Published : 18 Jul 2014 10:00 AM
Last Updated : 18 Jul 2014 10:00 AM

ஓகே ஆர்குட், குட் பை!

இன்று ஃபேஸ்புக் தன் ராஜாங்கத்தை நடத்திய இடத்தில் பத்தாண்டுகளுக்கு முன்னர் உற்சாகமாக ஆட்சி நடத்திய சோஷியல் மீடியா ஆர்குட். இந்தியாவில் முதன்முதலில் கொடிகட்டிப் பறந்த சோஷியல் மீடியா என ஆர்குட்டைச் சொல்லலாம். வெறுமனே மெயில், சாட்டிங் என்று பொழுதைப் போக்கிக்கொண்டிருந்த இளைஞர்களுக்கு ஒரு மாய உலகின் கதவுகளைத் திறந்துவைத்தது ஆர்குட்தான்.

துருக்கி நாட்டைச் சேர்ந்த ஆர்குட் பயுக்கோக்டென்தான் ஆர்குட்டை உருவாக்கியவர். அவர் கூகுளில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர். அவரது பெயர்தான் அவர் உருவாக்கிய ஆர்குட் சோஸியல் நெட் ஒர்க்கிங் வெப்சைட்டுக்கு வைக்கப்பட்டது. ஆர்குட்டில் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் ஆளுக்கொரு அக்கவுண்ட்டை ஏற்படுத்திக்கொண்டு அந்த மாய உலகில் றெக்கை கட்டிப் பறந்தனர்.

2008-ல் இந்தியாவிலும் பிரேசிலிலும் அதிகம் பேர் பார்த்த சோஷியல் மீடியா ஆர்குட். பிரேசிலில் இண்டர்நெட்டைப் பயன்படுத்தியவர்களில் மூன்றுக்கு இரண்டு பேர் ஆர்குட்டில் அக்கவுண்ட் வைத்துள்ளார்கள். பிரேசிலின் நகரங்களில் மட்டுமல்ல மிகச் சிறிய கிராமங்களில்கூட ஆர்குட்டின் ஆதிக்கம்தான். இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் சுதந்திர தினத்தை ஆர்குட் கொண்டாடியது.

தேச விரோத சக்திகளுக்கு உதவுகிறது என்பதால் ஈரானிலும் ஐக்கிய அரபு நாடுகளிலும் சவூதி அரேபியாவிலும் ஆர்குட்டைத் தடை செய்திருந்தார்கள். ஆனால், இன்னும்கூட பிரேசிலில் ஆர்குட்டை அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள். 2014 மே மாதத்தில்கூட ஆர்குட்டில் இந்தியர்கள் 30 லட்சம் பேரின் அக்கவுண்ட் ஆக்டிவாகத்தான் இருந்தது. ஆர்குட்டின் சக்சஸ் ஸ்டோரியைக் கேட்கக் கேட்க மலைப்பாக இருக்கும்.

ஆர்குட்டில் ஒவ்வொரு புதிய அக்கவுண்ட் கிரியேட் ஆனவுடனே பயுக்கோக்டென்னுக்கு 12 அமெரிக்க டாலர் கிடைக்கிறது. மல்டிலெவல் மார்க்கெட்டிங்கில் பணம் கொட்டுவது போல் அவருக்குப் பணம் குவிகிறது. இப்படியெல்லாம் ஆர்குட் பற்றிச் செய்திகள் பரவின.

பயுக்கோக்டென்னின் ஸ்கிராப் புக்கைப் பராமரிக்க 13 உதவியாளர்களும் ஃபிரண்ட்ஸ் லிஸ்டை பராமரிக்க 8 பேரும் இருந்தார்கள். 2009-ன் இறுதியில் உலகத்தின் மிகப் பெரிய பணக்காரராக அவர் இருப்பார் என்றெல்லாம் கூறப்பட்டன. இந்தத் தகவல்கள் எல்லாமே வெப்சைட்டுகளில் உலவுகின்றன. இவை உண்மையல்ல என்னும் தகவலையும் பார்க்க முடிகிறது. ஆனால், இளைஞர்களின் ஃபேவரைட்டாக ஆர்குட் இருந்தது.

ஆனால், ஃபேஸ்புக் வந்த உடன் இளைஞர்கள் மிக எளிதாக ஃபேஸ்புக்குக்கு மாறிவிட்டார்கள். ஆர்குட்டில் யாராவது நம் புரொஃபைலை பார்த்தால் அது பற்றிய நோட்டீஸ் நமக்கு வந்துவிடும். ஆனால், ஃபேஸ்புக்கில் அப்படியல்ல. யாருடைய புரொஃபைலையும் யார் வேண்டுமானாலும் மறைமுகமாக வேடிக்கை பார்க்கலாம். ஃபேஸ்புக்கின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு முன்னால் ஆர்குட்டால் ஈடுகொடுக்க முடியவில்லை. கூகுள் நிறுவனமும் கூகுள் பிளஸைத்தான் ஃபேஸ்புக்கு மாற்றாகக் கருதியது.

எப்படியோ ஆர்குட் கதை முடிந்தது. 2014 செப்டம்பர் 30 அன்று ஆர்குட்டின் ஷட்டர் குளோஸ் ஆகிவிடும். அக்கவுண்ட் வைத்திருந்தவர்கள் தங்கள் போட்டோகளையும் தகவல்களையும் டவுன்லோடு செய்துகொள்ள கூகுள் வசதி செய்துகொடுத்துள்ளது. ஆர்குட் தன் கடையை மூடியதால் சோஷியல் மீடியா எக்ஸ்பர்ட்ஸ் யாரும் அதிர்ச்சியடையவில்லை. ஏனெனில், கூகுள் ப்ளஸ் தொடங்கிய பின்னரும் ஏன் ஆர்குட் தொடர்கிறது என்றுதான் அவர்கள் நினைத்து வந்தார்கள். ஆர்குட்டுக்கு சந்தோஷமாக குட் பை சொல்லுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x