்களா? அவர்களிடம் எங்கு செல்கிறீர்கள், எதற்கு செல்கிறீர்கள், யார் உங்கள் நண்பர்கள் இப்படி எந்த கேள்வியுமே ஆண் பிள்ளைகளிடம் பெற்றோர் கேட்பதில்லை.

ஒவ்வொரு பெற்றோரும் பெண் பிள்ளைகளிடம் எப்படி கேள்வி கேட்கிறார்களோ, அவர்களை எப்படி கண்காணிக்கின்றனரோ அதே போல் ஆண் பிள்ளைகளிடமும் கேள்வி கேட்க வேண்டும், அவர்களை கண்காணிக்க வேண்டும். இத்தகைய குற்றங்களை தடுக்கவும், நடந்த குற்றங்களுக்கு தண்டனை வழங்கவும் சட்டம் தனது கடமையை செய்யும். ஆனாலும் பெற்றோர்களும் பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.

வன்முறை தவிர்ப்போம்:

வன்முறையால் நாம் இதுவரை கடந்த காலத்தில் எதையும் சாதித்ததில்லை. திரும்பிப் பார்த்தால் வன்முறையால் நாம் நிறைய இழந்திருக்கிறோம். வன்முறையை விட்டொழிக்க வேண்டிய நேரம் இது.

வன்முறைகள், மதக்கலவரங்கள் வேதனை அளிக்கின்றன. ஜாதியும், மதமும் இன்னும் எத்தனை காலத்திற்கு அரசியலில் ஆதிக்கம் செலுத்தும். இவற்றால் யாருக்கு என்ன லாபம். ஜாதி, மத மோதல்களால் சிந்தும் ரத்தம் பாரத மாதாவின் உடலில் ஆழமான காயத்தை ஏற்படுத்தும்.

ஜாதிக் கலவரமாக இருக்கட்டும், மதக்கலவரமாக இருக்கட்டும் இரண்டுமே தேசத்தின் வளர்ச்சியை தடுத்துவிடும். எனவே ஜாதி, மத மோதல்களில் ஈடுவதில்லை என உறுதியேற்போம்.

அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதை நாம் ஏற்கெனவே உணர்ந்திருக்கிறோம். அதே வழியில் தொடர்து செல்வோம். துப்பாக்கியால் பூமியை ரத்தச் சிவப்பாக்கலாம். ஆனால், கைகளில் ஏர் ஏந்தினால் பூமியை பசுமையாக மாற்ற முடியும்.

பெண்சிசுக் கொலை கூடாது:

நாட்டில் பெண்சிசுக் கொலை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கு யார் காரணம். கடவுளா காரணம். இல்லை சமூகம் தான் இதற்கு பொறுப்பு. தற்போது இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற அளவில் ஆண் - பெண் விகித்தாச்சாரம் இருக்கிறது. இது கவலைக்குரியது.

மருத்துவர்களே, பெண் சிசுக்கொலைக்கு உடன்பட வேண்டாம் என உங்களை கேட்டுக் கொள்கிறேன். பெற்றோர்களே, பெண் சிசுவை கொல்ல வேண்டும் என எண்ணாதீர்கள்.

நான் நிறைய குடும்பங்களை பார்த்திருக்கிறேன். ஐந்து ஆண் மகன் சேர்ந்து ஒரு குடும்பத்திற்கு என்ன நன்மை செய்து விடுவார்களோ அதைவிட அதிகமாக ஒரே ஒரு பெண் பிள்ளை செய்து காட்டியதை நேரடியாக பார்த்திருக்கிறேன்.

நமது விளையாட்டு வீரர்கள் நம் தேசத்திற்கு நிறைய பெருமை சேர்த்துள்ளனர். அவர்களில் நிறைய பெண்களும் இருக்கின்றனர். அண்மையில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கூட பதக்கம் வென்ற இந்தியர்கள் 64 பேரில் 29 பேர் பெண் பிள்ளைகள். பெண் குழந்தைகளை பெருமையாக கருதுவோம்.

இந்தியாவை இணைப்பது ஐ.டி. துறையே...

இந்திய தேசத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல நல்லாட்சியால் மட்டுமே முடியும். அதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். ஒரு காலத்தில் இந்தியா பாம்பு வித்தைக்காகவும், சித்து வேலைகளுக்காகவும் அடையாளம் காணப்பட்ட நிலைமையும் இருந்தது.

ஆனால், அந்தக்காலம் மலை ஏறிவிட்டது. இப்போது இந்தியா டிஜிட்டல் இந்தியாவாக உருவெடுத்துள்ளது. இது ஐ.டி துறை இளைஞர்களால் சாத்தியமாயிற்று. இந்தியாவை ரயில்வே இணைக்கிறது என்று கூறுவது உண்டு. ஆனால் நான் சொல்கிறேன், இன்று இந்திய தேசத்தை இணைப்பது ஐ.டி துறையாகவே உள்ளது என்று. இ-கவர்னன்ஸ் மூலம் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க முடியும்.

ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்கு:

நாட்டில் உள்ள மிக மிக ஏழை மக்களும் வங்கி கணக்கு சேவை வழங்கப்பட வேண்டும் என்பதற்க்காக பிரதம மந்திரி ஜன் தான் திட்டம் (PM Jan Dhan Yojana) செயல்படுத்தப்படும். இதன் மூலம் பயணாளிகளுக்கு ஒரு டெபிட் கார்டும், ரூ.1 லட்சத்திற்கான காப்பீடும் வழங்கப்படும். இதன் மூலம் ஏழை மக்கள் எதிர்பாராத இடர்பாடுகள் எழும்போதும் ஆறுதல் பெறலாம். நம் நாட்டில் மிக மிக சாதாரண மக்களிடன் கூட செல்போன் இருக்கிறது.

ஆனால், பலரிடம் வங்கிக் கணக்கு இல்லை. அதனை கருத்தில் கொண்டே இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிகள் ஏழை மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும். அவர்களிடம் இருந்தே எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் ஆரம்பிக்க வேண்டும்.

இளைஞர்களே நம் பலம்:

நம் நாட்டின் பலம், நம் தேசத்தின் இளைஞர்கள்தான். நம் தேசம் இளமை துடிப்பு மிகுந்த தேசம். இந்த தேசமும், உலகமும் திறன் வாய்ந்த இளைஞர்களையே தேடுகிறது. இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இருப்பதை விட வேலையை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். இளைஞர்கள் திறன் இந்தியாவை வல்லரசாக உருவாக்கட்டும்.

உற்பத்திக்கு முக்கியத்துவம்:

உலகம் மாறிவிட்டது. மாறிவரும் காலச்சூழலில் தனியாக செயல்படுவது முடியாத காரியம். உலகத்தோடு இணைந்தே முன்னேற வேண்டும். உற்பத்தித் துறையில் முன்னேற்றம் அவசியம். இந்த வேளையில் உலக நாடுகளுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். வெளிநாடுகள் இந்தியா வந்து பொருட்களை உற்பத்தி செய்யப்பட்டும். ஆனால் அவற்றை பிறநாடுகளில் விற்றுக் கொள்ளட்டும்.

உலகம் முழுவதும் உலா வரும் பொருட்கள் 'மேட் இன் இந்தியா' ( இது இந்திய தயாரிப்பு) என்ற அடையாளத்துடன் உலா வரட்டும். அதுவே நம் கனவு. இந்தியா பொருட்களை இறக்குமதி செய்யும் நாடாக இல்லாமல் ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கட்டும். நம் தயாரிப்புகள் குறைபாடுகள் அற்றதாக இருக்க வேண்டும். நம் தயாரிப்புகள் சூழல் நட்பு சார்ந்ததாக அமைய வேண்டும்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும்:

சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும். சுற்றுலா துறை ஏழை மக்களுக்கு வாய்ப்புகளை அளிக்கும். இதன் மூலம் ஆட்டோக்காரர்கள், சுண்டல் விற்பவர்கள், பகோடா வியாபாரிகள் ஏன் தேநீர் விற்பவர்கள் என அனைவருக்குமே வாழ்வாதாரம் கிடைக்கும். நான் தேநீர் விற்பவர் என கூறும்போது என்னை நான் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடிகிறது ( பொதுமக்கள் அனைவரும் கைகள் தட்டி ஆரவாரம் செய்கின்றனர்)

'சுத்தமான இந்தியா'

நம் தேசத்தை நாம் சுத்தமாக வைக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் உறுதியேற்போம். டெல்லி செங்கோட்டையில் நின்று கொண்டு சுத்தம் பற்றியும் கழிவறை பற்றியும் பேசுகிறாரே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது அவசியமானது. நான் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன். ஏழை மக்களும் மரியாதையுடன் வாழ வேண்டும் என விரும்புகிறேன். 'சுத்தமான இந்தியா'-வை உருவாக்க ஒரு இயக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் தேசத்தை அசுத்தமாக்குவதில்லை என உறுதி ஏற்றுக் கொண்டால் வேறு எந்த ஒரு அந்நிய சக்தியாலும் நம் நாட்டை அசுத்தம் செய்ய முடியாது.

நாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். ஆனால் இன்றளவும் நம் அன்னையரும், சகோதரிகளும் பொது இடங்களை கழிப்பறையாக பயன்படுத்தும் அவல நிலை இருக்கிறது. இருள் சூழும் நேரம் வரை அவர்கள் காத்திருக்கின்றனர். இதனால் அவர்கள் உடல் எவ்வளவு வேதனையடையும். எத்தனை நோய்கள் அவர்களை தாக்கும். பெண்களின் கண்ணியத்தை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை அல்லவா? அதைகூட நம்மால் செய்ய முடியாதா என்ன?

'ஒரு பள்ளிக்கு ஒரு கழிவறை'

பள்ளிகளில், பெண் குழந்தைகளுக்கு தனியாக கழிவறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் கழிவறைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு நாம் இங்கு ஒன்று கூடும்போது அனைத்து பள்ளிகளிலும் கழிவறை வசதியுடன் இருக்கின்றன என்பதை பெருமையோடு அறிவிக்க வேண்டும்.

சுதந்திர தின விழாவன்று பொதுவாக மிகப்பெரிய அறிவிப்புகள் வெளியிடப்படும் சவால் நிறைந்த திட்டங்கள் அறிவிக்கப்படும். அவ்வாறு செய்வது அவசியம்கூட. ஆனால், அத்தகைய அறிவிப்புகள், வாக்குறுதிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படாதபோது ஏமாற்றம் ஏற்படும்.

எனவே பெரிய அறிவிப்புகளைவிட ஏழைகள் சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதே அரசின் கடமை. அதனால், செங்கோட்டையில் நின்று கொண்டு கழிவறை பற்றி பேசுவதில் எனக்கு எந்த நெருடலும் இல்லை.

கிராமப்புற மேம்பாட்டு திட்டம்:

தேசத்தை அழகாக கட்டமைக்க வேண்டுமானால் அதற்கு கிராமங்களை முதலில் சீரமைக்க வேண்டும். இதற்கு Sansad Adarsh Gram Yojana என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 11-ல் ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்த நாள் விழாவின் போது திட்ட முன்வடிவு அமைச்சர்களுக்கு வழங்கப்படும்.

திட்டக் கமிஷனுக்கு பிரியாவிடை:

கடந்த 64 ஆண்டுகளாக வளர்ச்சி நலத்திட்டங்களை வகுத்துவந்த திட்டக் கமிஷனுக்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. மாறிவரும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்பவும், இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும், புதிய திட்ட அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.

திட்டக்கமிஷன் பழைய நடைமுறைகளுக்கு சாதகமாக இருந்தது. ஆனால், தற்போது உள் நாட்டு நிலவரங்கள் மாறிவிட்டன. சர்வதேச பொருளாதாரச் சூழலும் மாறிவிட்டது. எனவே திட்ட கமிஷனுக்கு பதிலாக புதியதோர் அமைப்பு உருவாக்கப்படும். சில நேரங்களில் நாம் குடியிருக்கும் வீட்டை செப்பணிடுவது அவசியமாகும். அதற்கு அதிக செலவுகூட ஆகலாம். ஆனால் அப்படியும் நமக்கு மனநிறைவு ஏற்படாவிட்டால் புதிதாக ஒரு வீடு கட்டிக் கொள்வதே நல்ல யோசனையாக இருக்கும்.

புத்தாக்க சிந்தனைகள் செறிந்த ஒரு அமைப்பாக இளைஞர்களின் திறனை முழுமையாக பயன்படுத்தக்கூடிய ஒரு அமைப்பாக, திட்டக்கமிஷனுக்கு பதிலாக உருவாக்கப்படும் அமைப்பு திகழும். அரசு, தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம் கூட்டாட்சியில் அரசு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.

வறுமைக்கு எதிராக போர் தொடுப்போம். அதை வென்றெடுப்போம். ஜெய் ஹிந்த்" இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டு இல்லை

பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிய போது அவர் குண்டு துளைக்காத கூண்டுக்குள் நிற்கவில்லை. வழக்கமாக இதுவரை பிரதமர்கள் குண்டு துளைக்காத கூண்டுக்கள் நின்றுதான் கொடியேற்றி உரையாற்றுவார்கள் ஆனால் இம்முறை அப்படி ஒரு ஏற்பாடு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர முதல் முறையாக சுதந்திர தின கொண்டாட்டத்தை நேரில் காண பொதுமக்கள் 10,000 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x