Last Updated : 30 Jul, 2022 06:48 PM

 

Published : 30 Jul 2022 06:48 PM
Last Updated : 30 Jul 2022 06:48 PM

முதல் பார்வை | வட்டம் - வசனத் தெறிப்புகளுடன் த்ரில் அனுபவம் தரும் ‘முயற்சி’

வர்க்க அரசியல், ஆணாதிக்கப் போக்கு என சமூக அக்கறைக் கருத்தாக்கங்களுடன் த்ரில் சினிமா அனுபவத்தைத் தர முற்பட்ட படம்தான் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள ‘வட்டம்’.

4 பேர் கொண்ட அமெர்ச்சூர் கும்பல் ஒரு மாற்றுத் திறன் சிறுவனை கடத்திவிட்டு அவரது தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டுகிறது. இதற்கு அப்படியே மற்றொருபுறம், தன் மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாட ஆவலுடன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டப்படுகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் பொதுவான புள்ளியான பணத்ததைச் சுற்றி வரையப்படும் வட்டத்தில் ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு 'வட்டம்'.

ஸ்ரீநிவாஸ் கவிநாயகத்தின் எழுத்தை 'மதுபானக்கடை' படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்ட கமலக்ககண்ணன் படமாக்கியிருக்கிறார். ஓர் இரவில் கோயம்புத்தூரில் நடக்கும் இருவேறு சம்பவங்கள் இறுதியில் ஒரு புள்ளியில் இணைக்கப்பட்டிருக்கிறது. சின்ன பட்ஜெட்டில் நிறைவான சினிமா தரும் முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால், நோக்கம் மட்டுமே போதுமானதா என்ற கேள்வி எழாமல் இல்லை.

வர்க்கம், அதிகாரம் இந்த இரண்டு பிரச்சினைகளையும் இருவேறு கதைகள் மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். கரோனா காலத்தில் எல்லா பணியிடங்களிலிருந்து ஊழியர்கள் தூக்கியடிக்கப்பட்ட நிலையில், ஐடி துறையிலும் நிறைய பேர் வேலையிலிருந்து துரத்தப்பட்டார்கள். கூடவே, ஒரு தொழிலாளியின் இறப்பை கார்ப்பரேட் முதலாளித்துவம் அணுகும் விதம் குறித்த பார்வையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'அதிகாரம், பணம் இந்த இரண்டும் தான் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பை கொடுக்கும்' என படத்தில் ஒரு வசனம் வருகிறது. அது எப்படி என நாம் சிந்திக்கும் நேரத்தில் அதற்கான நியாயத்தையும் படத்தில் பதிவு செய்ய முனைந்திருக்கிறார்கள். அதையொட்டி 'இப்போ கூட உன்கிட்ட இருந்து என்ன காப்பாத்துனது கௌதம் இல்ல. பணம் தான்' என ஆன்ட்ரியா பேசும் வசனம் மிகவும் ஆழமானது. உண்மையில் ஓர் ஆண் தரமுடியாத பாதுகாப்பை பணம் கொடுத்துவிடுகிறது என்ற வாதம் இங்கே முக்கிய விவாதத்துக்குரியது.

பெண்ணுக்கான பொருளாதார சுதந்திரத்திற்கான தேவையை விளக்கும் இடங்கள் கவனிக்க வைக்கின்றன. அதேபோல அதிகாரமோ, பணமோ பிடுங்கப்பட்ட நிலையில், ஒரு பெண் வேறு வழியின்றி ஆணை நம்பியே இருக்க வேண்டிய சூழலும் இன்னமும் மாறாமல் இருப்பதை படம் பதிவு செய்கிறது. அந்த வகையில் படம் பேசும் கருத்தியல் ரீதியான பல நுணுக்கமான விஷயங்கள் வரவேற்க வேண்டியவை.

ஆனால், அதை திரைக்கதையாக்கிய விதத்தில் இன்னும் கூடுதல் கவனம் கொண்டிருக்கலாம் என தோன்றுகிறது. படம் தொடங்கியதிலிருந்து நடக்கும் சம்பவங்கள் நம்மை குழப்பத்திலும், ஒரு கட்டத்தில் அதே நீடிப்பதால் அயற்சியையும் தருகின்றன. சிபிராஜின் உத்தரவுகளுக்கு வம்சி கிருஷ்ணா கீழ்படிவது செயற்கைத்தன்மையை உருவாக்கிவிடுகிறது. தவிர, காதல் காட்சிகள், அதற்கான பாடல்களும் கதையொட்டத்திலிருந்து நம்மை விலக்கி விடுகின்றன. ஐடி துறையில் நடக்கும் வேலையிழப்பும், வலிகளையும் வார்த்தைகளைத்தாண்டி காட்சிகள் மூலம் கடத்தியிருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படம் இன்னும் கூடுதலாக கனெக்ட் ஆகியிருக்கும்.

சிபிராஜ் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், சில இடங்களில் சத்யராஜின் உடல்மொழியும், குரலும் அவரிடமிருந்து விலகிச்செல்ல மறுப்பதை உணர முடிகிறது. ஆன்ட்ரியா தெறிக்கும் வசனங்களுடன் அழுத்தமான நடிப்பையும், அதுல்யா ரவி சில காட்சிகள் வந்தாலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பயம், பதற்றம், மனமாற்றம் என அத்தனையையும் காட்சிகளுக்கு தக்கவாறு கடத்துவதில் வம்சி கிருஷ்ணாவின் நடிப்பு கவனம் பெறுகிறது. பிரசன்னா பாலசந்திரன் கொங்குவட்டார மொழியிலும், நடிப்பிலும் மிரட்டுகிறார். தவிர பாலசரவணன், ரேணுகா, உள்ளிட்ட பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளனர்.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவில் இரவுக்காட்சிகள் கோவையை இன்னும் அழகாக்கி கொடுக்கின்றன. நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசையில் 'அற்ப மானிடப் பதரே' பாடல் கவனம் பெறுகிறது. எடிட்டர் ரூபன் காதல் காட்சிகளில் கருணை காட்டாமல் தூக்கியிருக்கலாம்.

மொத்தத்தில், படம் ஆணாதிக்க, முதலாளித்துவ சிந்தனை வட்டத்தில் அடைப்பட்டு கிடப்பவர்கள், அந்த வட்டத்திலிருந்து வெளியேற கோரும் இந்த வட்டம் சொல்லவரும் கருத்துக்காக பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x